பட மூலாதாரம், Getty Images/bbc
சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன.
தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
முன்னதாக தங்கள் பாதுகாப்புப் படைகளில் இஸ்ரேலிய உளவுத்துறை ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
ஜூன் 13 அன்று இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டுள்ளனர், இது இஸ்ரேல் அவர்களின் இருப்பிடம் குறித்து உளவுத்துறை தகவல்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கிறது.
இந்த நிகழ்வுகளில் மொசாட்டின் பங்கை மதிப்பிடுவது எளிதல்ல. இஸ்ரேல் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது மற்றும் உளவுத்துறையின் பிற பிரிவுகளும் உள்ளன.
ஆனால் மொசாட் அமைப்பின் குறிப்பிடத்தக்க கடந்தகால செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மொசாட்டின் வெற்றிகள்
பட மூலாதாரம், Anadolu via Getty
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31, 2024 அன்று டெஹ்ரானில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் ஆரம்பத்தில் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தக் கொலைக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்ததை ஒப்புக்கொண்டார்.
ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஹனியேவை, ஒரு ஏவுகணை ‘நேரடியாக’ தாக்கியதாக ஹமாஸின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஹனியேவுடன் இருந்த சாட்சிகளை மேற்கோள் காட்டி அவர் இதைக் கூறினார்.
ஆனால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஏழு அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, ஹனியே தங்கியிருந்த கட்டடத்திற்குள், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மறைத்து கொண்டுசெல்லப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசியால் இந்தக் கூற்றுகளில் எதையும் சரிபார்க்க முடியவில்லை.
2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல ஹமாஸ் தலைவர்களில் ஹனியேவும் ஒருவர்.
இதில் காஸாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், அவரது சகோதரர் முகமது, ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில இருந்த தலைவர் மர்வான் இசா ஆகியோர் அடங்குவர்.
ஹெஸ்பொலா அமைப்பின் சாதனங்கள் வெடித்த நிகழ்வு
பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 17, 2024 அன்று, லெபனான் முழுவதும் முக்கியமாக வலுவான ஹெஸ்பொலா இருப்பு உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இந்த வெடிப்புகள் பயனர்களையும் அருகிலுள்ள சிலரையும் காயப்படுத்தின அல்லது கொன்றன.
மறுநாள் வாக்கி-டாக்கிகள் அதே பாணியில் வெடித்தன. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த நேரத்தில், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் ஒரு மோதலில் ஈடுபட்டிருந்தன. இது அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, இஸ்ரேலிய நிலைகள் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியதின் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் ஒரு பகுதியாகும்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல்தான் இதற்குப் பொறுப்பு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக அப்போது இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ்ஸுக்கு இரண்டு முன்னாள் மொசாட் ஏஜென்ட்கள் அளித்த பேட்டியில், இந்த நடவடிக்கையின் விவரங்களை வெளியிட்டனர்.
மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், பொதுவாக இந்த வாக்கி-டாக்கிகள் ஒருவரின் இதயத்திற்கு அருகில் இருக்குமாறு உடையில் பொருத்தப்படும் என்றும் கூறினர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலி நிறுவனத்திடமிருந்து ‘நல்ல விலைக்கு’ 16,000க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கிகளை ஹெஸ்பொலா அறியாமல் வாங்கியதாகவும், பின்னர் 5,000 பேஜர்களையும் வாங்கியதாகவும் ஏஜென்ட்கள் தெரிவித்தனர் என சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின, பல்பொருள் அங்காடிகள் உட்பட எல்லா இடங்களிலும் பேஜர்கள் கொண்டு செல்லப்பட்டபோது வெடிப்புகள் நிகழ்ந்தன.
மருத்துவமனைகள் மனித உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தன, அவர்களில் பலர் உடல் உறுப்புகளை இழந்திருந்தனர்.
ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்று அழைத்தார்.
மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை
பட மூலாதாரம், EPA
நவம்பர் 2020இல், இரானின் மிக முக்கியமான அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை ஏற்றிச் சென்ற ஒரு வாகனத் தொடரணி, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள அப்சார்ட் நகரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானது.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார்.
“பொதுமக்கள் யாரும் உயிரிழக்காமல், ஒரு நகரும் இலக்கை நோக்கி இதுபோன்ற ‘சர்ஜிக்கல்’ முறையில் படுகொலை செய்வதற்கு, களத்திலிருந்து நிகழ்நேர உளவுத் தகவல்கள் தேவைப்படும்” என்று பிபிசி பாரசீக செய்தியாளரான ஜியார் கோல் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
ஏப்ரல் 2018இல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் பல ஆவணங்களைக் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்சிப்படுத்தினார். இது பல மாதங்களுக்கு முன்பு, ஒரு இரானிய ‘சேமிப்பு கட்டடத்தில்’ மொசாட் அமைப்பு நடத்திய துணிச்சலான நடவடிக்கையில் திருடப்பட்டதாக அவர் கூறினார். இந்த கட்டிடம் டெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது. (இது பின்னர் இரானிய அதிபர் ஹசன் ரூஹானியால் உறுதிப்படுத்தப்பட்டது).
ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ஆவணங்களை வழங்கிய இஸ்ரேலிய பிரதமர், அறிவிக்கப்படாத ஒரு அணு ஆயுதத் திட்டத்திற்காக மொஹ்சென் ஃபக்ரிஸாதே பணியாற்றுகிறார் எனக் கூறினார்.
“மொஹ்சென் ஃபக்ரிஸாதே… அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்,” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
2010 மற்றும் 2012க்கு இடையில், நான்கு இரானிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதாக இரான் முன்பு குற்றம் சாட்டியிருந்தது.
கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மஹ்மூத் அல்-மபூஹ்
பட மூலாதாரம், Getty Images
2010 ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூஹ் துபை நாட்டின் ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில், இது ஒரு இயற்கை மரணம் போல் தோன்றியது. ஆனால் துபை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர், இறுதியில் கொலையாளிகளை அடையாளம் காண முடிந்தது.
அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பிறகு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது.
இந்த நடவடிக்கை மொசாட்டால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதாண்மை ரீதியிலான சீற்றத்தைத் தூண்டியது.
இருப்பினும், இஸ்ரேலிய தூதர்கள், மொசாட்டை தாக்குதலுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினர்.
மொபைல் போன் வெடிப்பில் கொல்லப்பட்ட யஹ்யா அய்யாஷ்
பட மூலாதாரம், EPA
1996 ஆம் ஆண்டு, ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டோரோலா ஆல்ஃபா மொபைல் போன் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
ஹமாஸின் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களை திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. மேலும் இஸ்ரேலின் ‘சேனல் 13’ தொலைக்காட்சி அய்யாஷ் மற்றும் அவரது தந்தை இடையேயான இறுதி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது.
ஆபரேஷன் பிரதர்ஸ்
பட மூலாதாரம், Raffi Berg
1980களின் முற்பகுதியில், பிரதமர் மெனகெம் பிகின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றது. இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை மொசாட் பயன்படுத்தியது.
அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்ட்களின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர்.
அந்த ஏஜென்ட்கள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்ட்கள் தப்பி ஓடிவிட்டனர்.
ம்யூனிக் ஒலிம்பிக் தாக்குதலுக்கு பதிலடி
பட மூலாதாரம், Getty Images
1972-ஆம் ஆண்டு ஒரு பாலத்தீன ஆயுதக்குழு ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.
பின்னர் மேற்கு ஜெர்மன் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
அடுத்து வந்த ஆண்டுகளில், மியூனிக் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மெஹ்மூத் ஹம்ஷாரி உள்ளிட்டோருக்கு மொசாட் குறிவைத்தது
மெஹ்மூத் ஹம்ஷாரி, பாரிஸில் இருந்த அவரது வீட்டில் தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த குண்டுவெடிப்பில் ஹம்ஷாரி ஒரு காலை இழந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆபரேஷன் என்டெபி
பட மூலாதாரம், Getty Images
1976-ஆம் ஆண்டில் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் என்டெபி என்பது இஸ்ரேலின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ‘மொசாட்’ அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது.
பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தை பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும் கடத்தினர். அவர்கள் விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார்.
என்டெபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் பயணிகளையும், விமானக்குழுவையும் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.
இஸ்ரேலிய கமாண்டோக்கள் விமான நிலையத்துக்குள் புகுந்து, 100 இஸ்ரேலிய மற்றும் யூத பணயக்கைதிகளை மீட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர், மூத்த கமாண்டோ யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது
பட மூலாதாரம், Getty Images
1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதில் ஐக்மேன் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார்.
தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார்.
14 மொசாட் ஏஜென்ட்கள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
குறிப்பிடத்தக்க தோல்விகள்
பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது.
7 அக்டோபர் 2023- ஹமாஸ் நடத்திய தாக்குதல்
பட மூலாதாரம், AFP
2023 அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், மொத்த நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. சுமார் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யோம் கிப்பூர் போர்
பட மூலாதாரம், Getty Images
கிட்டத்தட்ட சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் இதேபோன்ற ஒரு எதிர்பாராத தாக்குதலை சந்தித்தது.
அக்டோபர் 6, 1973 அன்று, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின.
யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியா படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன.
அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது.
பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது.
ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் படுகொலை முயற்சி தோல்வி
பட மூலாதாரம், Getty Images
2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது.
ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மெஷால்
பட மூலாதாரம், Getty Images
1997-ஆம் ஆண்டு ஜோர்டானில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. இஸ்ரேல் – ஜோர்டான் இடையே மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும்.
இஸ்ரேலிய ஏஜென்டுகள் பிடிபட்ட போது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது.
மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார்.
இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியது.
லவோன் விவகாரம்
பட மூலாதாரம், Getty Images
1954 இல் எகிப்திய அதிகாரிகள் ‘ஆபரேஷன் சுசன்னா’ என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர்.
சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.
இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் ‘லாவோன் விவகாரம்’ என்று அறியப்பட்டது.
இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு