தேர்தல் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்படும் இடங்களில் வேட்பாளர்கள் சமூகமளிக்க முடியாது என்ற விதிமுறையை மீறியதான குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் வடமராட்சியில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் யாழ். வடமராட்சி, நெல்லியடியில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தேர்தல் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டார்.
இதேபோன்று தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் யாழ். வடமராட்சி, பருத்தித்துறையில் இன்று தேர்தல் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
The post யாழில் இரண்டு வேட்பாளர்கள் கைது! appeared first on Vanakkam London.