• Sun. Jun 8th, 2025

24×7 Live News

Apdin News

யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை (படங்கள் இணைப்பு)

Byadmin

Jun 8, 2025


“எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட அதிக ஆசனங்கள் உள்ள அணி என்கின்றார்கள். மக்களின் தீர்ப்பு அப்படி வழங்கப்படவில்லை. உதிரிகளை இணைத்து அணியாக நின்றால்தான் தமிழரசை வீழ்த்த முடியும் என்கின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் இல்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஏனைய கட்சிகளைப் போல் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்திவிட்டு அந்த விடயம் வெளியில் தெரியவந்தவுடன் காலவரையின்றி பிற்போட்டுவிட்டோம் என்று சொல்வதும், அந்தக் கட்சியில் இருந்து இன்னொருவர் அப்படி ஒரு கூட்டம் நடக்கவே இல்லை, ஊடகங்கள் பொய் சொல்கின்றன எனப் பொய்களைச் சொல்லும் வழக்கம் எங்களுடைய கட்சியில் இல்லை. ஆகவே, கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திய கட்சியின் தலைவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

சமஷ்டி அடிப்படையில் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். 1956ஆம் ஆண்டு முதல் சகல தேர்தல்களிலும் எமது கட்சி போட்டியிடுகின்றது. தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரேயொரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகும். அதற்காக நாங்கள் ஏனைய கட்சிகளைப் புறக்கணிக்கவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற கையோடு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்களுடைய ஆணையை ஏற்றுக்கொள்கின்றோம் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். மக்கள் தவறு இழைத்தார்கள் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் கூறவில்லை.

ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என 1956ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை இந்த நாட்டின் அரசுகள் கண்டுகொள்வதில்லை. மக்கள் தீர்ப்பை அரசு ஏற்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தற்போது இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை மதியுங்கள் என ஏனைய கட்சிகளுக்குக் கூறுகின்றோம்.

ஒரு குறித்த சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கூடுதலான மக்கள் ஆதரவு கிடைக்கப் பெறுகின்றபோது அந்தத் மக்கள் தீர்ப்பை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டியது ஏனைய கட்சிகளின் ஜனநாயகக் கடமை ஆகும். இதனை அரசியல் குழுக் கூட்டத்திலும் வலியுறுத்தியிருந்தோம். இதனைப் பகிரங்கமாக ஏனைய கட்சிகளுக்கும் சொல்லியிருக்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை இல்லை. மக்களின் கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியிட்டோம். எனவே, மக்களின் ஆணை எங்களுக்கு உள்ள இடங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒழுங்குகளை செய்வோம்.

எங்கள் கட்சியின் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற சந்திப்புக்கள் சம்பந்தமாக உணர்வுபூர்வமான கருத்துக்கள் எழுந்துள்ளன. அதனைப் புறந்தள்ளாது நாங்கள் மதிக்கின்றோம். தமிழரசுக் கட்சியின் தலைவர் ஏனைய கட்சிகளைத் தேடிச் சந்திப்பது பற்றி நாங்கள் கூறியபோது, நாங்கள் சந்திப்பை ஒழுங்குபடுத்தியதனால் நாங்களே தேடிச் சென்று சந்திக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சித் தலைவர் சொன்னார்.

கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவருடைய இல்லத்திலேயே ஒழுங்கு செய்யப்பட்டது. எனக்குக் கஜேந்திரகுமாரின் எண்ணம் பற்றித் தெரியும். எனவே, நானும் அதற்கு இணங்கினேன். எனினும், இடையில் கஜேந்திரகுமார் ஊடகச் சந்திப்பில் தும்புத்தடிக் கதையைச் சொன்னார். அதன் பின்னர் கட்சிக்குள் சலசலப்பு எழுந்ததாலேயே இடத்தை மாற்றினோம். எனினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னைப் பார்த்து தும்புத்தடி என்று கூறவில்லை. தன்னுடைய கட்சியில் இருந்து முதலமைச்சராக நிறுத்தப்படவுள்ளவர்தான் தும்புத்தடி என்றார். யார் அந்தத் தும்புத்தடி என்பதை அறிய நாங்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றோம்.

நாங்கள் எவருடனும் கூட்டுச் சேரவில்லை. மக்கள் எங்களுக்குக் கொடுத்த ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தைப் பெறக் கூடிய ஓர் அரசியல் கட்சி. அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு மக்கள் தீர்ப்பளித்த பிற்பாடு அதற்குக் குறுக்காக எவரும் வரக்கூடாது என நாங்கள் ஏனைய கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

தமிழரசுக் கட்சியை விட ஆசனங்கள் குறைந்த கட்சி இன்னொரு கட்சியுடன் அணி சேர்ந்துவிட்டு எங்களைவிடக் கூட ஆசனங்களை வைத்திருப்பதாகக் கூறும் பம்மாத்து வேலையை எங்களிடம் செய்ய முடியாது.

எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியைவிட அதிக ஆசனங்கள் உள்ள அணி என்கிறார்கள். மக்களின் தீர்ப்பு அப்படி வழங்கப்படவில்லை. உதிரிகளை இணைத்து அணியாக நின்றால்தான் தமிழரசை வீழ்த்த முடியும் என்கின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் இல்லாமல் போய்விட்டது.

இருட்டில் போய் ஏனைய கட்சிகளைச் சந்திப்பது, பின்னர் அது வெளிவந்ததும் நாங்கள் சந்திக்கவில்லை என்பது, கண்டவர்களையும் சேர்த்து அணியாகக் காட்டிக்கொண்டு தமிழரசை வீழ்த்தப் போவதாகக் கூறுவது என இவை அனைத்தும் மக்கள் முன் எடுபடாது. மக்கள் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்.

பலர் புதிய அணிகளை உருவாக்கியும் தேசிய மக்கள் சக்தியை மேவி வரமுடியவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடித்தது. ஆகவே, மக்களின் ஆணையைப் பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கு உரித்துடையவர்கள். குறுக்கே எவரும் வரவேண்டாம் என்ற எச்சரிக்கையை ஏனைய கட்சிகளுக்கு விடுக்கின்றேன்.” – என்றார்.

The post யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin