படக்குறிப்பு, வங்கக்கடலில் மோன்தா புயல் நிலைகொண்டிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)
இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைப்படி, வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்கிழக்குப் பகுதியில் உருவெடுத்த மோன்தா புயல் அங்கிருந்து மேற்கு-வடமேற்காக மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இன்று (அக்டோபர் 27) அதிகாலை 2.30 மணியளவில் அந்தப் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.
அடுத்த 12 மணி நேரத்தில் இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. பின்னர் வடமேற்காக நகரும் இந்தப் புயல், அதன்பிறகு மேற்கு-வடமேற்காக நகர்ந்து மேலும் வலுப்பெற்று நாளை (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக மாறும்.
பின்னர் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்டோபர் 28) மாலை அல்லது இரவு ஆந்திராவில் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டணம் மற்றும் கலிங்கபட்டணம் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 90–100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்கலாம். அது மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலும் வேகமடைலாம்.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
அக்டோபர் 27
இன்றூ ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
அக்டோபர் 28
நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அக்டோபர் 30-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45-45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம்.
ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 30-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?
உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது.
உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய – பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.
டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.
பட மூலாதாரம், RSMC NEW DELHI
பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.
சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.
பெயர் சூட்டுவதற்கென உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.