மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நடப்பாண்டில் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறையாக எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது.
அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 29,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 23,300 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு பிறகு 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டது.
அதேநேரத்தில், அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 22,500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.