படக்குறிப்பு, பட்ஜெட் உரையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, அவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையைக் கேட்ட பிறகு, அதில் சாமானிய மக்களுக்குச் சிறப்பானதாக எதுவும் இல்லை என்று பலர் நினைத்திருக்கலாம்.
பட்ஜெட்டில் அதிக கவனம் பெறாத சில அறிவிப்புகள் உள்ளன, ஆனால் அவற்றின் தாக்கம் பெரியதாக இருக்கலாம்.
சுற்றுலா, ஆயுர்வேதம், அரிய வகை மண் மற்றும் அதிவேக ரயில் தொடர்பான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் இது போன்ற பல அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் வெளியிடப்பட்டுள்ளன, அவை நீண்டகாலத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அத்தகைய சில அறிவிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. தங்கப் பத்திரங்கள் மீதான வரி விதிகள் மாற்றப்பட்டுள்ளன
பட மூலாதாரம், AFP via Getty Images
முன்பு எப்படி இருந்தது? – சாவரின் தங்க பத்திரங்களை முதிர்வுக் காலம் வரை வைத்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
நீங்கள் இந்தப் பத்திரங்களை அரசு வெளியிட்ட நேரத்தில் நேரடியாக வாங்கினாலும் அல்லது பங்குச் சந்தைகள் வழியாக வாங்கினாலும் இந்த வரிச் சலுகை கிடைத்து வந்தது.
மாற்றப்பட்டது என்ன: பங்குச் சந்தை மூலம் வாங்கப்படும் தங்கப் பத்திரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூலதன ஆதாய வரி விலக்கை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
இனிமேல், ரிசர்வ் வங்கி நேரடியாக வெளியிடும்போது வாங்கி, அதை முதிர்வுக் காலம் வரை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இந்த வரி விலக்கு கிடைக்கும்.
ஏப்ரல் 1, 2026-க்குப் பிறகு, பங்குச் சந்தையில் இருந்து ஒரு தங்கப் பத்திரத்தை வாங்கி, அதை முதிர்வு வரை வைத்திருந்தாலும், வாங்கிய விலைக்கும் முதிர்வு விலைக்கும் இடையே உள்ள லாபத்திற்கு நீங்கள் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும்.
2. டெரிவேடிவ் ஒப்பந்தங்கள் மீதான வரிகளில் மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெரிவேடிவ் ஒப்பந்தங்களில் ஏற்படும் இழப்புகள் குறித்து செபி பலமுறை முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது.
2026 பட்ஜெட்டின் மிக முக்கியமான அறிவிப்பாக இது கருதப்படுகிறது.
பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகம் தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்த அரசு தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதுவரை வரை இருந்த நிலை: பங்கு சந்தை சார்ந்த டெரிவேட்டிவ் வர்த்தகங்களுக்கு பங்குப் பரிவர்த்தனை வரி (STT) ஏற்கனவே இருந்தது.
பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை 0.02% ஆகவும், ஆப்ஷன்ஸிற்கு 0.10% வரியும் இருந்தது. இந்த பங்குப் பரிவர்த்தனை வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்டது என்ன: ஃபியூச்சர்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி விகிதத்தை 0.02%-லிருந்து 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி 0.10%-லிருந்து 0.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், தற்போது 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஃபியூச்சர்ஸ் விற்பனைக்கு 20 ரூபாய் பங்குப் பரிவர்த்தனை வரி செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் நிதி அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு, இனி பங்குப் பரிவர்த்தனை வரி 50 ரூபாயாக இருக்கும்.
ஒவ்வொரு வர்த்தகத்திலும் வரி அதிகரிப்பதால், மொத்தமாக கிடைக்கும் லாபம் குறையும் என்பதால் இந்த மாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
3. வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து சொத்து வாங்கும் முறையில் மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து சொத்து வாங்குவதற்கான பரிவர்த்தனை விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதுவரை உள்ள நடைமுறை – வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (NRI) சொத்து வாங்கும் செயல்முறை சற்றே சிக்கலானது, இது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுவரை, சொத்து வாங்குபவர் டிடிஎஸ் (TDS) செலுத்துவதற்காக டான் எண்ணுக்கு (TAN) தனியாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
மாற்றப்பட்டது என்ன: நிதி அமைச்சரின் புதிய முன்மொழிவின்படி, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ஆர்ஐ சொத்துக்களை வாங்குவதற்கு இனி டான் (TAN) எண் தேவையில்லை.
இந்தியாவில் வசிப்பவர்களிடமிருந்து சொத்து வாங்கும் போது செய்வது போலவே, இந்தியாவைச் சேர்ந்தவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து சொத்து வாங்கும்போது தங்களின் பான் எண்ணைப் பயன்படுத்தலாம். இது சில சிக்கலான ஆவணப் பணிகளைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, அரசாங்கம் இப்போது கிரிப்டோவில் முதலீட்டை ஒழுங்குபடுத்த உள்ளது.
4. கிரிப்டோ தொடர்பாக பட்ஜெட்டில் என்ன மாற்றம் ஏற்பட்டது?
தற்போதைய நிலை: கிரிப்டோ பரிவர்த்தனை தகவல்கள் வரி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும், ஆனால் தகவல்களைத் தெரிவிக்காமல் இருப்பதும் அல்லது தவறான தகவல்களை வழங்குவதும் இன்னும் பொதுவாக நடப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாற்றப்பட்டது என்ன: கிரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் தளங்களுக்கு ஒரு முக்கிய மாற்றம் காத்திருக்கிறது. கிரிப்டோ சொத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்கத் தவறினால் அல்லது தவறான தகவல்களை வழங்கினால் அபராதம் விதிக்க அரசு இப்போது முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 1, 2026 முதல், கிரிப்டோ பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை வழங்கத் தவறினால் நாளொன்றுக்கு 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அதே நேரத்தில், தவறான தகவல்களை வழங்கி அதைச் சரிசெய்யாமல் இருந்தால் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
5. வெளிநாட்டில் படிப்பவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்கின்றனர்.
தற்போதைய நிலை: தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு டிசிஎஸ் (TCS) வசூலிக்கப்படுகிறது.
கல்வி மற்றும் மருத்துவத்திற்காக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும் பட்சத்தில் 5 சதவீத வரி (TCS) விதிக்கப்படுகிறது.
மாற்றப்பட்டது என்ன: பட்ஜெட்டில் இந்த விதியை அரசு சற்றே தளர்த்தியுள்ளது. எல்ஆர்எஸ் (LRS) இன் கீழ் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான டிசிஎஸ் (TCS) விகிதம் 5%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பணம் அனுப்புவது முன்பை விட மலிவாகும்.
டிசிஎஸ் மற்றும் எல்ஆர்எஸ் என்றால் என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
மூலத்தில் வரி வசூலித்தல் (TCS) என்பது வெளிநாட்டிற்குப் பணம் அனுப்பும் போது வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் வசூலிக்கப்படும் வரியாகும்.
இருப்பினும், இது ஒரு கூடுதல் வரி அல்ல. நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்யும்போது, இந்தத் தொகை உங்கள் மொத்த வரிப் பொறுப்புக்கு எதிராகச் சரிசெய்யப்படும். மேலும் நீங்கள் கூடுதல் வரி செலுத்தியிருந்தால், மீதமுள்ள தொகை ரீஃபண்ட் பெறப்படும் .
LRS அதாவது தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு வசதியாகும், இதன் கீழ் இந்தியாவில் வசிப்பவர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டிற்கு அனுப்பலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இந்தத் தொகையை ஒரு நிதியாண்டிற்கு 250,000 டாலராக நிர்ணயித்துள்ளது. இந்தத் தொகை கல்வி, மருத்துவ சிகிச்சை, பயணம், பரிசுகள் அல்லது வெளிநாட்டு முதலீடு போன்ற நோக்கங்களுக்காக அனுப்பலாம்.