• Sun. May 17th, 2026

24×7 Live News

Apdin News

மே 18 | வசந்ததீபன்

Byadmin

May 17, 2026


மனிதம் கருகிய நாள்
ரத்தம் நனைத்த‌ தினம்
கண்ணீர் பெருக்கெடுத்த நிலத்தின்
கனவுகள் சிதைந்தழிந்த தமிழினத்தின்
வார்த்தைகள் ஒழிந்தே காலத்தின் குரல்வளை நெரிபட்ட ஓலங்கள்
துரோக வரலாற்றை எழுதி காற்றின் முகத்தில்
விசிறியடிக்கிறது
மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வது ஏனென்று ?
அலைகளின் கொந்தளிப்பில் நீளும் கூக்குரல்கள்
இனப்படுகொலைகளின் வெறியாட்டங்களை
அலறி நொடி தோறும் சொல்லிக் கொண்டிருக்கின்றன
எரிந்த தீயில் கரிந்த பிணங்களின் வீச்சம்
பிரபஞ்சத்தின் வெளிகளில் அழியாத கறையாக படர்ந்து கொண்டிருக்கிறது
அடைமழையில் வெப்ப பெருமூச்சு விடும்
அதன் ஒவ்வொரு மணல்துகள்களும்
யாவற்றையும் வேடிக்கை பார்த்த புத்தன் அனாதைச் சடலமாய் அழுகிக்கிடக்கிறான்
தலைவிரிகோலமாய் நெருப்பு கனியும் விழிகளோடு பெண்ணொருத்தி
செங்காந்தள் மலர் மாலையணிந்த பெண்ணொருத்தி
பனங்கருக்கில் வாள் செய்கிறாள்
பழிதீர்க்கும் நாளுக்காக.

வசந்ததீபன்

The post மே 18 | வசந்ததீபன் appeared first on Vanakkam London.

By admin