3
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர் இன்று சனிக்கிழமை காலை சடலமாகக் கரையொதுங்கியுள்ளார்.
மணற்காட்டைச் சேர்ந்த அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது 37) என்ற இளம் குடும்பஸ்தரே சடலமாகக் கரையொதுங்கியுள்ளார்.
மேற்படி மீனவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளார்.
கடலுக்குச் சென்ற மீனவர் வழமையாக காலை 9 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால், அன்றைய தினம் அவர் கரை திரும்பாததால், சக மீனவர்கள் அவரைத் தேடி கடலுக்குச் சென்ற வேளையில், அவரது கட்டுமரம் மாத்திரம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.
அதனை மீட்டு மீண்டும் கரை சேர்த்த மீனவர்கள் காணாமல்போன மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த மரணம் ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை பதில் நீதிவான் முத்துக்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். தடயவியல் பொலிஸாரும் தடயங்களைப் பெற்றனர்.
பதில் நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.