பட மூலாதாரம், Reuters
சௌதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய யுக்ரேன் தரப்பினர், அமெரிக்கா பரிந்துரைத்தபடி உடனடியாக அமலாகும் வகையில் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
இனி இந்த விஷயத்தில் “ரஷ்யாதான் முடிவெடுக்க வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இனி இந்த நேர்மறையான முன்மொழிவை ஏற்றுக் கொள்ளும் வகையில் ரஷ்யாவை சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் கையில் இருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையே நடைபெற்ற அசாதாரணமான வார்த்தைப் போருக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ முதல் சந்திப்பாக ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பு அமைந்தது.
இரு தரப்பும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் யுக்ரேனுக்கான பாதுகாப்பு உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கை உடனடியாக மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதவிகளை, யுக்ரேன் அதிபர் உடனான ஓவல் அலுவலக சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.
‘இனி முடிவு ரஷ்யாவின் கையில்…’
இரு தரப்பு கூட்டறிக்கையில் “இரு தரப்புப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கான குழுக்களின் பெயர்களை அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். யுக்ரேனின் நீண்ட கால பாதுகாப்புக்காக அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்தையைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெட்டாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மார்கோ ரூபியோ இந்த முன்மொழிவை ரஷ்யா ஏற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க யுக்ரேன் தயாராக உள்ளது” எனக் கூறிய ரூபியோ ஒருவேளை ரஷ்யா இதை நிராகரித்தால், “அமைதிக்குத் தடையாக யார் இருக்கிறார்கள் என்பதை துரதிர்ஷ்டவசமாக நாம் தெரிந்து கொள்வோம்” எனக் கூறினார்.
“போரை நிறுத்தவும், உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், நாங்கள் வழங்கிய ஒரு திட்டத்தை யுக்ரேன் இன்று ஏற்றுக்கொண்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் இந்தத் திட்டத்தை ரஷ்யா தரப்புக்கு எடுத்துச் செல்வோம். அவர்களும் அமைதியை ஆமோதிப்பார்கள் என நம்புகிறோம். இனி முடிவு அவர்கள் கையில் உள்ளது” என்றார் ரூபியோ.
கடலிலும், வான் பரப்பிலும் மட்டும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற ஸெலென்ஸ்கியின் முன்மொழிவைவிட இந்த 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவு பரந்துபட்டதாக இருக்கிறது.
நன்றி தெரிவித்த ஸெலன்ஸ்கி
பட மூலாதாரம், Getty Images
ஜெட்டாவில் நடந்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்காக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். ஸெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், “போரை நிறுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ ரஷ்யா தனது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். இது முழு உண்மைக்கான நேரம்” என்று கூறியுள்ளார்.
ரஷ்யா இதுவரை ஏதும் பதிலளிக்காத நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே அளித்த தகவல்களின்படி, பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதித்த பிறகு ஓர் அறிக்கை வெளியிடப்படும்.
பிப்ரவரி 2022 முதல் யுக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்பை ரஷ்யா தொடங்கியது. யுக்ரேனின் நிலப்பரப்பில் 20 சதவீதத்தை தற்போது மாஸ்கோ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசவுள்ளதாகவும் தமது முன்மொழிவுகளை அவர் ஏற்பார் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்.
“அவர்கள் கூறுவதைப் போன்று, இது இரு தரப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டது” எனக் கூறிய டிரம்ப் அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டமானது ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“எங்களுக்கு ரஷ்யாவுடன் நாளை பெரிய சந்திப்பு இருக்கிறது, சில சிறந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என நம்புகிறோம்” என்பது டிரம்பின் கூற்றாக இருக்கிறது. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை மீண்டும் வாஷிங்டன் அழைப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினார்.
ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகமான Tass வழங்கிய தகவல்களின்படி, வரும் சில நாட்களில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதை ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளரான மரிய ஸகரோவா மறுக்கவில்லை.
அரிய கனிமங்களை வழங்கும் யுக்ரேன்
பட மூலாதாரம், getty
டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையிலான நல்லுறவு மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளதா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த மார்கோ ரூபியோ, “அமைதிக்கான பாதையை நோக்கித் திரும்பியுள்ளது” என்று கூறினார். “இது தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் நேற்றும் போரில் அவர்கள் இறந்தார்கள், போர் நிறுத்தம் எட்டப்படவில்லை எனில் நாளையும் மரணங்கள் நிகழும்” என்று ரூபியோ கூறினார்.
மாஸ்கோவில் இரவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான ராஜ்ஜீய நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் யுக்ரேன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா இடையிலான “அரிய கனிமங்கள்” தொடர்பான ஒப்பந்தத்தைச் சாத்தியமுள்ள வகையில் விரைவாக இறுதி செய்ய டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி ஒப்புக் கொண்டதாகவும் கூட்டறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில் அரிய கனிமங்களை எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை அமெரிக்காவுக்கு வழங்குவதாக யுக்ரேன் கூறியிருந்தது. ஆனால் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற பிரச்னையால் இது தடம் மாறியது.
ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கனிமங்கள் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை எனவும், யுக்ரேன் மற்றும் அமெரிக்க கருவூலத் துறைகள் சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மார்கோ ரூபியோ கூறினார்.
‘பேச்சுவார்த்தையில் ஐரோப்பாவும் இடம் பெற வேண்டும்’
பட மூலாதாரம், Getty Images
ஜெட்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
ஸ்டீவ் விட்காஃப் வரும் நாட்களில் ரஷ்யா செல்லவிருப்பதாக, திட்டமிடல் குறித்து அறிந்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. ஆனாலும் இது மாறுதலுக்கு உட்பட்டது.
இந்தக் கூட்டறிக்கையின்படி, எந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு இருக்க வேண்டும் என கீயவ் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பேச்சுவார்த்தையில் இருந்து தள்ளி வைக்கும் வகையில், போர் தொடர்பான அணுகுமுறையில் அமெரிக்காவிடம் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் கடந்த சில வாரங்களில் அவசர சந்திப்புகளை நடத்தின.
ஐரோப்பிய யூனியன் ஆணையத்தின் தலைவரான உர்சுலா வோன் டெர் லெயன் பேசுகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேர்மறையான முன்னேற்றங்களை வரவேற்பதாகக் கூறினார். யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அமெரிக்க அதிபரின் முக்கிய உறுதி மொழியாக இருக்கிறது.
யுக்ரேன் அதிபர் வலியுறுத்திய உடனடிப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்காமல், போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஸெலன்ஸ்கிக்கு அவர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தார். போர் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கக் கூடும் என்ற அரிதான எச்சரிக்கையையும் வெள்ளிக்கிழமையன்று டிரம்ப் விடுத்தார்.
போர்க்களத்தில் தற்போது ரஷ்யா யுக்ரேனை முழு வேகத்துடன் தாக்குகிறது என்பதால் இந்த நடவடிக்கை குறித்து யோசிப்பதாக டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.
தொடரும் டிரோன் தாக்குதல்கள்
பட மூலாதாரம், Getty Images
நடைமுறையில், களத்தில் நடைபெற்று வரும் போர் செவ்வாய்க்கிழமை அன்றும் தொடர்ந்தது.
மாஸ்கோ பிராந்தியத்தில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் ரஷ்ய தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இது மட்டுமின்றி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் கூறியுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த தகவலின்படி, 337 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. இதில் 91 டிரோன்கள் மாஸ்கோ பிராந்திய வான் வெளியில் இடைமறிக்கப்பட்டன.
தலைநகர் கீயவ் மற்றும் பல பிராந்தியங்களில் ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவால் ஏவப்பட்ட 126 டிரோன்களில் 79 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக யுக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் Iskander-M ஏவுகணையும் இருந்ததாக யுக்ரேன் கூறியுள்ளது.
ஆனால் யுக்ரேனில் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.