மாலத்தீவு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா எனும் அச்சத்துடன், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் முகமது முய்சு இந்தியாவிடம் உதவி கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மாலத்தீவில் ஏற்பட்ட தேர்தலின்போது, ‘இந்தியாவே வெளியேறு’ என்ற கொள்கையை மையப்படுத்தி முய்சு பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைப்பதாக உறுதியளித்து தேர்தலில் வெற்றி பெற்ற முய்சு, இருநாட்டு உறவை மேம்படுத்தும் நோக்குடன் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை.
முகமது முய்சு அதிபரான பிறகு, இருநாட்டு உறவுகளும் மோசமடைந்து வந்தன. இந்நிலையில், மாலத்தீவு தனது பெரிய அண்டை நாட்டைப் புறக்கணிக்காது என்பதை அவரது வருகை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவின் அந்நிய செலாவணி கையிருப்பு 440 மில்லியன் டாலர்கள் என்றிருந்தது. அதன்மூலம் ஒன்றரை மாதங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
மூடிஸ் நிறுவனம் கூறியது என்ன?
சர்வதேச தர முகமையான மூடிஸ், மாலத்தீவின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறைத்து மதிப்பிட்டிருந்தது. அதற்குக் காரணமாக, “மாலத்தீவு தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதற்கான அபாயங்கள் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக” குறிப்பிட்டது.
இந்த நேரத்தில் இந்தியாவின் உதவி அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும்.
அதிபரான பின்னர் முய்சு துருக்கி மற்றும் சீனாவுக்கு சென்றார். ஜனவரி மாதம் அவர் சீனாவுக்கு சென்றதை, தங்கள் நாட்டை அவமதிக்கும் செயலாக இந்தியா பார்த்தது. மாலத்தீவின் முந்தைய அதிபர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர், முதலில் டெல்லிக்கு தான் வருகை தருவார்கள்.
அதேநேரத்தில், மூன்று மாலத்தீவு அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோதியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிபர் முய்சுவின் வருகை பல வழிகளில் திடீர் திருப்பமாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளரும் மாலத்தீவு ஆய்வாளருமான ஆஸிம் ஜாஹிர்.
இது மாலத்தீவு இந்தியாவை எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, மற்ற எந்த நாட்டினாலும் பூர்த்தி செய்ய முடியாத வகையிலான பங்கு இந்தியாவுக்கு இருப்பதை உணர்த்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலில், 1200 பவளத் தீவுகள் அடங்கிய ஒரு தீவுக்கூட்டம்தான் மாலத்தீவு. மாலத்தீவின் மக்கள்தொகை சுமார் 5,20,000. அதன் பெரிய அண்டை நாடாகக் கருதப்படும் இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி.
ஒரு சிறிய தீவு நாடான மாலத்தீவு, அதன் உள்கட்டமைப்பு, உணவு, சுகாதாரம் போன்றவற்றுக்காக, அதன் பெரிய அண்டை நாடான இந்தியாவை பெருமளவில் சார்ந்துள்ளது.
முய்சுவின் இந்த வருகையின்போது, மாலத்தீவுக்கு நிதியுதவி வழங்கப்படுவது குறித்து இந்தியாவோ மாலத்தீவோ இதுவரை உறுதி செய்யவில்லை. ஆனால், இருதரப்பு பேச்சுவார்த்தையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
என்ன உதவி கேட்கப்படலாம்?
“மானிய உதவி மற்றும் கடனை திருப்பிச் செலுத்துதலில் மறுசீரமைப்பு ஆகியவை, முய்சு வருகையின் முன்னுரிமையாக உள்ளதாக” தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மூத்த மாலத்தீவு ஊடக ஆசிரியர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், “குறைந்துள்ள அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க மாலத்தீவு மத்திய வங்கியால் கோரப்பட்ட 400 மில்லியன் டாலர் அளவிலான நாணய மாற்று ஒப்பந்தத்தையும் முய்சு உறுதிசெய்ய விரும்புவதாக” கூறினார்.
மாலத்தீவின் நிதி நிலைமை குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்திய மூடிஸ் நிறுவனம், “அரசாங்கத்தின் அந்நிய செலாவணி கையிருப்பு, 2026இல் 1 பில்லியன் டாலருக்கும், 2025இல் தோராயமாக 600 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நாட்டின் வெளிநாட்டு கடன் சேவையைவிட மிகக் குறைவாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
`வெளிநாட்டுக் கடன் சேவை’ என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கடனில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி மற்றும் அசல் தொகையாகும்.
மாலத்தீவின் மொத்த பொதுக் கடன் சுமார் 8 பில்லியன் டாலராகும், இதில் சீனா மற்றும் இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய தலா 1.4 பில்லியன் டாலர் கடனும் அடங்கும்.
“ஐந்து ஆண்டுகளுக்கு கடனைச் செலுத்துவதை ஒத்திவைக்க சீனா ஒப்புக்கொண்டதாக முய்சு பல சந்தர்ப்பங்களில் கூறிய போதிலும், இன்னும் சீனாவிலிருந்து நிதி உதவி வரவில்லை” என்கிறார் மாலத்தீவு ஊடக ஆசிரியர்.
எந்த நாடும் உதவிக்கு வராத நிலையில், இந்தியாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்ய முய்சு முயல்வதாகத் தெரிகிறது.
“முய்சு அரசின் துணை அமைச்சர்களுடைய எதிர்மறை கருத்துகள் மற்றும் தொனியின் காரணமாக, இந்திய சுற்றுலாப் பயணிகளின் மாலத்தீவு வருகையைக் கணிசமாகப் பாதித்தது. முய்சு வருகையின் நோக்கம், அதைச் சரிசெய்ய முனைவது,” என்கிறார் ஜாஹிர்.
சீனாவுடன் நெருக்கம்
மாலத்தீவின் மீது இந்தியா நீண்டகாலமாக செல்வாக்கு செலுத்தி வருகிறது. இதனால் வீயூகரீதியாக அதன் நிலைப்பாடு காரணமாக இந்திய பெருங்கடலின் முக்கியமான பகுதியைக் கண்காணிக்க முடிகிறது. ஆனால், அதிபர் முய்சு சீனாவுடன் நெருக்கமாவதன் மூலம் அதை மாற்ற விரும்பினார்.
மாலத்தீவு கடந்த ஜனவரி மாதம் சுமார் 80 இந்திய துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான இறுதி எச்சரிக்கையை வழங்கியது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தானமாக வழங்கிய இரண்டு மீட்பு மற்றும் உளவு ஹெலிகாப்டர்கள், ஒரு டோர்னியர் விமானத்தை இயக்க துருப்புகள் அங்கு நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது.
இறுதியில், விமானத்தை இயக்குவதற்கு துருப்புகளுக்குப் பதிலாக ராணுவம் அல்லாத இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, முய்சுவின் நிர்வாகம், மாலத்தீவு கடல் பகுதியில் உள்ள கடற்பரப்பை வரைபடமாக்குவதற்கு முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட இந்தியாவுடனான ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தது.
இதன் பின்னர், முய்சு அரசாங்கத்தின் மூன்று துணை அமைச்சர்கள் பிரதமர் மோதி குறித்து “கோமாளி”, “பயங்கரவாதி” மற்றும் “இஸ்ரேலின் கைப்பாவை” போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தனர்.
அந்தக் கருத்துகள் இந்திய சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தின, இந்தியாவில் பலரும் மாலத்தீவைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தனர். இந்தக் கருத்துகள் தனிப்பட்ட நபர்களுடையவை எனவும் இவை அரசின் பார்வையைப் பிரதிபலிக்காது எனவும் மாலத்தீவு அரசு தெரிவித்தது. மேலும், சர்ச்சைக் கருத்துகளைக் கூறிய அமைச்சர்களை இடைநீக்கம் செய்தனர்.
இந்த சர்ச்சை குறித்து இந்தியாவிலிருந்து சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களைத் தொடர்ந்து, “நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்களை உங்கள் விருப்பப்படி நடத்துவதற்கான அதிகாரத்தை வழங்கிவிடாது,” என முய்சு தெரிவித்திருந்தார்.
மேலும், இந்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில், சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3-ஐ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கவும் முய்சுவின் நிர்வாகம் அனுமதித்தது.
மோதி பதவியேற்பில் பங்கேற்ற முய்சு
இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோதி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முய்சு மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு இருதரப்பு உறவுகளில் நிலவிய சிக்கல் சற்றுத் தணிந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மாலத்தீவுக்குச் சென்றது, இருதரப்பு உறவுகளுக்கு ஒரு மறுதொடக்கத்தை அளித்தது.
“அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ எனும் எங்கள் கொள்கையின் மையமாக மாலத்தீவு இருப்பதாக” என மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஜெய்சங்கர் பேசினார்.
“பிரதமர் நரேந்திர மோதியின் வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியாவை பொறுத்தவரை, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அண்டை நாடுகளில், மாலத்தீவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய நட்பு அரசாங்கம் அகற்றப்பட்ட நிலையில், நேபாளத்தில் இந்தியாவின் கொள்கைகளை விமர்சித்து வந்த கேபி சர்மா ஒலி மீண்டும் பிரதமரான நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியா வருவது இந்திய அரசுக்கு நேர்மறையான மாற்றமாகக் கருதப்படுகிறது.
இந்தியாவை பகைத்துக்கொள்வது ஏற்றதல்ல என்பதை முய்சு உணர்ந்துள்ளார். கடந்த ஆண்டில் மாலத்தீவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக அந்நாட்டுக்குச் சுமார் 150 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் இருந்து நிதி உதவி கிடைக்காவிட்டால் மாலத்தீவு பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால் அவரது இந்திய பயணம் முக்கியமானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு