மேகாலயாவின் கிழக்கு காசி மாவட்டம், உத்தரப் பிரதேசத்தின் காஸிபூர் மாவட்டத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது.
இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியின் உடல் கிழக்கு காசி மலைகளில் ஜூன் 2ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் காணாமல் போன அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி காஸிபூரில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வழக்கை பொறுத்தவரை மேகாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் என மூன்று மாநில காவல்துறையினரும் வேறுவேறு கூற்றுகளை முன்வைக்கின்றனர்.
இந்தூரை சேர்ந்த ராஜா-சோனம் தம்பதி தங்களது தேனிலவுக்காக மேகாலயாவிற்கு சென்றிருந்தனர், பின்னர் அவர்கள் காணாமல் போன செய்தி வெளிவந்தது. இப்போது சோனம் ரகுவன்ஷி உத்தரப் பிரதேச போலீஸாரின் காவலில் இருக்கிறார். மேகாலயா காவல்துறையினர் அவருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர், ஆனால் சோனத்தின் குடும்பத்தினர் அவர் அப்பாவி என்கின்றனர்.
ஆனால் சில கேள்விகளுக்கு இதுவரை பதில் கண்டுபிடிக்கப்படவில்லை.
உதாரணமாக சோனம் மேகாலயாவிலிருந்து எப்படி ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் காஸிபூரை அடைந்தார்? பல நாட்களாக காணாமல் போயிருந்த சோனத்தை போலீஸார் அடைந்தது எப்படி?
மேகாலயா காவல்துறையினர் சோனத்தை காஸிபூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரவில் ஆஜர்படுத்தி டிரான்சிட் ரிமாண்டில் காவலில் எடுத்தனர். இப்போது அவரை அவர்கள் ஷில்லாங்கிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மே 23ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த ராஜா, ஜூன் 2ஆம் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலையில் உள்ள வீசடாங் அருவி அருகே 150 அடி ஆழ பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்
இந்த கொலையில் சோனமிற்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா?
இந்த கேள்விக்கு பதிலளித்த காவல் கண்காணிப்பாளர் விவேக் சியெம் சொல்கிறார், “ஆம் அப்படித்தான் தெரிகிறது. மேகாலயா காவல்துறையின் இரண்டு குழுக்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன, மற்றொரு குழு சோனம்-ஐ கைது செய்ய உத்தரப் பிரதேசம் சென்றுள்ளது.”
மேகாலயா காவல்துறை தன்னை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டும் சோனமின் தந்தை தேவி சிங் தனது மகள் அப்பாவி என்கிறார்.
இதற்கிடையில், இந்த வழக்கில் ‘வேறு 3 பேர் கைது செய்யப்பட்டப் போது’ சோனம் ‘தானாகவே முன்வந்து சரணடைந்ததாகவும், இதுவே ‘அனைத்தையும் காட்டுவதாகவும்’ காவல்துறையினர் சொல்கின்றனர்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என சோனமின் குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.
காவல்துறையினர் சோனமை பிடித்தது எப்படி?
சோனம் ரகுவன்ஷியை தேடும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்தது. ராஜாவின் உடல் அருகே மேகாலயா காவல்துறையினர் சிவப்பு மற்றும் கருப்பு நிற ரெயின் கோட் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த ரெயின் கோட் மற்றும் ஹோட்டலுக்கு வெளியே இருந்த சிசிடிவி காட்சி தவிர சோனம் பற்றிய எந்த தகவலும் இருக்கவில்லை.
சோனமின் தந்தை தேவி சிங் சொல்கிறார், “ஜூன் 8ஆம் தேதி இரவில், சோனமின் சகோதரர் கோவிந்த் சிங்கிற்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காஸிபூரில் ஒரு தாபாவிலிருந்து சோனம் அழைத்திருந்தாள். அதன் பின்னர் நாங்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தோம். காவல்துறையினர் தாபாவிற்கு வந்திருந்தனர். அது இரண்டு மணி, எனது மகள் கோவிந்திடம் மட்டும்தான் பேசியிருந்தாள்.”
காசி தாபா காஸிபூரில் நந்த்கஞ்ச் காவல் நிலையத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காஸிபூர் காவல்துறையினரின் தகவல்படி அவர்கள் சோனமை காவலில் எடுத்துள்ளனர்.
காஸிபூர் காவல் கண்காணிப்பாளர் இறைராஜா செய்தியாளர்களிடம், “சோனம் அழைத்த பின்னர் சோனமின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேச காவல்துறையிடம் தெரிவித்தனர். அதன் பின்னர், மத்தியப் பிரதேச காவல்துறையினர் காஸிபூர் போலீஸாரை தொடர்பு கொண்டனர், பின்னர் சோனம் தாபாவிலிருந்து மீட்டு அழைத்து வரப்பட்டார்,” என தெரிவித்தார்.
உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததாக காசி தாபாவை நடத்தும் சஹில் யாதவ் சொல்கிறார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த சஹில் யாதவ், “தனது குடும்பத்தை அழைக்க சோனம் எனது தொலைபேசியை கேட்டார். அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசும்போது அவர் அழ ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது சகோதரர் என்னை அழைத்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கும்படி கூறினார். காவல்துறையினர் இங்கு வந்து அவரை இரவில் சுமார் 2:30 மணியளவில் அழைத்துச் சென்றனர்,” என்று தெரிவித்தார்,
எப்படி இங்கு வந்து சேர்ந்தார் என சோனமிடம் கேட்டபோது, சோனம் எந்த பதிலும் தரவில்லை என சஹில் சொல்கிறார்.
“காஸிபூர் காவல்துறையினர் சோனம் ரகுவன்ஷியை மீட்டிருப்பதாக ஷில்லாங் காவல்துறையினர் மூலம் நேற்றிரவு தகவல் கிடைத்தது. ஷில்லாங் காவல்துறையினர் இந்தூரை தொடர்பு கொண்டு குற்றவாளிகள் என கருதப்பட்ட 3 பேர் பற்றிய தகவல் தெரிவித்தனர். இந்தூர் காவல்துறையும், ஷில்லாங் காவல்துறையும் இணைந்து ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு மூவரையும் கைது செய்தனர்.” என இந்தூர் துணை காவல் ஆணையர் (குற்றங்கள்) ராஜேஷ் டாண்டோடியா பிபிசியிடம் தெரிவித்தார்.
காவலில் எடுக்கப்பட்ட நபர்களிடம் தற்போது ஷில்லாங் காவல்துறை விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் “இந்தூர் நபரின் கொலை தொடர்பாக அவரது மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனிலவின் போது மனைவி கொலைத் திட்டத்தை தீட்டி, அதை செயல்படுத்த மற்றவர்களின் உதவியை எடுத்துக்கொண்டார்,” என மேகாலயா டிஜிபி ஐ நான்கிராங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சோனமின் தந்தை கூறுவது என்ன?
தனது மகள் நிரபராதி என்றும் தனது மகள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாவும் அவர் அதுபோன்ற காரியத்தை செய்யமாட்டார் என்றும் சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இரண்டு குடும்பங்கள் மற்றும் மணமக்களின் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது. அங்கிருக்கும் (மேகாலயா) அரசு முதல் நாளிலிருந்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது. மகள் காஸிபூருக்கு சென்று அவரே தாபாவிலிருந்து அழைத்தார். காவல்துறையினர் தாபாவிற்கு சென்று அவரை அழைத்து வந்தனர். நான் சோனமிடம் இன்னும் பேசவில்லை,” என தேவி சிங் சொன்னார்.
தேவி சிங் மேலும் சொல்கிறார், “இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என அமித் ஷாவிடம் வேண்டிக்கொள்கிறேன். மேகாலயா காவல்துறையினர் இந்த கற்பனை கதையை கட்டமைத்துள்ளனர்,” என தேவி சிங் மேலும் தெரிவித்தார்.
மணமகன் குடும்பத்தினர் கூறுவது என்ன?
சோனம் கிடைத்த பின்னர், ராஜாவின் குடும்பத்தினர் மத்தியில் கோபத்தை தெளிவாக காணமுடிகிறது. சோனம் குறித்த மேகாலயா காவல்துறையினரின் கூற்றுக்கு பின், சோனமின் புகைப்படங்களை எரிப்பதன் மூலம் ராஜாவின் குடும்பத்தினர் அவர்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
பிபிசியிடம் பேசிய ராஜாவின் தாய் உமா ரகுவன்ஷி, “இரண்டு குடும்பங்களுக்கிடையில் பரஸ்பர ஒப்புதலுடன் அனைத்தும் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர், எங்களுடன் சோனம் இருந்தது நீண்ட நாள் உறவு போல் இருந்தது.” என தெரிவித்தார்.
ராஜாவின் சகோதரர் விபின் ரகுவன்ஷி, “எல்லாம் சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் எங்களது சகோதரரை இழந்திருக்கிறோம். இதற்கு யார் பொறுப்போ அவர்களுக்கு இருப்பதிலேயே கடினமான தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார்.
மேகாலயா காவல்துறை எச்சரிக்கை ஏன்?
குற்றம் நடந்தபின்னர், மாநிலத்திற்கு எதிராக, மாநில மக்களை அவமதிக்கும் வகையிலான வெறுப்பு கருத்துகள் சமூக ஊடகங்கள் பதிவிடப்பட்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன், மாநில உள்துறை அமைச்சர் பிரஸ்டோன் டைன்சாங்கும் பங்கேற்றார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த காவல்துறை அதிகாரி, “மாநில மக்களை குறிவைக்கும் வெறுப்பு நிறைந்த சமூக ஊடக பதிவுகள் தன்னிச்சையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு பொறுப்பானவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.”
“உள்துறை அமைச்சர் பிரஸ்டோன் டைன்சாங் மேகாலயா குறித்து எதிர்மறையான கருத்துருவாக்கத்தை உண்டாக்கவேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.
“மேகாலயா குறித்த மோசமான பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என இந்தியா மற்றும் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அது பாரம்பரிய ஊடகமாகட்டும், சமூக ஊடமாகட்டும். ஏனென்றால் அவற்றில் எந்த உண்மையும் இல்லை. மேகாலயா பாதுகாப்பாக இருக்கிறது.” என்றார்.
சமூகத்தின் உணர்வுகளை தூண்டுவதை துளியும் ஏற்கமுடியாத கொள்கை என இந்த நடவடிக்கையை மேகாலயா அரசு விவரித்துள்ளது.
பிரச்னை என்ன?
இந்தூரில் இருக்கும் சகர் நகரை சேர்ந்த 29 வயதான ராஜா ரகுவன்ஷி – 27 வயதான சோனம் தம்பதி தங்களது தேனிலவுக்காக மேகாலயாவிற்கு சென்றுள்ளனர். அவர்கள் மே 23ஆம் தேதி காணாமல் போனார்கள்.
11 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2ஆம் தேதி, கிழக்கு காசி மலைகளில் உள்ள வீஸடாங் நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள 150 அடி ஆழ பள்ளத்தில் ராஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சோனம் எங்கே என்பது தெரியாத நிலை நீடித்தது.
ராஜா ரகுவன்ஷியின் உடல் மேகாலயாவிலிருந்து அவரது வீட்டுக்கு ஜூன் மாதம் 4ஆம் தேதி புதன்கிழமை மாலை சென்றடைந்தது.
மே 23ஆம் தேதி காணாமல் போவதற்கு ஒரு நாள் முன்னதாக அந்த தம்பதியினர் மேகாலயாவில் இருக்கும் நான்கிரியாட்டை அடைந்தனர், அவர்கள் ஷிபாரா தங்குமிடத்திலிருந்து காலி செய்து போனதுதான் அவர்கள் கடைசியாக பார்க்கப்பட்டது.
உள்ளூர் மக்கள் மற்றும் டூரிஸ்ட் கைடுகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர், ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில், கிழக்கு காசி மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் ஷியெம்,”இது ஒரு கொலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ‘டாவ்’ (பெரிய கூர்மையான கத்தி)-ஐயும் நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம்,” என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு