12
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் யூத சமூகத்தை குறிவைத்து பெரிய அளவிலான தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இரண்டு ஆண்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, இது வெற்றியடைந்திருந்தால் “இங்கிலாந்தின் மிக கொடிய தீவிரவாத தாக்குதல்களில் ஒன்றாக” அமைந்திருக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
38 வயதுடைய வாலித் சஆதாவி மற்றும் 52 வயதுடைய அமர் ஹுசைன் ஆகியோர், ஐ.எஸ்.ஐ.எஸ். சிந்தனையால் தூண்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சட்டவிரோதமாக துப்பாக்கிகளை இங்கிலாந்துக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்திருந்ததாக பிரெஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணையில் தெரியவந்தது.
இருவரின் திட்டமும் மறைமுகமாக செயல்பட்ட காவல் அதிகாரியின் முக்கிய பங்களிப்பால் முறியடிக்கப்பட்டதாக Greater Manchester Police தெரிவித்துள்ளது. விசாரணையின் போது குறிப்பிட்ட தாக்குதல் இடம் அல்லது திகதி உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.
இருப்பினும், 2024 கோடைகால முடிவுக்குள் யூத விரோதத்துக்கு எதிரான பேரணியை குறிவைத்து துப்பாக்கி தாக்குதல் நடத்தவும், பின்னர் வட மான்செஸ்டர் பகுதிக்கு சென்று தாக்குதலை தொடரவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
தண்டனை வழங்கும்போது நீதிபதி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பல குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கடுமையாக காயமடைந்திருக்க வாய்ப்பு இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
வாலித் சஆதாவிக்கு குறைந்தது 37 ஆண்டுகள் மற்றும் அமர் ஹுசைனுக்கு குறைந்தது 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.