• Sun. Jun 22nd, 2025

24×7 Live News

Apdin News

முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் குவியும் பக்தர்கள் – 1,500 போலீஸார் பாதுகாப்பு | Murugan Devotees’ Conference: Devotees Gather on Madurai – 1,500 Police Personnel for Security

Byadmin

Jun 21, 2025


மதுரை: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்டோர் வருகை தரவுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர், ஆன்மிக அமைப்பினர் சனிக்கிழமை மாலையிலேயே வாகனங்களில் மதுரைக்கு வரத் தொடங்கிவிட்டனர். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் லோக நாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எப்படி இருக்கிறது மாநாட்டுப் பகுதி? – மாநாட்டின் திடலில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு மேடையின் பின் பகுதியில் திருப்பரங்குன்றம் மலையை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன. மாநாட்டுத் திடலில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு இந்து முன்னணி கொடிகளும், தோரணங்களும் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முருகன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிக்கின்றன.

ரிங் ரோடு பகுதியே முருகன் கோயில் தலம் போல மாறியிருக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடு முழுவதும் நிறைவுற்று மாநாடு தொடக்க நிகழ்வுக்கான பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மதுரை அண்ணாநகர், கே.கே.நகர் பகுதியில் பெரும்பாலான தனியார் லாட்ஜ்-களும் நிரம்பியுள்ளன. இந்த மாநாட்டுக்கு என சுமார் 10,000 வாகனங்கள் வரும் என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடங்கள் குறித்து வழிகாட்டுவதற்கு காவல் நிலையம் வாரியாக வழிக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கவனிக்க சிறப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு தொடங்கும் முன்பு கந்த சஷ்டி, முருகன் பாடல்களை ஒலிக்கும் விதமாக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாநாட்டில் முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப் படவுள்ளன.

போக்குவரத்து மாற்றம்: முருக பக்தர்கள் மாநாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க வாகனங்களில் வருவதால், அவர்களுக்கு வசதியாகவும், பொதுமக்கள் இடையூன்றி செல்வதற்கும் சில வழித்தட போக்கு வரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. | பார்க்க > எப்படி இருக்கிறது முருக பக்தர்கள் மாநாடு வளாகம்? – புகைப்படத் தொகுப்பு



By admin