பட மூலாதாரம், Getty Images
2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா வென்றுள்ளது. ஆனால் இந்தத் தொடரின்போது நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டன.
துபையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது முகமது ஷமி மைதானத்திலே தண்ணீர் அல்லது ஜூஸ் குடிப்பதை மக்கள் கண்டனர்.
இது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், பல்வேறு பிரபலங்கள் ஷமிக்கு ஆதரவாக முன்வந்தனர்.
அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் ரமலான் மாதம், இஸ்லாத்தில் புனித மாதமாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சூழலில், ரமலான் மாதத்தில் ஒரு இஸ்லாமியர் நோன்பு கடைபிடிக்காமல் இருப்பது தவறு என மக்கள் கூறத் தொடங்கினர்.
ரமலான் மாதத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறியிருந்தார்.
மறுபுறம் பிரபல பாடலாசிரியரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் ஷமிக்கு ஆதரவாக முன்வந்து, “ஷமி, கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் தண்ணீர் குடிப்பதில் பிரச்னை உள்ள அந்த முட்டாள்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எங்களைப் பெருமைப்படுத்தும் சிறந்த இந்திய அணியின் ஒரு முக்கிய அங்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கும் அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.
ஆனால் இந்த விவாதம் இத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது இந்திய எல்லையைக் கடந்து பாகிஸ்தானையும் அடைந்தது.
ஷமிக்கு அறிவுரை வழங்கிய இன்சமாம்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் சிட்டி-42 செய்தி சேனலின் தொகுப்பாளர், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிடம் முகமது ஷமி ஆட்டத்தின்போது நோன்பு கடைப்பிடிக்காதது தொடர்பான கேள்வியைக் கேட்டார்.
“விளையாடும் போது நோன்பை கடைபிடிக்காதது பெரிய விஷயமல்ல. எனக்கு தோன்றுவது என்னவென்றால், அவர் பொதுவில் தண்ணீர் குடித்ததால்தான் அதிகமான எதிர்ப்பு ஏற்பட்டது. விளையாடும் போது நோன்பு கடைப்பிடிப்பது கடினம். எங்களுக்கும் இதில் சொந்த அனுபவம் உண்டு. நோன்பு நேரத்தில் போட்டி நடந்தால், தண்ணீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி திரைக்குப் பின்னால் சென்றுவிடுவோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய இன்சமாம்-உல்-ஹக், “திரையின் மறைவில் தண்ணீர் குடித்துவிடுவோம். ஆனால் பிறரின் முன் மரியாதையை வெளிப்படுத்துவோம். நான் அவரிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், தண்ணீர் குடிக்க வேண்டுமானால் திரையின் பின்னால் சென்று குடிக்க வேண்டும். எல்லாருக்கும் முன்னிலையில் குடிக்க வேண்டாம். நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால், நோன்பை விடுவதற்கு அனுமதி இருக்கிறது” என்றும் கூறினார்.
மேலும் “விளையாடும்போது நோன்பு கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக நோன்பு கடைப்பிடிக்கவோ கைவிடவோ கூடாது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், போட்டிகளின் போது நோன்பு இருப்பது கடினமான பணி” என்று தெரிவித்தார்.
“நான் சொல்ல விரும்புவது எல்லாம் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்பதுதான். ஷமி திரைக்குப் பின்னால் தண்ணீர் குடித்திருந்தால் எந்த சர்ச்சையும் ஏற்பட்டிருக்காது” என்றார் இன்சமாம்.
முன்னதாக, 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது முகமது ஷமி தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது.
இந்தப் போட்டியில் முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, ஷமி தரையில் அமர்ந்தார்.
அவர் அமர்ந்த விதம் அவர் தொழுகையின்போது வணங்குவதைப் போல் தோன்றியது. ஆனால் அதற்குப் பிறகு அவர் உடனே எழுந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சர்ச்சையைத் தவிர்க்கவே ஷமி தன்னை தடுத்துக்கொண்டார் என்று மக்கள் கூறத் தொடங்கினர்.
ஆனால், பிப்ரவரி 2024 இல், ஒரு யூடியூப் சேனலுடன் பேசுகையில், “நான் தொழுகை செய்ய விரும்பினேன், ஆனால் அதைச் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டனர். அவர்களுடைய மனதில் என்ன ஆசை இருக்கிறதோ, அதையே அவர்கள் கூறினார்கள்” என்று முகமது ஷமி அந்த சர்ச்சை குறித்து கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலில், நான் யாருக்கும் பயப்படவில்லை. நான் ஒரு இஸ்லாமியர். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு, நாடுதான் முதலில் முக்கியம், இது யாரையாவது தொந்தரவு செய்தால், எனக்கு கவலையில்லை. நான் தொழுகை செய்ய விரும்பினால், அப்படியே செய்திருப்பேன்”என்றும் தெரிவித்தார்.
சக்லைன் முஷ்டாக் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஷமி நோன்பு இருக்கவில்லை என்ற சர்ச்சை குறித்து, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஷ்டாக் கூறுகையில்,”மக்கள் ஏன் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நாம் நல்ல மனிதர்களாக மாறுவதிலும், நேர்மறையான விஷயங்களுடன் முன்னேறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் நாம் எதைப் பற்றி விவாதிக்கிறோம்? சிறிதளவு கூட பயனளிக்காத விஷயங்களைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் இந்த விஷயங்களில் சற்று அதிகமாக ஈடுபடுகிறோம். இதுபோன்ற செயல்கள் பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அதிகரித்து வருகின்றன” என்றார்.
இன்சமாம் சக்லைனை குறுக்கிட்டு, “பிரச்னை என்னவென்றால், நல்ல வேலை செய்வதால் யாரும் பிரபலமடைவதில்லை. நீங்கள் ஒருவரை அவமதித்தாலோ அல்லது ஒருவரை இகழ்ந்தாலோ தவிர, நீங்கள் பிரபலமடைய மாட்டீர்கள். நான் சக்லைனைப் புகழ்ந்தால், யாரும் கேட்க விரும்ப மாட்டார்கள். நான் கெட்ட காரியங்களைச் செய்தால், மக்கள் என்னை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
சுனில் கவாஸ்கர் மீது கோபமடைந்த இன்சமாம்
பிப்ரவரி 24 அன்று, சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டுடேவிடம், “இந்தியாவின் பி அணியால் கூட இப்போது பாகிஸ்தானை வெல்ல முடியும்” என்று கூறினார்.
கவாஸ்கரின் இந்தக் கருத்து இன்சமாமுக்குப் பிடிக்கவில்லை.
இன்சமாம், கவாஸ்கரை கடுமையாக விமர்சித்து, “இந்தியா இந்த முறை வென்றது அவர்கள் நன்றாக விளையாடியதால்தான். ஆனால் கவாஸ்கர் சில தரவுகளை உற்றுநோக்க வேண்டும்.” என்றார்.
“யாராவது எங்களை விட மூத்தவராக இருந்தால், நாங்கள் அவரை மதிக்கிறோம், ஆனால் எந்த நாட்டைப் பற்றி பேசும்போதும் இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லக்கூடாது. உங்கள் அணியை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம், ஆனால் மற்றவர்களைப் பற்றி இதுபோன்ற விஷயங்களைச் சொல்வது பொருத்தமற்றது.
இன்றைய புள்ளிவிவரங்களைப் பார்த்தாலும், எத்தனை போட்டிகளில் நாங்கள் இந்தியாவைத் தோற்கடித்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்படி ஒரு கருத்தைச் சொல்லி உங்கள் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார்.
“உங்கள் நாட்டையும் உங்கள் வீரர்களையும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம், ஆனால் வேறு எந்த நாட்டைப் பற்றியும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லாதீர்கள். பேசும்போது கவனமாகப் பேசுங்கள். நான் இதை மிகவும் கடுமையான வார்த்தைகளில் சொல்கிறேன்” என்று இன்சமாம் தெரிவித்தார்.
இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தியது. ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த பிறகு, சில போட்டிகள் துபைக்கு மாற்ற வேண்டியிருந்தது. இந்தியா தனது அனைத்துப் போட்டிகளையும் துபையில் மட்டுமே விளையாடியது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா இறுதிப் போட்டியை எட்டியதால், இறுதிப் போட்டியும் துபையில் நடைபெற்றது.
இந்தியாவின் இந்த அணுகுமுறையால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு