• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

மத்திய கிழக்கில் இங்கிலாந்து தளங்களுக்கு பாதுகாப்பு தீவிரம்: தாக்குதல்களில் பங்கேற்கவில்லை!

Byadmin

Mar 1, 2026


மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு அமைந்துள்ள இங்கிலாந்தின் இராணுவத் தளங்களுக்கு பாதுகாப்பு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை (28) காலை, ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கை இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புளோரிடாவிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த இராணுவ நடவடிக்கைகளை நேரடியாக வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த தாக்குதல்களில் இங்கிலாந்து நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும், மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்கள் மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இங்கிலாந்து போர் விமானங்கள் வான்வெளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து தளங்களுக்கான பாதுகாப்பு மிக உயர்ந்த நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஈரான் உடனடியாக தனது ஆயுதத் திட்டங்களை கைவிட்டு வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அபாயச் சங்குகள் ஒலித்துள்ளதுடன், பல இடங்களில் வெடிச்சத்தங்களும் கேட்கப்பட்டுள்ளன. துபாயின் பாம் ஜுமேரா பகுதியில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்தத் தாக்குதல்களுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கின் வான்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இங்கிலாந்து பிரஜைகள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ஈரான் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளாமல் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானிய மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கும் என நைஜல் ஃபரேஜ் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது சட்டவிரோதமான மற்றும் கொடூரமான நடவடிக்கை என பசுமைக் கட்சித் தலைவர் ஜாக் போலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.

By admin