• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

மத்திய கிழக்கு பதற்றம்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – நீண்ட வரிசையில் நின்று பீதி அடைய வேண்டாம்!

Byadmin

Mar 2, 2026


மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், புதிய இறக்குமதிகள் தாமதமானாலும் கூட விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது நாட்டில் 37 நாட்களுக்கு போதுமான பெற்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் 47 நாட்களுக்கு போதுமான விமான எரிபொருளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிகமாக எந்தக் கப்பலும் வராத நிலையிலும் கூட, குறிப்பிட்ட காலத்திற்கு தடையின்றி எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

மேலும், இலங்கை இறக்குமதி செய்யும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார். மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டும் சில தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனினும், அதற்கும் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தை முற்றிலும் தவிர்த்து, தேவையற்ற பதற்றத்தில் எரிபொருளை சேமிக்க முயல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

By admin