முன்னணி நட்சத்திர நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படங்களிலும் கவனம் செலுத்தி வெற்றி பெற்று திரையுலக வணிகர்களின் நம்பிக்கையையும் தொடர்ந்து பெற்று வருகிறார்.
இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த ‘தாய் கிழவி ‘ திரைப்படம் வெளியாகி குறுகிய காலத்திற்குள் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இதற்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை படக் குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற ‘தாய் கிழவி’ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழுவினர் உற்சாகத்துடன் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பேசுகையில், ” தாய் கிழவி படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கும், ரசிகர்களை சென்றடையச் செய்த ஊடகத்தினருக்கும் நன்றி. இப்படத்தின் கதையை இயக்குநர் சொல்லும்போது சிரித்தேன்.
பவுனுத்தாயி ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரைக்கு ஏன் செல்கிறார் ?என்ற ஆர்வம் கதை கேட்கும் போதே எனக்கு இருந்தது. அதற்கான பதில் தெரிந்ததும் படத்தை தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் ரசித்த பல விடயங்களை ரசிகர்களும் கைத்தட்டி ரசித்தனர்.
அப்போது எமக்குள் இருக்கும் ரசிகன் துல்லியமானவன் தான் என உணர்ந்து கொண்டேன். இந்தத் திரைப்படம் எமக்குள் பல்வேறு உணர்வுகளை நினைவுகளை கிளறி விட்டது. கடுமையாக உழைத்து உருவாக்கிய அனைத்து நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. எம்முடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் அம்மா முத்து சூர்யா என்பவர் தான் இயக்குகிறார் ”என்றார்.
The post மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன் appeared first on Vanakkam London.