பொத்தேரி: எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் நடத்திய சொல் தமிழா சொல் 2025 பேச்சுப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமூக வலைதளங்களில் பேசுவதைவிட மாணவர்கள் பொதுவெளியில் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் அனைத்து மாவட்டங்களும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய 9 மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று முடிந்தது.
2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில அளவிலான இறுதிப்போட்டிக்கான இரண்டு சுற்றுகள் ஏப். 6-ம் தேதியும், இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நேற்றும் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் நடுவராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு இறுதி போட்டியில் முதன்மை பேச்சாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
இறுதிச்சுற்றில் ‘மருத்துவம், பொறியியல் தமிழில் சாத்தியம் – சாத்தியமில்லை’,‘ஒரே கட்சி மத்திய, மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் சாத்தியம் – சாத்தியமில்லை, ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே – சாத்தியமில்லை, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக முடியுமா? சாத்தியம் – சாத்தியமில்லை ஆகிய தலைப்புகளில் 8 பேர் பேசினர்.
முதல் பரிசை லாவண்யா (அரசு சட்ட கல்லூரி நெல்லை), இரண்டாவது பரிசை ராஜவேல் (சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நெல்லை), மூன்றாவது பரிசை ஆதிரா (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நெல்லை) பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-ம் பரிசாக ரூ.3 லட்சம், 3-ம் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதனைத்தவிர 74 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் அறிமுக உரையாற்றினார். பேராசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கு.ஞானசம்பந்தன் வாழ்த்துரை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரையாற்றினர்.
விழாவில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவன டாக்டர் பாரிவேந்தர் பேசும்போது, “தமிழகத்தில் ஏராளமான பேச்சாளர்கள் வரவேண்டும் என்ற நோக்கில் சொல் தமிழா சொல் தொடர்ந்து செயல்படும். தமிழகம் பேச்சால் ஆட்சியைப் பிடித்தது. பேச்சாற்றல் கொண்ட அண்ணாமலையும், சீமானும் இணைய வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற நிலையை உருவாக்க இருவரும் பாடுபட வேண்டும். கோடானு கோடி மக்களின் வேண்டுகோள் இதுதான்” என்றார்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அரங்கம் நிரம்பி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய பேச்சு மக்களிடம் செல்ல வேண்டும் என மேடை ஏறியுள்ளனர். அதில் 74 பேர் பரிசு பெற்றுள்ளனர். இது சாதாரணமான செயல் அல்ல. அடுத்த ஆண்டு 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டால்தான் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க முடியும். பாரிவேந்தர் 86 அகவையில் இங்கு வந்து அமர்ந்துள்ளார். அனைத்து துறைகளிலும் பாரிவேந்தர் வெற்றி பெற்றுள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடியை தன்னுடைய தொகுதி மக்களுக்காக, செலவு செய்துள்ளார். இங்கு 2,000 பேர்களில் 74 பேர் பரிசு வாங்கினாலும் வாங்காமல் இருந்தாலும் பரிசுகள் முக்கியமில்லை. அண்ணன் சீமானை ஒரு அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட ஒரு போர் தலைவனாகத்தான் நான் பார்க்கிறேன். தன்னுடைய கொள்கைக்கு எந்த நிலையாக இருந்தாலும் போராடுவேன் என நிற்பவர் சீமான். எனக்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை.
நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். தேசியக் கட்சிகள் தேசிய பிரச்சினையை முதன்மையாகவும் மாநில பிரச்சினையை முக்கியமாகவும் பார்க்க வேண்டும். அதேபோல், மாநில கட்சிகள் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை முதன்மையாகவும் தேசியத்தில் உள்ள பிரச்சினையை முக்கியமாகவும் பார்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு போர்க்களத்தில் என்றும் இருக்கக்கூடிய தளபதியாக சீமான் இருக்கிறார்.
எடுத்துக்கொண்ட கொள்கையில் நிலையாக நிலைத்து நிற்கிறார். கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசியல் என்பது இல்லை. மேடைகளில் பேசுவதை விட சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டு ஓடி ஒளிந்து விடுகின்றனர். சமூக வலைதளங்களில் பேசுவதை விட பொதுவெளியில் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேச வேண்டும்.
இளைஞர்கள் தைரியமாக அரசியல் பேச வேண்டும். 6, 7-ம் வகுப்பில் படிக்கும்போது நான் சரியாக பேச மாட்டேன், எனக்கு திக்குவாய், பேருந்தில் டிக்கெட் எடுப்பதற்குக்கூட பயப்படுவேன். தமிழகம் வந்த பிரதமரை வரவேற்க வேண்டியது முதல்வரின் கடமை ஆனால் அவர் செல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்தப் போட்டியின் பிரிண்ட் மீடியா பார்ட்னராக இந்து தமிழ் திசை நாளிதழ், மீடியா பார்ட்னராக புதிய தலைமுறை, வேந்தர், புதுயுகம் தொலைக்காட்சி சேனல்கள் இருந்தன.

தலைவர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்க வேண்டும்: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து
நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பாரிவேந்தர், தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பை தொடங்கி, அதில் சொல் தமிழா சொல் என்ற தலைப்பில் நாடெங்கிலும் ஆற்றல் மிக்க இளைய தலைமுறை பிள்ளைகளை கொண்டு வந்து அவர்களுக்கு சிறப்பு செய்யும் பாரிவேந்தருக்கு நன்றி.
பாரியைப் பற்றி படித்துள்ளோம். ஆனால் பார்த்ததில்லை. ஆனால், தற்போது பார்க்கிறோம். படிக்க வசதி இல்லாத பல்வேறு நபர்களை இந்த பல்கலைக்கழகத்தில் பாரிவேந்தர் படிக்க வைக்கிறார். தாய்மொழி வீழ்ச்சி அடைய கூடாது என சொல் தமிழா சொல் என்ற போட்டியை தொடங்கி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வந்துள்ளார். பேச்சு என்றால் இங்கு வெற்றி மட்டுமே. பேச்சு என்பது எண்ணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும்.
இங்கு பேசிப் பேசி காலத்தை ஓட்டியவர்கள் உண்டு, சென்றவர்களும் உண்டு. சொற்களால் எவ்வளவோ மாறுதலை இந்த சமூகம் பார்த்துள்ளது. வார்த்தைகளை வாயிலிருந்து பேசினால் செவி வரை தான் செல்லும். இதயத்திலிருந்து சொற்கள் செல்வது மனதளவில் பதியும். தமிழ் உலக மொழிகளின் தாய். அனைத்து மொழிகளும் மனிதர்களால் பேசப்பட்டது. உலகின் எம்மொழியும் துணை என தனித்து இயங்க கூடிய மொழி செம்மொழி.
மருத்துவம் மற்றும் பொறியியலை தமிழில் படிக்க முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர். இனி வரும் தலைமுறையினர் வாக்காளர்களாக மட்டும் இருக்காமல் அரசியல் கற்று கொள்ளுங்கள். அரசியல் தலைவர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக யோசனை செய்ய வேண்டும். பேச்சு என்பது வலிமை மிக்க ஆயுதம். அந்தப் பணியை தமிழ்ப் பேராயம் செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.