மதுரை: “மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு ஓர் ஆன்மிக நிகழ்ச்சி அல்ல. மாறாக, பாஜக பரிவாரம் நாடு முழுவதும் செய்து வரும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியே. அவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல; கலவர உத்தியே என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்,” என முருக பக்தர்கள் மாநாடு குறித்து திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முருக பக்தர் மாநாடு குறித்து திமுக சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் கோ.தளபதி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர் மாவட்டக்குழு செயலாளர் மா.கணேசன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் எம்.சி., மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சி மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்தக் கூட்டறிக்கையில், “மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு ஓர் ஆன்மிக நிகழ்ச்சி அல்ல. மாறாக பாஜக பரிவாரம் நாடு முழுவதும் செய்து வரும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியே. அவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல; கலவர உத்தியே என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பாஜக பரிவாரம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் அவதாரத்தை எடுத்து மக்களிடையே பிளவையும், கலவரத்தையும் ஏற்படுத்த முயல்கிறது.
பிள்ளையார் சதுர்த்தி, ராமர் கோயில் என்பன போன்ற அவர்களது சித்து வேலை தமிழ்நாட்டில் எடுபடாததால், தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துகிறோம் என்று மாய்மாலம் செய்கின்றனர். ஆர்எஸ்எஸ், பாஜக அனைத்து வகையிலும் தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்கிறது. சங்க இலக்கிய பாடல்கள் எடுத்துரைக்கும் தமிழர் நாகரிகம் மற்றும் வாழ்வியலுக்கான பொருண்மைச் சான்றுகளை கீழடி அகழ்வாய்வு எடுத்துரைக்கிறது.
கீழடி குறித்து அறிவியல் பூர்வமாக செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை கூட வெளியிட மறுக்கிறது. தமிழ்க் கடவுள் முருகன் என்று கூறிக்கொண்டே மறுபுறத்தில், இந்தி , சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கம் காட்டுகிறது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இந்தித் திணிப்பை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது.
பல் சமய பன்மைத்துவத்தின் அடையாளமாக திகழும் திருப்பரங்குன்றம் மலைக்கு ஆபத்து என்று இல்லாத ஒன்றை பொல்லாத வகையில் பொய்ப் பிரச்சாரம் செய்தது மத்திய அரசுதான். பல்லுயிர் சூழலியல் மண்டலமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் விளங்கும் அரிட்டாபட்டி மலையை வேதாந்தா என்ற கார்ப்பரேட் முதலாளிக்கு கைமாற்றி விடமுயன்றது என்பதை தமிழ்நாட்டு மக்களும், மதுரை மாவட்ட மக்களும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் மதநல்லிணக்க பாரம்பரியத்தை சீர்குலைப்பதற்காக ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரத்தால் நடத்தப்படும் மாநாட்டை உண்மையான பக்தர்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் புறக்கணிப்பர். மாநாட்டுக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கவை அல்ல என்று இப்போதே பாஜக, ஆர்எஸ்எஸ் பரிவாரம் அடாவடி செய்கிறது.
நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். வெறுப்பு அரசியலை விசிறி விடுவதற்காகவே நடத்தப்படும் இந்நிகழ்வினால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல் துறை எடுக்கவேண்டும்” என்று அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.