மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஸ்காந்த் , சிங்கம் புலி மற்றும் பலர்.
இயக்கம் : அஜயன் பாலா
மதிப்பீடு : 2 / 5
இசைஞானி இளையராஜா – ஒளிப்பதிவாளர் செழியன் – எழுத்தாளர் அஜயன் பாலா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘மைலாஞ்சி’ – ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா ? என்பதை தொடர்ந்து காண்போம்.
வன விலங்குகளையும், பறவைகளையும் பிரத்யேகமாக கமெராவில் பதிவு செய்யும் புகைப்படக் கலைஞரான சூர்யா- சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இவர் ஒப்பந்த அடிப்படையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அபூர்வமாக காட்சியளிக்கும் லாஃபிங் த்ரஷ் எனும் பிரத்யேக பறவையை புகைப்படம் எடுப்பதற்காக சென்னையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார்.
ஊட்டியில் ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சார்ந்த சாரல் அண்டனி ஜோன்சன் எனும் பெற்றோரை இழந்து சித்தியின் பராமரிப்பில் வளரும் இளம்பெண்ணை சந்திக்கிறார்.
சந்தித்த உடன் அந்தப் பெண் மீது காதல் கொள்கிறார். பின்னர் சூர்யாவும் , சாரலும் காதலில் வெற்றி பெற்று திருமண பந்தத்தில் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
எந்த அழுத்தமான திருப்பங்களும் இல்லாமல் இயல்பான பெண் நாவலாசிரியை ஒருவரின் நாவலை போல் திரைக்கதை பயணிக்கிறது. இதில் ஒளிப்பதிவு, பின்னணி இசை மட்டும் ரசிகர்களின் கண்களையும், காதுகளையும் ஆக்கிரமிக்கிறது.
சூர்யாவாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் புகைப்படக் கலைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதுடன் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த சில தருணங்களையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்.
இக்கதையின் மையப்புள்ளியான சாரல் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷா குரூப்- முகத்தில் இளமையைத் தொலைந்திருந்தாலும் ஒளிப்பதிவாளரின் நுட்பமான திறனால் திரையில் அழகாக தோன்றி ரசிகர்களை வசீகரிக்கிறார்.
திரைக்கதையின் சுவராசியத்திற்காக பாவிக்கப்பட்டிருக்கும் கதிர் எனும் கதாபாத்திரம் – தமிழ் சினிமாவின் காதல் கதைகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ‘அமெரிக்க மாப்பிள்ளை’ ரகம். இருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் திரையில் தோன்றி தன் அனுபவம் மிக்க நடிப்பால் ஆறுதல் அளிக்கிறார்.
சிங்கம் புலி – முனிஸ்காந்த் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து தோல்வியை சந்திக்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு திரைப்படத்திலும் திரைக்கதையை கடந்து ஒளிப்பதிவோ… பாடல்களோ.. பின்னணி இசையோ.. துருத்திக் கொண்டு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் இந்த படத்தில் இவை இரண்டு மட்டும் தான் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
புகைப்பட கலை குறித்து அத்துறையில் அனுபவம் மிக்க ஒருவரின் உரையாடல்- இயக்குநர் அஜயன் பாலாவின் தொடர் புத்தக வாசிப்பிற்கான அடையாளம்.
மைலாஞ்சி – ஆள் அரவமற்ற அருவி
The post மைலாஞ்சி | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.