• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

​முடிந்தால் நீக்கிப் பார்..! – மல்லை சத்யா Vs துரை வைகோ | mallai sathya vs Durai vaiko

Byadmin

Apr 20, 2025


மதிமுக துணைப் பொதுச்​செய​லாளர் மல்லை சத்யா​வுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்​பிலிருந்து தாமாகவே விலகி இருக்​கிறார் துரை வைகோ. கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் நிலையில் துரையின் இந்த முடிவு மதிமுக-வுக்குள் பெரும் புகைச்சலை உண்டாக்கி இருக்​கிறது.

மகனின் இந்த முடிவு தமக்கு அதிர்ச்​சி​யளிப்பதாக தெரிவித்​திருக்​கிறார் மதிமுக பொதுச்​செய​லாளர் வைகோ. ஆனால், இதெல்லாமே மல்லை சத்யாவை வெளியேற்​று​வதற்காக நடக்கும் ஒத்திகை என்கி​றார்கள் நடுநிலையான மதிமுக-​வினர். திமுக-வில் வாரிசு அரசியல் நடப்ப​தாகச் சொல்லி மதிமுக-வை உருவாக்கிய வைகோ, “எக்காலத்​திலும் என் மகனோ, என் தம்பியோ தாயகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்​க​மாட்​டார்கள். இது எனது அம்மாவின் மீது ஆணை… பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணை” என்று சொன்னார்.

ஆனால் அதே வைகோ, தனது உடல் நிலையைக் காரணம் காட்டி மெல்ல மெல்ல கட்சி நிர்வாகிகள் மூலமே மகனை கட்சியின் முதன்மைச் செயலாளராக கொண்டு வந்து தற்போது எம்பி-யும் ஆக்கி​விட்​டார். “இதில் தனது விருப்பம் ஏதுமில்​லை… எல்லாம் கழகத் தோழர்கள் எடுத்த முடிவு” என கலைஞர் பாணியில் வைகோ சொல்லலாம். ஆனால், அவர் விரும்​பினாரோ இல்லை​யோ… துரையின் கைக்குள் மதிமுக வரவேண்டும் என வைகோவின் குடும்​பத்தில் இருப்​பவர்கள் விரும்​பிய​தாகச் சொல்கி​றார்கள்.

இதுகுறித்து இன்னும் விரிவாக நம்மிடம் பேசிய மதிமுக தோழர்கள் சிலர், “2024 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியை மீண்டும் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்​திக்கு கொடுக்க திமுக தலைமை தயாராகவே இருந்தது. இதற்காக டி.ஆர்​.பாலு மூலமாக பேச்சு​வார்த்தை நடத்தி வைத்திருந்தார் கணேசமூர்த்தி. ஸ்டாலினும், ஈரோடு திமுக-வில் விருப்ப மனு கொடுத்​திருந்​தவர்​களிடம் நேர்காணல் நடத்தி முடித்​து​விட்டு, ’மீண்டும் கணேசமூர்த்தியே நின்றால் எப்படி இருக்​கும்?’ என அவர்களிடம் கேட்டிருக்​கி​றார். “அவருக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்​கும்” என திமுக-​வினரும் சொல்லி இருக்​கி​றார்கள்.

ஆனால், துரை வைகோவை திருச்​சியில் நிறுத்த வேண்டும் என்பதற்​காகவே ஈரோட்டை வாங்காமல் விட்டு​விட்​டார்கள். அந்த வருத்தம் காரணமாக வாடிப் போயிருந்த கணேசமூர்த்​தியின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்​சிக்கு உள்ளாக்​கியது. தமிழகத்தில் 10 மாவட்​டங்​களில் மதிமுக-வுக்கு கட்சி அலுவலகம் இருக்​கிறது. கணேசமூர்த்தி தான் முதன் முதலில் ஈரோட்டில் மதிமுக-வுக்கு கட்சி அலுவலகம் வாங்கி​னார். ஆனால், அவர் இறந்த பிறகு அந்த அலுவல​கத்தில் இருந்த, அவருக்காக தரப்பட்ட நினைவுப் பரிசுகளை அங்கிருந்து எடுக்கச் சொல்லி இருக்​கி​றார்கள்.

மதிமுக தலைமையகமான தாயகம் உருவான போது, செஞ்சி​யார், மு.கண்​ணப்பன், பொன்முத்து, எல்.கணேசன் போன்றவர்கள் எல்லாம் மதிமுக-வில் இருந்​தார்கள். அதனால் தாயகம் திறப்பு விழா கல்வெட்டில் அவர்களது பெயர்​களும் இருந்தன. இப்போது அந்தக் கல்வெட்டு போன இடம் தெரிய​வில்லை. இப்படி தடயங்களை அழிப்​ப​திலேயே சிலர் குறியாக இருக்​கி​றார்கள்.

முன்னாள் அமைச்சர் மு.கண்​ணப்பனை காலி செய்வதற்கு அவைத் தலைவர் துரைசாமியைக் கொண்டு வந்தார்கள். அவரை காலி செய்ய அவருக்கு நெருக்கமான கணேசமூர்த்தியை ஊக்கு​வித்​தார்கள். கடைசியில் கணேசமூர்த்​தியும் இல்லாமல் போய்விட்​டார். இதேபோல் மதுரையில் வைகோவின் ஃபீல்டு மார்ஷலாக இருந்த பொன்.​முத்​து​ரா​மலிங்​கத்​துக்கு எதிராக அவரது விசுவாசிகளான இளவரசன், நாச்சி​யப்பன், சின்னச் செல்லம், புலவர் செவந்​தி​யப்பன் ஆகியோரை கொம்பு சீவினார்கள்.

செஞ்சி ராமச்​சந்​திரனை செல்லாக்​கா​சாக்க அவரது விசுவாசியான மாசிலாமணி​யை​யும், அவரை மட்டம் தட்ட ஏ.கே.மணி​யையும் உருவாக்கி வளர்த்​தார்கள். இப்படி கட்சியில் பவர்ஃபுல்லாக இருந்த பலரையும் மதிமுக-வை விட்டு ஓரங்கட்ட ஆளுக்கொரு உத்தியைக் கையாண்​டார்கள்.

ஆனால், இவர்கள் எல்லாம் திமுக-​விலிருந்து மதிமுக-வுக்கு வந்தவர்கள். மல்லை சத்யா அப்படியல்ல… மதுராந்தகம் ஆறுமுகத்தின் பாதுகாப்புப் படையில் இருந்த மல்லை சத்யா, மதிமுக தொடங்கிய போதே வைகோ பின்னால் வந்தவர். அப்படிப்​பட்டவர் இப்போது ஒரு சிலரது கண்களை உறுத்​துகி​றார்” என்று சொன்னார்கள்.

அண்மையில் சென்னையில் மதிமுக நிர்வாகி ஒருவர் வைத்த பேனரில், வைகோவுக்கு அடுத்து மல்லை சத்யாவின் படத்தைப் போட்டிருக்​கி​றார். இந்த நிலையில், மதிமுக தொழிற்​சங்கமான எம்எல்எஃப் நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் மல்லை சத்யா கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் நடவடிக்​கை​களில் ஈடுபடுவதாக நேருக்கு நேராகவே குற்றம் சாட்டி​னாராம் துரை வைகோ.

இதையடுத்து, தன்னைச் சங்கடப்​படுத்தும் விதமாக யாரும் பதிவு​களைப் போட வேண்டாம் என சமூக ஊடகத்தில் வேண்டுகோள் விடுத்தார் சத்யா. அதேசமயம், ‘வைகோ, துரை வைகோ அவருக்குப் பின்னால் வருண் வைகோவை ஏற்றுக்​கொள்ளக் கூடிய​வர்கள் மட்டும் கட்சியில் இருக்​கலாம். இதை ஏற்கமுடி​யாதவர்கள் வெளியேறலாம்’ என துரை வைகோ விசுவாசி ஒருவர் பதிவு ஒன்றைப் போட்டார்.

இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் பரமேஸ்வரன் மல்லை சத்யா​வுக்கு ஆதரவாக போட்ட பதிவில், ‘முடிந்தால் நீக்கிப் பார்’ என்ற தொனியில் வைகோவை​யும், துரை வைகோவையும் தரக்குறைவான வார்த்​தைகளில் விமர்சனம் செய்திருக்​கி​றார். இதையடுத்து, மதுரை மாநகர் மாவட்டச் செயலா​ளரும் எம்எல்​ஏ-வுமான புதூர் பூமிநாதனை தொடர்பு கொண்ட​வர்கள், பரமேஸ்வரனை கட்சியி​லிருந்து நீக்க தீர்மானம் போடச் சொல்லி அழுத்தம் கொடுத்​திருக்​கி​றார்கள்.

துரை வைகோ சிபாரிசில் எம்எல்​ஏ-வாகி இருக்கும் பூமிநாதன், கடந்த 18-ம் தேதி மாவட்டக் கழகக் கூட்டத்தைக் கூட்டி, பரமேஸ்வரனை நீக்க தீர்மானம் போட்டு அனுப்பி இருக்​கி​றார். ஆனால், பரமேஸ்வரனை மட்டுமல்லாது மல்லை சத்யா​வையும் நீக்க பூமிநாதன் தீர்மானம் போடுவார் என எதிர்​பார்த்​ததாம் துரை வைகோ தரப்பு.

இதுபோன்ற தொடர் நடவடிக்​கைகள் சத்யா​வுக்கு ஆதரவு என்பதைவிட அவருக்கான அனுதாப அலையாக மதிமுக-வுக்குள் அடிக்க ஆரம்பித்​திருக்​கிறது. இந்த அலையானது கட்சிக்குள் புயலை உண்டாக்​கலாம். இன்றைய நிர்வாகக் குழுவில் இது பிரச்​சினையாக வெடிக்​கலாம். இதையெல்லாம் நீர்த்துப் போகச் செய்யவே பொறுப்​பிலிருந்து விலகுவதாக துரை வைகோ ஸ்டண்ட் அடித்​திருப்பதாக சொல்கி​றார்கள்.

மக்களவைத் தேர்தலில் “செத்​தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டி​யிடு​வேன்” என்று சொல்லி உதயசூரியனில் போட்டியிட மறுத்தவர் துரை வைகோ. இது அப்போது திமுக-​வினரை முகம்​சுளிக்க வைத்தது. அப்படி இருக்​கை​யில், 2026-ல் மதிமுக-வுக்கு அங்கீ​காரம் கிடைக்கும் வகையில் செயல்​திட்டம் வைத்துள்ளேன் என்கிறார் துரை வைகோ.

இதையும் சுட்டிக்​காட்டும் மதிமுக நிர்வாகிகள் சிலர், “குறைந்தது 8 தொகுதி​களில் போட்டி​யிட்டால் தான் பொது சின்னம் கிடைக்​கும். அதன் பிறகு அந்தத் தொகுதி​களில் போட்டி​யிட்டு குறிப்​பிடத்தக்க வாக்குகளை பெற்றால் தான் அங்கீ​காரம் கிடைக்​கும். கடந்த முறை திமுக, 6 தொகுதிகளை மதிமுக-வுக்கு தந்தது. அதில் 4 தொகுதி​களில் வெல்ல​முடிந்தது. இம்முறையும் திமுக அதற்கு மேல் தர வாய்ப்​பில்லை.

அப்படி இருக்க, மதிமுக எப்படி 8 தொகுதி​களில் போட்டியிட முடியும்? ஜெயிக்கும் வாய்ப்பைப் பறிகொடுக்கும் விதமாக வேறு கூட்ட​ணியில் போட்டி​யிட்டால் அது கட்சிக்குள் மற்றவர்​களின் வளர்ச்சியை முடக்​கு​வ​தாகவே அமையும். அதைத் தான் துரை வைகோ விரும்​பு​கிறாரோ என்னவோ” என்கி​றார்கள்.

1993-ல் திமுக-வில் தனக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, “நான் நீதி கேட்கிறேன்” என புரட்சிப் புயலாகப் புறப்​பட்டார் வைகோ. அப்போது அவருக்கு இருந்த எழுச்சியை அடக்கு​வதற்காக, “நான் தலைவர் பொறுப்​பிலிருந்து விலகு​கிறேன். நீங்களே யாராவது கட்சி தலைவராக இருந்து கொள்ளுங்கள்” என பதிலுக்கு கருணாநி​தியும் ஓர் அறிக்கை வெளியிட்​டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கருணாநி​திக்கு ஆதரவாக ஆர்ப்​பாட்​டங்​களும் உண்ணா​விரதப் போராட்​டங்​களும் நடத்தப்​பட்டன. அத்துடன், வைகோவுக்கு எதிராகவும் அறிக்​கைகள் பறந்தன. இதையடுத்து, தலைவர் பதவி விலகல் முடிவை வாபஸ் பெற்றார் கருணாநிதி. இதன் தொடர்ச்​சியாக, வைகோவை கட்சியி​லிருந்து நீக்க வேண்டும் என முதல் தீர்மானத்தை சிவகங்கை மாவட்ட திமுக-வில் தா.கிருட்​டிணன் நிறைவேற்​றி​னார். அதன் தொடர்ச்​சியாக இன்னும் பல மாவட்​டங்​களும் இதை வழிமொழிந்தன.

அதேபோல் துரை வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மல்லை சத்யாவை கட்சியி​லிருந்து நீக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டக் கழகங்கள் வரிசையாக இனி தீர்மானங்களை நிறைவேற்றும் என எதிர்​பார்க்​கலாம் என்கி​றார்கள். அதேசமயம், “எத்தனை நெருக்​கடிகள் வந்தாலும் வைகோ-வுக்கோ மதிமுக-வுக்கோ எத்தகைய ஊறும் செய்ய​மாட்​டேன்” என்று சொல்லும் மல்லை சத்யா, துரையைப் போல் தாமாக முன் வந்து பொறுப்​பிலிருந்தோ கட்சியி​லிருந்தோ விலகும் முடிவை எடுக்க மாட்டார் என்கி​றார்கள்.

கட்சிக்காக தனது பாட்டியும் தாய்மாமன் மகனும் இன்னுயிர் தந்திருப்பதாக தன்னுடைய பொறுப்பு விலகல் அறிக்​கையில் ஆதங்கப்​பட்​டிருக்​கிறார் துரை வைகோ. இப்போது நடப்பதை எல்லாம் பார்த்​தால், வாரிசு அரசியலை எதிர்த்து வாளேந்தி புறப்பட்ட வைகோவுக்காக தீக்குளித்து மடிந்த இடிமழை உதயன் உள்ளிட்ட அறுவரின் உயிர் தியாகமும் அர்த்​தமற்​றதாகி விடும் போலிருக்​கிறதே… அதைப்​பற்றி கவலைப்படப் போவது யார்?



By admin