சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது, தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்து தமிழக அரசு மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்து ஆர்.சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், சண்முகவேல், ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சரத்குமார் மற்றும் சண்முகவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற கட்சியின் தோழர்களை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மக்கள் மத்தியில் தாங்கள், அம்பலமாவதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.