3
மத்திய கிழக்கில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அங்கிருக்கும் இங்கிலாந்து குடிமக்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்து வர ஓமானிலிருந்து (Oman) முதல் சிறப்பு விமானத்தை இங்கிலாந்து அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தத் தூதரக விமானம், மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று புதன்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 23:00 மணிக்கு (19:00 GMT) புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு (most vulnerable) முன்னுரிமை அளிக்கப்படும்.
இங்கிலாந்து குடிமக்கள், அவர்களின் துணைவியர் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த விமானத்தில் பயணிக்க தகுதியுடையவர்கள். இங்கிலாந்து குடிமக்கள் அல்லாத சார்ந்திருப்பவர்கள் (dependents), முறையான விசா அல்லது ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பதற்கான அனுமதி வைத்திருக்க வேண்டும்.
கடந்த சனிக்கிழமை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்களால் மத்திய கிழக்கில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படும் வரை விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து தற்போது ஓமானில் இருக்கும் இங்கிலாந்து குடிமக்களை உடனடியாக ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியத் தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் எனப் இங்கிலாந்து அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) நிறுவனம், மஸ்கட்டிலிருந்து இலண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு நாளை வியாழக்கிழமை அதிகாலை ஒரு வணிக ரீதியிலான விமானத்தை இயக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.