பட மூலாதாரம், Puneet Barnala
“காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்.”
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள்.
மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரின் அங்கன்வாடி வளாகம், பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளானது.
குழந்தைகளின் சிரிப்பும் குறும்பும் வழக்கமாகக் கேட்கும் இடத்தில், திடீரென்று அலறல் சத்தமும் கூச்சலும் எழும்புகின்றன.
அதே அங்கன்வாடி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி மதியம் 2 மணி முதல் இயங்குகிறது, அங்கன்வாடியைச் சுற்றி கூடியிருந்த குழந்தைகளை தேனீக்கள் கூட்டம் தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது வளாகத்தில் சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்தனர்.
குழந்தைகளைக் காப்பாற்ற ஓடிய காஞ்சன் பாய்
பட மூலாதாரம், Aakash Srivastava
“தேனீக்கள் நேராக குழந்தைகளை நோக்கி நகர்ந்தன, அங்கே முழுமையான குழப்பம் நிலவியது” என்று பள்ளியின் ஆசிரியரான குணசாகர் ஜெயின் கூறுகிறார்.
அதே நேரத்தில், அங்கு இருந்த 55 வயதுடைய அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், நிலைமையை உணர்ந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஓடினார்.
குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்வதில் காஞ்சன் பாய் நேரத்தை வீணாக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
முதலில் அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் போர்வைகளால் குழந்தைகளை மூடினார், பின்னர் தனது புடவையால் அவர்களைக் காப்பாற்ற முயன்றார்.
அவரது துணிச்சலான செயல் அவரது சொந்த பேரன் உட்பட சுமார் 25 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது, ஆனால் தேனீக்களின் தாக்குதலில் அவர் மோசமாக காயமடைந்திருந்தார், மருத்துவமனையை அடைந்ததும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
“ஜவாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரன்பூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் திங்கள்கிழமை பிற்பகல் தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த காஞ்சன் பாய், குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். காஞ்சன் பாய் தேனீக்களால் காயமடைந்தார், இதனால் அவர் இறந்தார்” என்று நீமுச் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
‘தாயை நினைத்து பெருமைப்படுகிறேன்’
பட மூலாதாரம், Aakash Srivastava
காஞ்சன்பாய்க்கு அவரது மகன் ரவி மேக்வால் மற்றும் அவரது கணவர் ஷிவ்லால் ஆகியோர் உள்ளனர். மகன் திருமணமானவர், காஞ்சன்பாய்க்கு ஒரு பேரன் உள்ளார், அவர் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.
காஞ்சன் பாயின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கிறார். காஞ்சன்பாய் உயிர்நீத்ததால் முழு குடும்பமும் துக்கத்தில் இருந்தபோதும் அவரது மகன் ரவி மேக்வால் தனது தாயைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார்.
“நான் அப்போது கிராமத்தில் இல்லை, ஆனால் என் அம்மா டஜன் கணக்கான குழந்தைகளின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். என் அம்மா மிகவும் அன்பான குணம் கொண்டவர். அவர் அனைவரையும் நேசித்தார், ஆனால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். குழந்தைகள் கடவுளின் வடிவம் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் அவர்களை தனது சொந்த குழந்தைகளாக அல்ல, கடவுளாக நடத்தினார்” என்று ரவி பிபிசியிடம் கூறினார்.
காஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா தி சுய உதவிக் குழுவின் தலைவராக இருந்தார் மற்றும் அங்கன்வாடி பணிகளை நிர்வகித்தார். அவரது அன்றாட பொறுப்புகளில் சமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும்.

தனது தாயார் காப்பாற்றிய குழந்தைகளில் தனது சொந்த குழந்தையும் இருந்ததாக ரவி கூறுகிறார். “அவரது உடலில் இருந்து ஐந்து அல்லது ஆறு தேனீக்களின் கொட்டுதல்களும் அகற்றப்பட்டன.” தனது தாயாரை நினைவுகூர்ந்து ரவி கூறுகையில், “இந்த வேலையை அவர் ஒருபோதும் வேலையாகக் கருதியதில்லை. இது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கம். அவர் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை, விடுப்பு எடுத்ததும் இல்லை. மிகுந்த சிரமம் காரணமாக அவரால் செல்ல முடியாவிட்டாலும், முதலில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்வார்.” என்றார்.
அந்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல சுரேஷ் சந்திர மேக்வால் வந்திருந்தார், அவருடைய மகன் அதே அங்கன்வாடியில் படிக்கிறார்.
“நான் வெளியே எட்டிப் பார்த்தபோது, மேடம் அலறிக் கொண்டிருந்தார், உள்ளே இருந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. நான் கொஞ்சம் அருகில் சென்றபோது, தேனீக்கள் தாக்குதல் இருப்பதை உணர்ந்தேன். காஞ்சன் பாய் குழந்தைகளை பாய்கள், விரிப்புகள் மற்றும் தனது சேலையால் மூடினார். அங்கே ஒரு பெரிய தேனீ கூட்டம் இருந்தது” என்று அவர் கூறுகிறார்.
குழந்தைகளை காப்பாற்ற முயற்சிக்கும்போது காஞ்சன் பாய் ஏராளமான தேனீக்களின் தாக்குதல்களைச் சந்தித்தார். “அன்று அவர் அங்கு இல்லாதிருந்தால், பல குழந்தைகள் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள்” என்று சுரேஷ் கூறுகிறார்.
கிராம மக்கள் என்ன சொன்னார்கள்?
பட மூலாதாரம், Aakash Srivastava
காஞ்சன் பாயின் மைத்துனரான திலீப் மேக்வால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கன்வாடி தேனீக்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறினார்.
அங்கன்வாடியை அடைந்தபோது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக திலீப் கூறினார்.”நான் காஞ்சன் பாய் தரையில் கிடப்பதைப் பார்த்தேன். அவரது உடலில் நிறைய தேனீக்கள் கொட்டியிருந்தன. சில தேனீக்கள் இன்னும் அங்கேயே இருந்தன. காஞ்சன் பாய் மயக்கமடைந்தார், அவர் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது, அவரால் எதுவும் பேச முடியவில்லை.”
சம்பவம் நடந்த இடத்தை நினைவு கூர்ந்த திலீப், “அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், மக்கள் பீதியடைந்தனர். நான் காஞ்சன் பாயை அழைத்துக்கொண்டு ஒரு குழந்தையுடன் வெளியே வந்தேன். அதற்குள் சுரேஷ் சந்திராவும் அங்கு வந்துவிட்டார், அவர் ஆம்புலன்ஸையும் காவல்துறையையும் அழைத்தார்” என்று அவர் கூறினார்.
போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்த பிறகு, காஞ்சன் பாய் அருகிலுள்ள சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Aakash Srivastava
சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளரான சந்தீப் சர்மா பிபிசியிடம் பேசுகையில், “அன்று நான் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இதற்கிடையில், மாலையில், கடுமையான தேனீ தாக்குதலுக்குப் பிறகு ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக PHC யிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது,” என்று கூறினார்.
“அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே இறந்துவிட்டார். தேனீ தாக்குதலால் அவர் அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், இது மரணத்தை விளைவிக்கும்.” என சந்தீப் சர்மா கூறினார்.
அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது ஒரு கடுமையான, திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையாகும், இது ஒரு ஒவ்வாமைக்கு ஆளான சில நிமிடங்களுக்குள் ஏற்படலாம். டாக்டர் சந்தீப்பின் கூற்றுப்படி, தேனீ கொட்டுவது அத்தகைய அதிர்ச்சிக்கு ஒரு நியாயமான காரணமாகும்.
காஞ்சன் பாயின் மரணம் ரன்பூர் கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம மக்கள் அவரை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடிக்குள்ன் இருக்கும் ஒரு நம்பகமான இருப்பாகவும் அவரை நினைவில் கொள்கிறார்கள்.
“காஞ்சன் பாய் அங்கு வசித்தபோது, குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களின் பராமரிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்” என்று ஒரு கிராமவாசி கூறினார்.
திலீப் கூறுகையில், தான் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உணவளிப்பதாகவும், அவர்களுடன் கேலி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காஞ்சன்பாய் குடும்பம்
பட மூலாதாரம், Aakash Srivastava
காஞ்சன் பாய் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது, நிதி நிலைமை ஏற்கனவே கடினமாக இருந்தது. ரவியின் தந்தை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார்.
“வீட்டின் முழுப் பொறுப்பும் என் அம்மாவின் மீது இருந்தது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நான் என் நிலத்தை விற்க வேண்டியிருந்தது. இன்றும் கூட, மருந்துகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை செலவிடுகிறேன்” என்று ரவி கூறினார்.
ரவி கூறுகையில், “வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் குடும்பத்திற்காக அம்மா கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். காலையில், வீட்டுப் பொறுப்புகள், தந்தையைப் பராமரித்தல், பின்னர் பள்ளி மற்றும் இடையில், சுய உதவிக்குழுவில் வேலை செய்தல். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் எல்லாவற்றையும் சமாளித்தார்.”
“தேனீக்களின் தாக்குதல் மிகப்பெரியது. குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது காஞ்சன் பாய் உயிரிழந்தார். குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று கிராம சர்பஞ்ச் லாலாராம் ராவத் கூறுகிறார்.
கிராம சபை அதன் விதிகளின் கீழ் குடும்பத்திற்கு உதவி வழங்கும் என்று அவர் கூறுகிறார். “அரசாங்கம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும், மகனுக்கு வேலைவாய்ப்பைப் பரிசீலிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”
கிராமத்தில் நிலவும் அச்சம்
பட மூலாதாரம், Aakash Srivastava
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமம் முழுவதும் அச்சம் நிலவுகிறது, அங்கன்வாடிக்கு அருகிலுள்ள கை பம்ப் மட்டுமே முழு கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ளது. அதே பகுதியில் ஒரு தேனீக்கூடு இருப்பதால் மக்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள்.
“பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், குழந்தைகள் அங்கன்வாடியில் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் நிலையை மேம்படுத்தவும், குழந்தைகள் அங்கன்வாடியில் உட்கார வேண்டிய நிலையை மாற்றும் வகையில், சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எல்லாம் சரியாக இருந்திருந்தால், என் அம்மா அந்த நேரத்தில் அங்கன்வாடியில் இருந்திருக்க மாட்டார்” என்று ரவி கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு