பட மூலாதாரம், @draramadoss
‘மருத்துவர் ராமதாஸ் நமது குலசாமி. அவர் நமது கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால உழைப்பில் தொலைநோக்கு சிந்தனை, சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்போம்’ – சோழிங்கநல்லூரில் பா.ம.க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இவ்வாறு பேசினார்.
“அன்புமணியின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது. ராமதாஸின் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை அவர் முன்னெடுத்துச் செல்கிறார்” எனக் கூறுகின்றனர், பா.ம.க நிர்வாகிகளில் ஒரு பிரிவினர்.
கட்சியில் நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் பரஸ்பரம் வெளியிடும் அறிக்கைகள், அக்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸை எதிர்த்து அன்புமணியால் பா.ம.க-வில் அதிகாரம் செலுத்த முடியுமா?
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே நான்காவது நாளாக மோதல் நீடித்து வருகிறது. சோழிங்கநல்லூரில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸும் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள் உள்பட கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பட மூலாதாரம், @draramadoss
மருத்துவர் அன்புமணியின் தீவிர ஆதரவாளர்களாக பார்க்கப்படும் பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மயிலம் சிவக்குமார் உள்பட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார்.
திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூரை சேர்ந்த சையது மன்சூர் என்பவரை பொருளாளராக ராமதாஸ் நியமித்தார். ஆனால், அவர்களை மீண்டும் அதே பொறுப்புகளில் அமர்த்தி அன்புமணி அறிவித்துள்ளார்.
“பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், என்னை பொருளாளராக நியமித்துள்ளார்” என செய்தியாளர்களிடம் திலகபாமா தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இருந்தே ராமதாஸ்-அன்புமணி ஆகியோர் இடையே மோதல் வெடிக்கத் தொடங்கிவிட்டது. சுமார் ஐந்து மாதங்களாக பல்வேறு வடிவங்களில் இந்த மோதல் வெளிப்பட்டது.
பிரிவினையின் பின்னணியில் யார்?
பட மூலாதாரம், @draramadoss
ராமதாஸ்-அன்புமணி மோதலின் பின்னணியில் பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி இருப்பதாக, அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் பரவியது.
சிவகாசி பா.ம.க ஒன்றிய செயலாளரிடம் திலகபாமா பேசுவதாக வெளியான அந்த ஆடியோவில், ‘ராமதாஸையும் அன்புமணியையும் பிரித்து வைத்து, கட்சியை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கு ஜி.கே.மணி முயற்சி செய்கிறார்’ என்ற ரீதியில் அந்த உரையாடல் அமைந்துள்ளது.
தவிர, ‘ராமதாஸை வைத்துக் கொண்டு எப்படி கட்சியை வளர்க்க முடியும்? உள்ளே நடக்கும் அரசியல் உங்களுக்குத் தெரியாது’ என திலகபாமா கூறுவதாக அந்த ஆடியோ உரையாடல் அமைந்துள்ளது. ஆனால், அதன் உண்மைத்தன்மை குறித்து திலகபாமா தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.
இதுகுறித்து திலகபாமாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. “சோழிங்கநல்லூர் கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுவார்” என்று மட்டும் அவரது உதவியாளர் பதில் அளித்தார்.
மோதல் தொடர்பாக, தன்னைத் தொடர்புபடுத்தி வரும் தகவல்களால் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக, பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று (மே 31) தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “என்னை அவதூறு செய்வது நல்லதல்ல. அது அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் நல்லது. ராமதாஸும் அன்புமணியும் விரைவில் சந்தித்துப் பேச வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” எனக் கூறினார்.
“நேற்று (மே 30) ஒருநாள் தான் அன்புமணியிடம் பேசவில்லை. அதற்கு முன்பு முதல் நாள் இரவு நான்கு முறை பேசினேன். நேரில் வருவதாக கூறியபோது, போனில் பேசுங்கள் என அன்புமணி கூறினார். ஆனால், மனசாட்சிக்கு விரோதமாக என்னைப் பற்றி தவறாக எழுதுகிறார்கள்” எனக் கூறினார் ஜி.கே.மணி.
தன்னைப் பற்றி திலகபாமா கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த ஜி.கே.மணி, “எந்தப் பொறுப்பாளரையும் மாற்ற வேண்டாம் என மருத்துவரிடம் கூறினேன். என் முன்னால் 2 முடிவுகள் உள்ளன. ‘உங்களுக்கும் குடும்பத்துக்கும் தெரியாமல் ஓடிப் போக வேண்டும் இல்லாவிட்டால் நான் உயிரோடு இருக்கக் கூடாது’ என ராமதாஸிடம் கூறினேன். அவ்வளவு வேதனையாக இருக்கிறது” எனக் கூறினார்.
“பிரிவினைக்கு ஜி.கே.மணி காரணம் அல்லது இன்னொரு கட்சி காரணம் எனக் கூறுவதை ஏற்க முடியாது” எனக் கூறும் ஜி.கே.மணி. “45 ஆண்டுகாலம் ராமதாஸ் அரசியல் செய்கிறார். அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்தவர். யாருக்கும் யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. யார் கூறியும் பிளவு இல்லை. ஏதோ சந்தர்ப்பச் சூழலால் நேர்ந்துவிட்டது” எனக் கூறினார்.
பா.ம.க-வில் யாருக்கு அதிகாரம்?
ராமதாஸ் உடனான மோதலைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூரில் இரண்டாவது நாளாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “மருத்துவர் நமது குலசாமி. அவர் கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால உழைப்பும் தொலைநோக்கு சிந்தனையும் சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்போம்” எனக் கூறினார்.
கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, கிளை நிர்வாகிகளை நியமனம் செய்வது ஆகியவற்றை மூன்று வாரங்களில் முடிக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அன்புமணி அறிவுறுத்தினார்.
விரைவில் மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அன்புமணி, “அடுத்தடுத்து வேலைத் திட்டங்கள் உள்ளன. நீங்கள் தான் கட்சி. இந்தக் கட்சி என் சொத்து கிடையாது. எனக்கு அடிபணிந்தவர்களாக உங்களை ஒருநாளும் நினைக்க மாட்டேன்” எனக் கூறினார்.
“பொதுக்குழுவால் முறையாக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உங்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் நான்” எனக் கூறிய அவர், “கட்சியில் விதிகள் உள்ளன. தலைவர் தான் நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்; பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றெல்லாம் உள்ளது” எனக் கூறினார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மாலனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “கட்சிக்குள் ராமதாஸுக்கு ஆதரவு இல்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நிர்வாகிகள் கூட்டம் ஆகியவற்றில் இதைப் பார்க்க முடிந்தது. சாதிக்குள் ராமதாஸுக்கு செல்வாக்கு உள்ளதா என்பது கேள்விக்குறி” எனக் கூறுகிறார்.
இந்தக் கூற்றை மறுக்கும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “ராமதாஸை எதிர்த்து அன்புமணியால் வெற்றி பெற முடியாது. கட்சி என்பது அன்புமணி தான். ஆனால், வாக்காளர்களும் தொண்டர்களும் ராமதாஸ் பக்கம் உள்ளனர்” எனக் கூறுகிறார்.
இருவரும் இணைந்து செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாகக் கூறும் ரவீந்திரன் துரைசாமி, “பா.ம.க உள்கட்சி விதிகளின்படி தலைவருக்குத் தான் நியமன அதிகாரம் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்து சென்று தனது பலத்தை நிரூபிப்பது தான் அன்புமணியின் முன் உள்ள வாய்ப்பாக உள்ளது” என்கிறார்.
உள்கட்சி விதிகளின்படி நியமன அதிகாரம் என்பது அன்புமணியிடம் உள்ளதாகக் கூறுகிறார், பா.ம.க மூத்த நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மாவட்ட தலைவர்களில் 108 பேரும் மாவட்ட செயலாளர்களில் 108 பேரும் (அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட எண்ணிக்கை) அன்புமணியின் பக்கம் உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் அவர் பக்கம் நிற்கின்றனர்” எனக் கூறுகிறார்.
“ராமதாஸின் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை அன்புமணி முன்னெடுத்துச் செல்வார். வேறு வேறு காரணங்களுக்காக நிர்வாகிகளை ராமதாஸ் மாற்றுவதை தடுத்து நிறுத்தும் வகையில் அன்புமணி நிர்வாகிகளை நியமிக்கிறார்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வருமா?
பட மூலாதாரம், Ramadoss/Facebook
குடும்ப கட்சிகள் பலவும் இப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்கொள்வது வழக்கமாக உள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.
“மோதல்களில் இருந்து சில கட்சிகள் மீள முடியாமல் பலவீனமடைந்து உடைந்துபோன நிகழ்வுகளும் உள்ளன. அதற்குப் பல உதாரணங்கள் உள்ளன” எனக் கூறும் மாலன், சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ்-அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் தேவேகவுடா- குமாரசாமி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களை மேற்கோள் காட்டினார்.
“உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்னை என்பது கட்சிப் பிரச்னையாக மாறுகிறது” எனக் கூறுகிறார் மாலன்.
“அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்தால் சில இடங்களில் வெல்ல முடியும் எனவும் அதன்மூலம் கட்சி நிர்வாகிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என ராமதாஸ் நினைக்கிறார். ஆனால், அன்புமணியின் நிலைப்பாடு வேறாக உள்ளது” என்கிறார் மாலன்.
“ஓர் அரசியல் சக்தியாக மாற வேண்டும் என அன்புமணி நினைக்கிறார். இந்த விவகாரத்தில் இருவரின் கண்ணோட்டமும் மாறியுள்ளது என்பதை தலைமுறை இடைவெளியாகவே பார்க்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், “பா.ம.க-வின் எதிர்கால தலைவர் அன்புமணி என்ற பிம்பத்தை செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் உடைத்துவிட்டார். இதன்பிறகு இருவரும் இணைந்து சென்றால் அது அன்புமணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்” எனக் கூறுகிறார், ரவீந்திரன் துரைசாமி.
பா.ம.க முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பா.ம.க வலிமையாக இருந்தால் தான் மரியாதை இருக்கும். இருவரையும் சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்து வருகிறேன்” எனக் கூறினார்.
இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறிய தீரன், “இருவரும் பொறுமையாக இருக்க வேண்டும். பா.ம.க இரண்டாக பிளவுபடுவதை தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். ராமதாஸின் வழிகாட்டுதலின்படி அனைவரும் செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.
வடமாவட்டங்களில் பின்னடைவா?
“சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் 9 மாதங்கள் உள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி மோதல் வடமாவட்டங்களில் அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்” என்கிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ராமதாஸை தவிர்த்துவிட்டு அன்புமணியை நம்பி யாரும் சட்டமன்றத் தேர்தலில் இடங்களை ஒதுக்குவதற்கு வாய்ப்பில்லை. அக்கட்சியின் தொண்டர்கள் பலரும் ராமதாஸ் பக்கம் நிற்கின்றனர்” எனக் கூறுகிறார்.
“கூட்டணி விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகளை பா.ம.க எடுத்ததால், அக்கட்சியின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது” எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் மாலன், “தேர்தல் நேரத்தில் பேரம் பேசுவார்கள் என்ற மனநிலையில் தான் மக்கள் ராமதாஸை பார்க்கிறார்கள்” என்கிறார்.
“ராமதாஸை முக்கிய அரசியல் சக்தியாக மக்கள் பார்க்கவில்லை” எனக் கூறும் அவர், “இந்த மோதலில் பெரும்பாலும் இரண்டாவது தலைமுறைதான் வெற்றி பெறுகிறது. அதற்கு அகிலேஷ் யாதவ், குமாரசாமி ஆகியோர் உதாரணங்களாக உள்ளனர்” எனக் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் ஜூன் 19 அன்று ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய மாலன், “அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் அன்புமணிக்கு ஓர் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் பா.ஜ.க பக்கம் அன்புமணி போனதாக ராமதாஸ் கூறுகிறார். இதன்மூலம் அன்புமணி மீது அ.தி.மு.கவுக்கு அதிருப்தியை உண்டாக்குவது அவரது நோக்கமாக இருக்கலாம்” என்கிறார்.
அதேநேரம், “பிரச்னைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிடும்” என, சோழிங்கநல்லூரில் (மே 31) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ வேதனைகள் உள்ளன. நம் கட்சியைப் போன்று எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் இல்லை. நாம் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும்” எனக் கூறினார்.
இதுதொடர்பாக, பா.ம.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “புயல் வருமா.. அமைதி ஏற்படுமா எனத் தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒன்று நடக்கத் தான் போகிறது. அன்புமணி அவரது பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு