28
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் அரசுமுறைப் பயணத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு மோடி இஸ்ரேல் செல்லுவது பொருத்தமற்றது என காங்கிரஸ் தரப்பு விமர்சித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு உலகளாவிய அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ள நிலையில், அந்த உரையை புறக்கணிக்கப்போவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இது இந்தப் பயணத்திற்கு மேலும் அரசியல் முக்கியத்துவத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நாளை இஸ்ரேல் செல்லவுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆனால், இந்நிலையில் பாலஸ்தீன விவகாரத்தை புறக்கணித்து செயல்படுவதாக மோடி மீது காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.