மேட்டூர் / தருமபுரி: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 8,218 கனஅடியாகவும், மாலை 16,341 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று காலை 18,220 கனஅடியாகவும், மாலை 22,469 கனஅடியாகவும் அதிகரித்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 113.81 அடியாகவும், நீர் இருப்பு 83.94 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.