• Sat. Mar 22nd, 2025

24×7 Live News

Apdin News

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க – Vanakkam London

Byadmin

Mar 21, 2025


ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைக்கான பணியகத்திற்கு (PCWB) “எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையிலுள்ள நாடு திரும்பும் புலம்பெயர்ந்தோர் மற்றும் சமுதாயங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், அவர்களின் திறன்களை கட்டியெழுப்புதல் மற்றும் பாதுகாப்பான, முறையான புலம்பெயர்வை ஊக்குவித்தல்” (“UPLIFT”) கருத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமான முறையில் தங்களது ஆதரவை வழங்கியுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட உதவிகளை நோக்குகையில் காணாமற்போன மற்றும் சுரண்டப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் (NCMEC),மனித விற்பனைக்கு எதிரான பிரிவு, 109 அவசர தொலைபேசி இலக்க பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கான கருமபீடம், வன்முறையிலிருந்து மீண்ட பெண்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள் மற்றும் சிறுவர்களுக்கான தனி இடம், (PCWB)இன் 109 அவசர தொலைபேசி இயக்குநர்களுக்கு “மனித

விற்பனையைக் கண்டறிந்து பதிலளித்தல்” குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்துதல் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 19 PCWB பிராந்திய அலுவலகங்களுக்கு தளபாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குதல் ஆகியவை இத்தகைய உதவி வழங்கும் திட்டத்தில் உள்ளடங்கும். இந்த மொத்த உதவியின் பணப் பெறுமதி ஐக்கிய அமெரிக்க டொலர்களில் 166,000 ஆகும்.

இவ்வாறு வழங்கப்பட்ட உதவியின் நோக்கம் யாதெனில், சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பாதிக்கும் மனித விற்பனை, துஷ்பிரயோகம் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பிலான தீர்மானகரமான சம்பவங்களை கையாளுவதற்கு பணியகத்தின் திறனை வலுப்படுத்துவதாகும். இலங்கையில் மனித விற்பனையை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளில் மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணியை (NAHTTF)ஆதரிப்பதற்கான IOM இன் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளதுடன் இதில் PCWB ஒரு முக்கிய உறுப்பினராக காணப்படுகின்றது.

IOM ஆல் நடத்தப்பட்ட முழுமையான மதிப்பீட்டின் விளைவாக இந்த மேம்படுத்தல்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டியதுடன் மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகள் பணியகத்தின் செயற்பாடுகளுக்கு தனித்துவமானதாக அமையும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வழியமைக்கும் என உறுதி செய்யப்படுகின்றது.

பெண்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள் மற்றும் பிற அத்தியாவசிய இடங்கள் போன்ற அலகுகளுக்கு விரிவான மேம்படுத்தல்கள் இப்பணியில் உள்ளடங்கியுள்ளதுடன் அதனூடாக உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பான, ஒத்துழைப்புமிக்க மற்றும் செயலூக்கமான ஒரு சூழல் தோற்றுவிக்கப்படுதல் உறுதி செய்யப்படுகின்றது. இவ்வாறு புதிதாக மேம்படுத்தப்பட்ட வசதிகள் மனித விற்பனை, வீட்டு வன்முறை மற்றும் பிற குற்றங்களில் இருந்து மீண்டவர்களுக்கு கிடைக்கும் உதவிச் சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில் “இந்த புனரமைப்பு பணிகள் தொடர்பாக தான் பெருமளவு திருப்தி அடைவதாகவும் இப்பணி குறுகியதொரு காலப்பகுதிக்குள் PCWB இன் தற்போதைய நடவடிக்கைகளுக்கு மிகக் குறைந்தளவு இடையூறுகளுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். “இந்த இடமானது உதவி தேவைப்படும் எண்ணற்ற பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது.

புனரமைப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது மாத்திரமன்றி கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அவர்களை ஆதரிக்கும் திறனையும் மேம்படுத்துகின்றன.

இவ்விடயத்தை சாத்தியமானதொரு விடயமாக மாற்றுவதற்கு இடையறாமல் பெருமளவு உதவி வழங்கிய IOM மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று பிரதி பொலிஸ்மா அதிபர் 20 மார்ச் 2025 அன்று நிகழ்ந்த திறப்பு விழாவில் திருமதி ரேணுகா மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சர் கௌரவ சுனில் வடகலை மற்றும் இடைக்கால பொலிஸ் மா அதிபர் திரு. பிரியன்த வீரசூரிய ஆகியோரும் அந்நிகழ்வில பங்கேற்று சிறப்பித்தனர்.

PCWB இற்கு IOM வழங்கும் உதவி வெறுமனே பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட விடயம் அல்ல என்பதுடன் இவ்விடயத்துடன் தொடர்புடைய சம்பவங்களை உணர்திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் கையாளும் பொருட்டு பணியாளர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதை உறுதி செய்வதற்கு தேவையான பயிற்சி மற்றும் ஆற்றல் விருத்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைகின்றது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் சார்ந்த துஷ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகளைப் பெறுவதற்கு தனித்துவமாக ஒதுக்கப்பட்டுள்ள 109 எனும் இலக்கம் கொண்ட அவசர தொலைபேசி அழைப்புகளுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு மனித விற்பனை சம்பவங்களை திறம்பட அடையாளம் காண்பதற்கும், சம்பவங்களைக் கையாளும்போது பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மற்றும் மனவதிர்ச்சி சார்ந்த அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு உதவி வழங்கியது.

அமைச்சர்/ இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் திரு. காமொஷிடா நவோஆகி (Mr.KAMOSHIDA Naoaki) கூறுகையில், “இந்த பணியகத்தை புதுப்பிப்பதன் மூலம், மற்றும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுடன் பணியாற்றும் அலுவலர்களின் திறனை வலுப்படுத்துவதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைச் செய்து வருகிறோம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உபகரணங்கள் வரும் ஆண்டுகளில் திறம்பட பயன்படுத்தப்படும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம்.”

மேலும், அவர் கூறியதாவது: “இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பாதுகாப்பையும் அதிகாரமளிப்பையும ; வலுப்படுத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறை மற்றும் சுரண்டலில் இருந்து விடுபட்ட எதிர்காலத்திற்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்”.

மேற்படி பணியகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு IOM அமைப்பு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல்கள் மனித விற்பனைக்கு எதிரான போராட்டத்திலும் பாதிக்கப்படக்கூடிய நபர்களை பாதுகாக்கும் பணியிலும் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கின்றன.

“மனித விற்பனைக்கு எதிரான போராட்டத்தில் அரச நிறுவனங்களின் ஆற்றலை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு பல ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப உதவி முதல் ஆற்றல் விருத்தி வரையிலான முன்னெடுப்புகளுக்கு பன்முக ஆதரவை வழங்கியுள்ளது” என்று IOM இலங்கை மற்றும் மாலைத்தீவுகளின் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்கோ குறிப்பிட்டார்.

மனித விற்பனையைக் கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்துடன் (2021-2025) இசைந்தொழுகும் வகையில் எங்கள் உதவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி (NAHTTF)மற்றும் அதன் முக்கிய உறுப்பினர் நிறுவனமாகிய PCWB ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. மேற்கூறப்பட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ஆற்றல்களைக் கொண்ட உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயலாற்றி பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒப்பீட்டளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மனித விற்பனை, வன்முறை மற்றும் பிற குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை PCWB அடைந்துகொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்.

PCWB இற்கு வழங்கப்படும் இந்த உதவி, IOM அதன் பணியின் மீது கொண்டுள்ள உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் அனைவரினதும் மீண்டெழும் ஆற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

 

 

By admin