சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைத்துப்பகுதி மக்கள் மீதும் வரிச்சுமைகளை ஏற்றியுள்ள ஒன்றிய அரசின் நாசகர பட்ஜெட்டை எதிர்த்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகம், கேரளம் உள்ளிட்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்து அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எதேச்சதிகரமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசினை கண்டித்தும் பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்டு அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணிகளும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், வணிகர்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.