சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 10) நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும், 7 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் செல்லாதவை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 19-ல் நடைபெறும் தேர்தலுக்காக வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று (ஜூன் 10) முற்பகல் 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆய்வுக்குப் பின், ஐ.எஸ்.இன்பதுரை (அதிமுக), ம.தனபால் (அதிமுக), கமல்ஹாசன் (மநீம), எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக), கவிஞர் சல்மா (எ) ராஜாத்தி, பி.வில்சன் ஆகிய 6 வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்படுகிறது.
மேலும், அக்னி ஆழ்வார், கண்டே சயன்னா, ரெ.கந்தசாமி, சுப்பிரமணியன், பத்மராஜன், மேஷாக் கிருபாகரன் மற்றும் கே.பி.எம். ராஜா ஆகிய 7 சுயேட்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கல் நிராகரிக்கப்பட்டுள்ளதால், திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.