இது ஒரு சண்டை நிறுத்தம் என்று அழைக்கப்படாவிட்டாலும், தெஹ்ரானில் அதிகாலை 4:00 மணிக்கு தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்ற காலக்கெடு அளிக்கப்பட்டபோது, இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ‘இரான் இந்த போர் நிறுத்தத்தை மீறியதாக’ குற்றம் சாட்டி, அதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளித்தபோது, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பலவீனம் முழுமையாக வெளிப்பட்டது. இருப்பினும், போர் நிறுத்த மீறல் தொடர்பான குற்றச்சாட்டை இரான் மறுத்துள்ளது.
வெளிப்படையான பதற்றங்கள் இருந்தாலும், இதுவும் கடந்து போகக்கூடிய ஒரு கட்டம் தான் என்றும், இறுதியில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மதிப்பார்கள் என்றும் டிரம்ப் நிர்வாகம் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பும்.
சனிக்கிழமை அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதாக அளித்த சூளுரையை , இரான் நிறைவேற்றியது. அதன் பிறகு, அப்பிராந்தியத்தில் ஒரு கொந்தளிப்பான நாளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள பெரிய அமெரிக்க தளத்தை நோக்கி இரான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாகவும், அங்கு அமெரிக்க வீரர்களுக்கு எந்த உயிரிழப்போ அல்லது சேதமோ இல்லை என்றும் தொடக்கத்தில் வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் டிரம்ப், அமெரிக்க நலன்கள் மீது இரான் எந்தவொரு தாக்குதலும் மேற்கொண்டால் அதற்கு அமெரிக்கா மிகத் தீவிரமாக பதிலளிக்கும் என்று எச்சரித்தார். தேவைப்பட்டால், அமெரிக்கப் படைகளால் தாக்கக்கூடிய இன்னும் பல இலக்குகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
அடுத்து இரான் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பார்க்க 24 மணி நேரத்திற்கும் மேலாக உலகம் காத்திருந்தது. இரான் நடவடிக்கை எடுத்தவுடன், கவனம் முழுதும் அமெரிக்க அதிபரை நோக்கித் திரும்பியது.
அதன் பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது முதல் கருத்தைத் தெரிவித்தார்.
“இரான், அவர்களின் அணுசக்தி நிலையங்களை அழித்ததற்கான பதிலாக மிக பலவீனமான பதிலை கொடுத்துள்ளது. அந்த பதிலை எதிர்பார்த்த நாங்கள், திறமையாக அதனை எதிர்கொண்டோம்”என்று டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இரான் தங்கள் கோபத்தை “வெளிப்படுத்திவிட்டது” போலத் தெரிகிறது. “இனி வெறுப்பு இல்லாமல், இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிச் செல்ல முடியும்” என்றும் டிரம்ப் கூறினார்.
சேதம் குறைவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் நம்பிக்கையில் டிரம்ப் தனது தாக்குதலை நிறுத்த விரும்புவதாகத் தோன்றியது. அதே நேரத்தில், போர் நிறுத்தம் குறித்த விஷயங்களை முடிவுக்குக் கொண்டு வர, கத்தார் மத்தியஸ்தர்களுடனும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனும் அவர் பேசி வந்ததாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
இரான் மீது டிரம்ப் கடந்த வார இறுதியில் நடத்திய தாக்குதல், மிகுந்த ஆபத்துடன் கூடிய ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், அதன் பலன்கள் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ளன.
2020ம் ஆண்டு ஜனவரியில், பாக்தாத்தில் இரானிய புரட்சிகர காவல்படை தலைவர் காசிம் சுலைமானியை குறிவைத்து கொல்ல டிரம்ப் உத்தரவிட்டபோதும் இதேபோன்ற சூழ்நிலை உருவானது.
இரான், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணைகள் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். ஆனால், அதற்கு அமெரிக்கா கடுமையாக பதிலளிக்க விரும்பவில்லை. இறுதியில், அச்சூழல் அமைதியாக முடிவுக்கு வந்தது.
அமெரிக்க ஊடகங்களின் படி, திங்களன்று இரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்கத் தளங்களை நோக்கி அவர்கள் ஏவிய ஏவுகணைகளின் எண்ணிக்கை, வார இறுதியில் அமெரிக்க போர் விமானங்கள் வீசிய மொத்த குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தது.
ஏவுகணை தாக்குதலுக்கு முன்னர், இரான் கத்தார் அரசுக்கு முன் அறிவிப்பு கொடுத்தது. அதற்காக டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
இதனைப் பார்க்கும்போது, இரான் பெரியளவில் பதிலடி கொடுக்க விரும்பாமல், சமமான அளவில் பதிலடி கொடுக்க முயன்றதாகத் தெரிகிறது.
அந்த நாளின் பெரும்பகுதியில், டிரம்பின் கவனம் முழுதும் எண்ணெய் விலை, அமெரிக்க ஊடகங்களின் செய்திகள் மற்றும் முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், இரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த கருத்து ஆகிவற்றின் மீது இருந்தது.
அதிபர் டிரம்ப் அச்சுறுத்துவதோடு நிறுத்தாமல் அவற்றை நிறைவேற்றுகிறார் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர், இது அவருக்கு முன்பு பதவி வகித்த அதிபர்களிடம் இருந்து வேறுபடுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரான் மேலும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது பெரிய சேதம் ஏற்பட்டாலோ, டிரம்ப் பதிலளிக்க வேண்டும் என்று பெரும் அழுத்தம் ஏற்படும்.
ஆனால், தற்போது டிரம்ப் மோதலை தவிர்க்கும் வழியைத் தேடுவதாகத் தெரிகிறது, அதற்கு இரு நாடுகளும் சம்மதிக்க தயாராக உள்ளன.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு