பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சி
- பதவி, பிபிசி உலக சேவை
-
டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது.
லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா ‘பாலிஅமோரி’ அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது.
“நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்” என விவரித்தவர், நாம் ஏன் ஒரு சமூகமாக ஒருதார மணம் தான் விதி என ஏற்றுக் கொண்டோம் எனக் கேள்வி எழுப்புகிறார்.
நம்முடைய பரிணாம வளர்ச்சி பாதை புரிந்து கொள்ள நமக்கு நெருக்கமான உயிரினங்களின் இனப்பெருக்க உத்திகளை ஆராய்வது உதவியாக இருக்கும்.
“கொரில்லாக்கள் பல தார மணம் செய்பவை, ஒரு ஆண் உயிரினம் பல பெண் உயிரினங்களுடன் இனச்சேர்க்கை மேற்கொள்ளும்” என பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைக்கழகத்தில் பரிணாமத்தை ஆய்வு செய்யும் உயிரியலாளரான கிட் ஓபி தெரிவித்தார்.
“எனவே அந்தக் குழுவில் உள்ள சந்ததியினர் அனைவரும் தந்தை ஒருவராக இருப்பார், ஆனால் தாய் வேறு வேறாக இருப்பார்கள்” என்றார்.
ஆனால் இது ஒரு திறன்மிகு இனப்பெருக்க உத்தி இல்லை என்கிறார் ஓபி. ஏனென்றால் இது அதிக அளவிலான சிசுக் கொலைக்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார்.
சிசுக்கொலை என்பது கொரில்லா வாழ்க்கையில் மிகவும் கொடூரமான ஒன்று எனக் கூறும் அவர், “ஒரு ஆண் கொரில்லா தனக்கு பிறக்காத குழந்தை கொரில்லாக்களை கொல்லும், இதன் மூலம் அதன் தாயுடன் விரைவாக இனப்பெருக்கம் மேற்கொள்ள முடியும். இத்தகைய பரிணாம உத்தியை நாம் பின்பற்ற முடியாது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் மனிதருக்கு நெருக்கமான குரங்கினங்களான சிம்பன்சிக்கள் மற்றும் போனோபோஸ்களில் பெண்கள் வேறு விதமான பரிணாம உத்தியைப் பின்பற்றுகின்றன. பெண் குரங்குகள், பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். இதன் மூலம் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு குழந்தை கொரில்லாக்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறையும்.
மனிதகுலமும் கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் இருந்து தான் தொடங்கி இருக்கக்கூடும். ஆனால் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தும் மாறின. இதற்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்கிறார் ஓபி.
“நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சியால் பல இடங்கள் தரிசாக மாறின. ஆதி மனிதர்கள் தங்களை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள பெரிய குழுக்களில் இருக்க வேண்டியிருந்தது. இத்தகைய பெரிய சிக்கலான குழுக்களை சமாளிப்பதற்காக மூளை பெரிதாகியது, இதனால் பாலூட்டும் காலமும் அதிகரித்தது” என்றார்.
பெரிய குழுக்களில் அதிக ஆண்கள் இருப்பதால், தந்தை வழியை பின்பற்றாதிருப்பது கடினமானது.
“அதே நேரத்தில் பெண்களுக்கு தங்களின் பிள்ளைகளை வளர்க்க ஆண்களின் துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் ஒரு தார மணம் என்கிற முறைக்கு மாறினர்”
மோனோகமி சிறந்த உத்தியா?
பட மூலாதாரம், Getty Images
இந்த மாற்றம் என்பது மோனோகமி சிறந்தது என்பதனால் நிகழவில்லை, அது தான் ஒரே சாத்தியமான வாய்ப்பு என்பதால் தான் சாத்தியமானது என ஓபி கூறுகிறார்.
பெரிய மூளை கொண்ட மெதுவான வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இது ஒரு தாயால் சமாளிக்கக்கூடியதை விட மிகுதியானது.
ஆதி மனிதர்கள் ஒரு தார மணம் செய்பவர்களாகப் பரிணமித்ததாக வரலாறு கூறினாலும், அதனை தேர்வு செய்தவர்கள் ஒருவருக்கு மட்டும் உண்மையாக இருக்க சிரமப்பட்டனர்.
“வாழ்நாள் முழுவதும் ஒருவருடனே வாழ்ந்து, ஏமாற்றாத உயிரினங்களும் உள்ளன. ஆனால் அவை மிகவும் அரிது” என்கிறார் முனைவர் ஓபி.
மேலும் அவர், “நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் கிப்பன் குரங்குகள் தான். கிப்பன்கள் மற்ற ஜோடிகளிடம் இருந்து தனித்து வசிப்பதால், காட்டில் தங்கள் பகுதிக்குள் யார் வருகிறார்கள், யார் வருவதில்லை போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எளிதாக இருந்தது.”
“ஆனால் மனிதர்கள் போன்ற அதிக ஆண்கள், அதிக பெண்கள் வாழும் குழுக்களில் நீங்கள் இருந்தால், அங்கு கட்டுப்படுத்துவது என்பது கடினம், உங்களின் துணை ஏமாற்றுகிறாரா இல்லையா என்று அறிவது கடினம்” என்கிறார்.
அந்த விதத்தில் பார்க்கையில் ஒரு தார மணம் என்பது இயற்கையான தேர்வு என்பதை விட பிழைக்கும் உத்தியாகவே உள்ளது. ஆனால் இதில் குறைகளும் உள்ளன.
பந்தம் உருவாக்குவதன் பின்னணி என்ன?
நாம் காதலில் விழுந்தாலோ அல்லது உண்மையாக இருந்தாலோ நம் மூளைகளில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.
அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் நரம்பியல் முனைவர் பட்ட மாணவரான சாரா ப்ளூமெந்தல், பிரேரி வோல்ஸ் என்கிற உயிரினத்தை ஆய்வு செய்து வருகிறார். இந்த சிறிய உயிரினங்கள், மனிதர்களைப் போல நீண்ட கால பிணைப்புகளை மேற்கொள்பவை.
பட மூலாதாரம், Getty Images
அவர்களின் மற்ற வோல் உறவினர்களைப் போல அல்லாமல் பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன.
ஆக்ஸிடாஸின் “கட்டிள் ஹார்மோன்” (cuddle hormone) என்றும் அழைக்கப்படுகிறது. இவை தொடுதல் ஏற்படுகிற சமயங்களில் மூளையில் வெளியாகும் நியூரோகெமிக்கல் ஆகும்.
“நாம் பரிசோதனை முறையில் பிரேரி வோல்ஸ்களில் உள்ள ஆக்ஸிடாஸின் அளவை சீண்டினால் அவர்களால் வலுவான பந்தத்தை உருவாக்க முடியவில்லை. அவர்களின் துணைகளுடன் குறைவான நேரத்தையே செலவிடுகின்றனர்” என்றார் ப்ளூமெந்தல்.
பட மூலாதாரம், Getty Images
மனிதர்களிடமும் இதே போன்ற ஆக்ஸிடாஸின் அமைப்பு தான் உள்ளது, நம்முடைய மூளை பந்தம் மேற்கொள்வதை நேர்மறையாக அணுகுவதற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆனால் மற்றொரு கெமிக்கலான டோபமைன், அர்ப்பணிப்பு என்பதற்கு மாறாக புதுமையை நோக்கி நம்மை தள்ளுகிறது.
பந்தத்தின் தொடக்க கட்டத்தில் நம்முடைய மூளையில் டோபமைன் நிரம்பி வழிகிறது, இது ஈர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை தூண்டுகிறது. பந்தம் உருவான பிறகு டோபமைன் வடிவங்கள் மாறுகின்றன.
பல கணவன்கள் கொண்ட பெண்கள்
ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது
பட மூலாதாரம், Getty Images
ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது.
பாலிஜினியை (ஒரு ஆண் பல மனைவிகள் வைத்திருப்பது) விட பாலியண்ட்ரி அரிதானது என்றாலும் அந்த கூற்றை நம்ப முடியாத ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறார் ஸ்டார்க்வெதர்.
“பல பார்ட்னர்கள் வைத்திருப்பதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக பலன் அடையலாம். ஒருவரின் முதன்மையான கணவன் இறந்தாலோ அல்லது சில பூர்வகுடி வட அமெரிக்க குழுக்களிடம் இருப்பதைப் போன்று நீண்ட காலம் கணவன் காணாமல் போனாலோ மாற்று திட்டம் கையில் வைத்திருப்பது சிறந்தது தான்” என அவர் கூறுகிறார்.
சில சந்தர்ப்பங்களில், பல தார ஏற்பாடுகள் மரபணு நன்மைகளையும் வழங்கியுள்ளன.
“மக்கள் அதிகமான நோய்வாய்ப்பட்டு அதனால் உயிரிழக்கும் சூழல்களில், நீங்கள் சற்று வேறு விதமான மரபணு அமைப்பு கொண்ட பல பிள்ளைகளைக் கொண்டிருந்தால் நீங்கள் நல்ல நிலையில் தான் இருப்பீர்கள்” என ஸ்டார்க்வெதர் விவரிக்கிறார். “அவர்கள் நடப்பு சூழலில் நன்றாகப் பொருந்திப் போவார்கள்” என்றும் தெரிவித்தார்.
ஆனால் பல தார முறையில் சவால்களும் இல்லாமல் இல்லை. பல உறவுகளைச் சமாளிப்பதற்கு, நேரம், உணர்வியல் சக்தி மற்றும் பேச்சுவார்த்தை தேவைப்படும்.
“நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி பல துணைகள் வைத்திருப்பது மிகவும் கடினமானது. பொருளாதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சரி அது மிகவும் கடினம். ஒரு தார மணம் என்பது எண்ணிக்கை அளவில் மிகவும் பொதுவான திருமண வடிவமாக இருப்பதற்கு இது தான் முதன்மை காரணம் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார் ஸ்டார்க்வெதர்.
பாலிஅமோரி அனுபவம் எப்படி உள்ளது?
அலினாவுக்கு அவருடைய முந்தைய ரிலேஷன்ஷிப்பில் மோனோகமி வேலை செய்யவில்லை என்கிறார். தற்போது பாலிஅமோர் உறவில் இருக்கும் அவர் பல சிக்கலான உணர்வுகளைக் கடந்து வருகிறார்.
பொறாமை என்பது மிகவும் கடினமாகவும் வலுவாகவும் இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். “ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், இந்த உணர்வுகளில் பெரும்பாலானவை நம்முடைய பார்ட்னர் நம்மிடம் நேர்மையாக இல்லை என்கிற உணர்வில் இருந்து தான் வருகின்றன. அவர் நேர்மையாக தான் இருக்கிறார் எனத் தெரிவது பொறாமை உணர்வை சமாளிக்க உதவுகிறது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
பொறாமை என்பது பெரிய பிரச்னை இல்லை என அவரின் பார்ட்னர் கூறுகிறார். “பல ஆரோக்கியமான உறவுகளை சமாளிக்க தேவைப்படும் நேரம் மற்றும் முயற்சி பெரும் சுமையாக இருக்கலாம்” என்றார்.
அவர்கள் இருவருமே இது சரியானது தான் என்கின்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை என்கிறார் அலினா. மேலும் அவர், “அது உங்களை உரையாட வைக்கிறது, மற்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அதை மேற்கொள்ள மாட்டீர்கள், அது தான் எங்கள் உறவை வலுவானதாக்குகிறது” என்றார்.
எனவே, நாம் இயற்கையில் ஒரு தார தன்மை கொண்டவர்களா எனக் கேள்வி எழுப்பினால் ஆம் மற்றும் இல்லை என்கிற இரண்டுமே தான் பதிலாக அமையும்.
வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதுமே, மனிதர்களின் தங்களின் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பல வகையான உறவு முறைகளை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஆனால் பிறருக்கு, காதலைக் கடத்திச் செல்ல ஒரு தார மணம் என்பது எளிமையான மற்றும் சமாளிக்கக்கூடிய வழியாக உள்ளது.
மனிதர்கள் நெகிழ்வாக இருக்க பரிணமித்துள்ளனர். இது நாம் உறவுகள் வைத்திருப்பது மற்றும் திருமணம் செய்து கொள்ளும் முறை ஆகியவற்றை உள்ளடக்கும் எனக் கூறும் ஸ்டார்க்வெதர் “நாம் உலகின் அனைத்து விதமான சுற்றுச்சூழலிலும் வாழ்கிறோம். அதற்கு நாம் கொண்டிருக்கும் நெகிழ்வுத்தன்மை மற்றும் அணுகுமுறையே காரணம்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு