0
பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் ஏ குழுவில் பங்குபற்றும் பாகிஸ்தான் அணியினர் இலங்கையை வந்தடைந்துள்ளளனர்.
உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவோம், ஆனால் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்ற நிபந்தனையுடன் இலங்கை வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு சல்மான் அலி அகா தலைவராக விளையாடுகிறார்.
செவ்வாய்க்கிழமை வரை தமது அணி ஓய்வு எடுக்கும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, நாளை நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் அயர்லாந்தை பாகிஸ்தான் சந்திக்கும் என தெரிவித்துள்ளது.


இலங்கையும் இந்தியாவும் கூட்டாக நடத்தும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 7ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய தினம் பாகிஸ்தான் தனது ஆரம்பப் போட்டியில் நெதர்லாந்தை எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்த்தாடும்.
பாகிஸ்தான் தனது இரண்டாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை மீண்டும் எஸ்எஸ்சி மைதானத்தில் பெப்ரவரி 12ஆம் திகதி எதிர்த்தாடும்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தானுக்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசாங்கம், பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ள அதன் பரம வைரியான இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை தடைசெய்தது. இந்த அறிவிப்பை பாகிஸ்தான் அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விடுத்தது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் தமது அணி விளையாடாது என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பாக ஐசிசி இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை.
பாகிஸ்தானை எப்படியாவது விளையாடச் செய்ய வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் ஐசிசி என்ன தீர்மானத்தை எடுக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
பாகிஸ்தான் தனது கடைசிப் போட்டியில் நமிபியாவை எஸ்எஸ்சி மைதானத்தில் பெப்ரவரி 18ஆம் திகதி சந்திக்கும்.
பாகிஸ்தான் குழாம்
பாபர் அஸாம், பக்கார் ஸமான், கவாஜா நபே, சாஹிப்ஸதா பர்ஹான், உஸ்மான் கான், சல்மான் அகா (தலைவர்), பாஹீம் அஷ்ரவ், மொஹம்மத் நவாஸ், சய்ம் அயூப், ஷதாப் கான், அப்ரார் அஹ்மத், நசீம் ஷா, சல்மான் மிர்ஸா, ஷஹீன் ஷா அப்றிடி, உஸ்மான் தாரிக்.





