0
யாழ். வடமராட்சிக் கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் படுகாயமடைந்த மீனவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை நாகர்கோவில் கடற்பகுதியில் படகுகளை மேற்படி மீனவர் கழுவிக் கொண்டிருந்தார். இதன்போது அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு, அந்த மீனவருக்கு மேல் கவிழ்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.