– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் விஷமப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இறுதி நிகழ்வில் குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக அதற்கான பதிலை வழங்குவதை நாங்கள் தவிர்த்து இருந்தோம்.
ஆனாலும், சில விடயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அது எங்களுடைய பொறுப்பு. உண்மையை மக்களும் அறிந்துகொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது.
குறிப்பாக நானும் பதில் செயலாளர் சத்தியலிங்கமும்
மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்குச் சென்று சந்தித்து சுகயீனம் தொடர்பிலே கலந்துரையாடியிருந்தோம்.
ஆனால், நாங்கள் அரசியல் பேசியதாகவும், கடுந் தொனியில் கதைத்திருந்ததாகவும் சிவமோகன் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோர் கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது. அது அவர்களின் கற்பனைவாதங்களே தவிர வேறொன்றும் இல்லை.
ஆனாலும், மாவை சேனாதிராஜாவின் மரணத்துக்கு நாங்கள்தான் காரணம் என்றவாறாகத் திட்டமிட்டு விஷமப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு இருக்கின்றன. இதன் உண்மையை எமது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வைத்தியசாலையில் நானும் குலநாயகமும் மாவை சேனாதிராஜாவைச் சென்று பார்வையிட்டு இருந்தோம். அதன் பின்னர் நாங்கள் வருகின்றபோது மாவை சேனாராஜாவின் சகோதரி குலநாயகத்துடன் முரண்பட்டுள்ளார்.
ஆனால், மாவை சேனாதிராஜா இருப்பதற்குத் தனது வீட்டைக் கொடுத்தும், மாவை சேனாதிராஜா தாக்குதலில் காயமடைந்த பின்னர் அவரைப் பராமரித்ததும் குலநாயகம்தான். உண்மையில் மாவைக்கும் குலநாயகத்துக்கும் இடையே குடும்ப உறவு முறை இருந்தது.
ஆனால், மாவையின் சகோதரியின் பேச்சால் மனமுடைந்த குலநாயகம் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தார்.
குலநாயகத்துக்கு நடந்த இந்தச் சம்பவம் எல்லாம் மிகவும் கவலைக்குரியது.
மாவை சேனாதிராஜா மரணமடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் தொடர்பு கொண்டு கட்சித் தலைமையகத்துக்கு அவரது புகழுடலைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கின்றது என்றும், ஆனபடியால் மாவையின் குடும்பத்தினருடன் கலந்து பேசி அந்த விடயத்தை நீங்கள் பொறுப்பெடுத்துச் செய்யுங்கள் என்றும் கேட்டிருந்தேன்.
அதன் பின்னர் எனக்கு அழைப்பெடுத்த சிறீதரன் தான் கதைத்திருப்பதாகவும், இந்த விடயத்தில் முன்னேற்றம் இருப்பதாகவும், நீங்கள் வந்தால் தொடர்ந்து பேசலாம் என்றவாறாகவும் சொல்லியிருந்தார். இதற்கமைய நானும் சென்று பேசியிருந்தேன். இந்த விடயத்தில் சிறீதரன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியும் இருந்தார்.
ஆனால், இறுதிச்சடங்குக்கு முதல் நாள் இரவு அழைப்பெடுத்த சிறீதரன் கட்சி அலுவலகத்துக்குப் புகழுடலைக் கொண்டு வருவதைக் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் 18 பேரின் பெயர் விவரங்களைப் படங்களுடன் போட்டு மாவையின் மரணத்துக்குக் காரணமான துரோகிகள் என்றவாறாக பல இடங்களில் பனர்களை கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.
உண்மையில் இதெல்லாம் மிகப் பெரிய அபாண்டமான விஷமப் பிரசாரம்தான். அந்தப் பிரசாரத்தில் வெளிப்படுத்திய அந்தக் கடிதம் கூட ஒரு கோரிக்கைக் கடிதம் மட்டும்தான். ஆனால், அதில் கையெழுத்து வைத்த அத்தனை பேரையும் துரோகிப் பட்டம் கட்டி அந்தக் கடிதத்தின் பிரதியைச் சிலர் காவிக் கொண்டு திரிந்தனர்.
இந்த விடயங்கள் எல்லாவற்றையும் தொகுத்து திட்டமிட்டு விஷமப் பிரசாரத்தைச் சிலர் முன்னெடுத்து இருக்கின்றனர். இதில் வெறுமனே தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள்தான் இருக்கின்றார்கள் என்றில்லை. தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டலாம், ஒழித்துக் கட்டலாம் எனக் கங்கணம் கட்டியவர்களின் சதியும் இதில் இருக்கின்றதா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றது.
இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சியை உடைத்து விடலாம் என்பற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் நான் கருதுகின்றேன்.
அந்தக் காரணத்தினாலே காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கூட முறைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றேன். அந்த 18 பேரும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள். அவர்களால் என்னிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கட்சியின் தலைவர் என்ற வகையில் நானும் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளேன். அது சம்பந்தமாக விசாரணைகள் நடக்கின்றன.
ஆனால், மரணத்துக்கு நாங்கள்தான் காரணம் என்று கூறுகின்ற அந்த விஷமப் பிரசாரத்தை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையில் இது எங்கள் கட்சிக்கு எதிரான திட்டமிட்ட அபாண்டமான பிரசாரம். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இங்கு இன்னுமொரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். மாவைக்கும் எனக்கும் இடையிலான உறவு 30 வருடங்களாக இருக்கின்றன. மாவைக்காகத் தேசியப்பட்டியல் கேட்டு சம்பந்தனுடன் வாதாடியதும் நான்தான். அதுமட்டுமல்லாது கட்சிக்குள்ளும் வெளியிலும் மாவைக்கு எதிராக ஏதும் நடக்கின்றபோதும் அவருக்கு ஆதரவாக நின்று பேசியவனும் நான்தான். அப்படி எங்களுக்கிடையே நல்ல உறவு இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனின் மரணச் சடங்கில் இப்படி ஒரு குழப்பமான வேலையைச் செய்தது தெய்வ நீதிக்கே மாறான ஒரு விடயம். இதை எல்லாம் யார் யார் செய்தார்கள் என்ற விசாரணையைப் பொலிஸார் ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த விசாரணையைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
குறிப்பாக அந்தப் பனர்களை அடித்தவர்கள், கொண்டு போனவர்கள், கட்டியவர்கள் எல்லாவற்றையும் பொலிஸார் பார்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாம் இருட்டிலே செய்த விடயங்கள் இல்லைத்தானே. ஆனபடியால் இந்தத் துரோகத்தின் வெளிப்பாடு கட்டாயம் வெளியில் வரும். அந்த உண்மை எப்போதும் வெளிவரும். அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
இந்தத் துரோகத்தனத்தைச் செய்தது எமது கட்சிக்காரர் மட்டுமில்லை. அரச புலனாய்வு, வெளிநாட்டுச் சக்திகள், ஊடுருவல் சக்திகள், மாற்றுக் கட்சிகள் என எல்லாமே இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
ஏனென்றால் இந்த இடத்திலே தமிழரசுக் கட்சியைப் பிளவுபடுத்தலாம், அழித்துவிடலாம் என்ற எண்ணப்பாடு அங்கே இருந்திருக்கின்றது என்பதை எங்களால் உணரக் கூடியதாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சியை அழித்து விட வேண்டுமென்ற ஒரே ஒரு காரணத்துக்காகப் பலர் கங்கணம் கட்டிக்கொண்ட திரட்சிதான் மாவையின் மரணச்சடங்கில் இவ்வாறான குழறுபடிகளைத் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர்.
கட்சியை அழித்தோ அல்லது பிளவுபடுத்தியோ செய்யக் கூடிய செயற்பாடுகளை கட்சிக்குள் இருந்து எவரும் செய்வதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கின்றன.
ஆனபடியால் கட்சியின் அடுத்த கூட்டத்தில் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்படுகின்றபோது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகப் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.” – என்றார்.