சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.ரமேஷ் ஆகியோரிடம் 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் ஒருவர், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யும், சேலம், மேட்டூரைச் சேர்ந்த கு.பத்மராஜன். இது இவர் தாக்கல் செய்யும் 249-வது மனுவாகும். அதே போல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மேட்சல்- மகாஜகிரியைச் சேர்ந்த கண்டே சயன்னா என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இருவரும் எம்எல்ஏக்கள் முன்மொழிவை வழங்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜூன் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.