• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

மாவோயிஸ்ட் தலைவர் சரணடைந்ததாக பகிரப்படும் தகவல் – யார் இந்த திப்பிரி திருப்பதி?

Byadmin

Feb 23, 2026


திப்பிரி திருப்பதி என்கிற தேவ் ஜி
படக்குறிப்பு, திப்பிரி திருப்பதி என்கிற தேவ் ஜி

மாவோயிஸ்ட் தலைவர் திப்பிரி திருப்பதி என்கிற தேவ்ஜி தெலங்கானா காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் இருந்து வரும் தகவல்களின்படி, மாவோயிஸ்ட் உயர்மட்டத் தலைவர் தேவ்ஜியுடன், மல்லா ராஜிரெட்டி என்கிற சங்கிராமும் சரணடைந்துள்ளதாக சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா ஏஎன்ஐ-யிடம் கூறுகையில், “பசவராஜ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிறகு நக்சலைட் கமாண்டராகப் பொறுப்பேற்ற தேவ்ஜி, தெலங்கானா காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெலங்கானாவிலிருந்து தகவல் கிடைத்து வருகிறது. சத்தீஸ்கரில் தீவிரமாக இருந்த மல்லா ராஜிரெட்டி என்கிற சங்கிராமும் சரணடைந்துள்ளதாகத் தெரிகிறது. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். 2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய கூற்றை நிறைவேற்றும் நோக்கில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்றார்.

இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக பிபிசி தெலங்கானா காவல்துறையைத் தொடர்பு கொண்டது. அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும், தெலங்கானா காவல்துறைத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, “தேவ்ஜியுடன் மேலும் சில மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்,” என்று பிபிசியிடம் கூறினார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

By admin