• Sun. Jun 29th, 2025

24×7 Live News

Apdin News

“ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம் | Anbumani comments on VCK Congress affection with Ramadoss

Byadmin

Jun 28, 2025


சென்னை: “விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம் என்பது திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸை சுற்றி 3 தீய சக்திகள் உள்ளன. ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய். ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் இன்று (ஜூன் 28) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியது: “திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு?

வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது? என்றைக்காவது ஒருநாள் ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்? செல்வபெருந்தகைக்கு தற்போதைய திடீர் பாசம் ஏன் ஏற்பட்டது? திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்? இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி. இது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக ஐயா (ராமதாஸ்) ஐயாவாக இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு அவர் தெரிவித்தார். அவருக்கு பிறகுதான் நான் தலைவராக வேண்டும் என்று நான் அப்போதே முடிவு எடுத்துவிட்டேன். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். பாமக அவர் உருவாக்கியதுதான். ஆனால், வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தை போல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுய லாபத்துக்காக, அவரை பயன்படுத்தி கொள்கின்றனர். அது தெரிந்த பிறகுதான் நான் தலைவராக ஒப்புக்கொண்டேன்.

அவரை யாரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யக் கூடாது. அவர் சொல்லிதான் பாஜகவுடன் 2024-ல் கூட்டணி பேசினேன். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது, அவர் எதற்காக வந்தார் என்று நான் அவரிடம் கேட்டதற்கு, அவர் பத்திரிகை வைக்க வந்து சென்றதாக என்னிடம் தெரிவித்தார். அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்ல போகிறேன். அவர் சரி என்று சொல்லியதால்தான் பாஜகவினர் தைலாபுரம் வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. ஆனால், தற்போது அவர் இல்லை என்று மறுக்கிறார்.

ராமதாஸை சுற்றி 3 தீய சக்திகள் உள்ளன. கட்சியில் பயிர் எது, களை எது என்று தற்போது தான் தெரிந்தது. கட்சியில் முழு அதிகாரம் எனக்கு தான். 99 சதவீத கட்சியினரும் நம்மிடம் தான் உள்ளனர். கொள்ளை அடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார். ஆனால் அது அவரின் சிந்தனையில் நடைபெறுவது அல்ல.

36 வயதில் ஒருவரை பொதுச் செயலாளராக நியமித்தார்கள். கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. என்ன நடக்கிறது என்று எல்லோரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். கட்சி சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால், அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்று சட்டவிதி கிடையாது. கட்சியின் பொதுக்குழுவை நடத்துவதற்கும், கட்சியை நடத்துவதற்கும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ராமதாஸ் பேட்டியில் பேசுவது அத்தனையும் பொய். கடந்த இரண்டு மாதமாக கட்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்று விட்டது. தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது ஊரின் முன்னாள் நேரலையில் பேசுவார்களா?

வீட்டுக்கு வந்த மருமகளை பொது வெளியில் யாராவது விமர்சனம் செய்வார்களா? உங்கள் மனைவியை யாராவது திட்டினால் உங்களுக்கு கோபம் வராதா? எனது மனைவி பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். ராமதாஸ் முன்பு போல் இல்லை. அப்படி இருந்திருந்தால், அப்படி பேசி இருப்பாரா? நான் பேசாமல் இருப்பதால், அவர்களுடைய கருத்து மட்டுமே மேலோங்குவது போல தோன்றுகிறது. தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும்.

நரேந்திர மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோருடன் கூட்டணி பேசியிருக்கிறேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்கிறாரோ அவருடன் எல்லாம் இத்தனை ஆண்டுகளாக நான் கூட்டணியை பேசி முடித்தவன். பாஜகவுடன் கூட்டணி வைக்க சொன்னதால் தான் கூட்டணி பேசி முடித்தேன். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதாக அவர் பேசியது பொய். பாஜக எனக்கு மாமனா, மச்சானா… அவர்களுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று நான் சொல்வதற்கு.

25 ஆண்டுகளாக நான்தான் கூட்டணி பேசி வருகிறேன். அதிமுக உடன் கூட்டணி பேச வேண்டும் என்று சொன்னால் நான் அப்போதே பேசி இருப்பேன். அவர்தான் பாஜகவுடன் பேச சொன்னார். எல்லாம் பேசி முடித்து கூட்டணி எல்லாம் நிறைவடைந்த பிறகு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை எனக்கே தெரியாமல் நடைபெற்றது” என்று அன்புமணி கூறினார்.



By admin