மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், எல்.முருகன் கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் முருக பக்தர்கள் மாநாடு. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி பாடல்கள் பாடும்போது, முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் வீட்டில் கந்த சஷ்டி பாட வேண்டும்.
தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரிய ஆன்மிக மாநாடு இது. கட்சி மாநாடு அல்ல. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவது, திருமாவளவன் போன்றோருக்குப் பிடிக்கவில்லை. மற்ற மதங்களில் இதுபோன்ற மாநாடு நடத்தினால், மனித சங்கிலிப் போராட்டம் நடத்தும் துணிவு அவருக்கு வருமா?
முருக பக்தர்கள் ஒருங்கிணைவதை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? காவல் துறையினர் இந்த மாநாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. நீதிமன்றம் அறிவுறுத்தியும், எந்த வசதிகளையும் செய்து தரவில்லை. இ-பாஸ் எதற்கு தேவை என்று எங்களுக்கே புரியவில்லை. நீதிமன்றம் இ-பாஸ் முறையை ரத்து செய்து உத்தரவிட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.