பட மூலாதாரம், Pankaj Yadav
பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் போலி காவல்நிலையத்தை தொடங்கி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
காவல் நிலையத்தின் முகாம் அலுவலகத்தை தொடங்கி, பயிற்சியும் வேலையும் அளிப்பதாக கூறி மோசடி நடைபெற்றிருப்பது மாவட்டத்தின் மொஹானி பஞ்சாயத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிகார் கிராம் ரக்ஷா தள் மற்றும் ஹோம் கார்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி டிசம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025 இடையே இந்த பயிற்சி நடைபெற்றிருக்கிறது.
ஆனால், பூர்னியா காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேய கே. ஷர்மா, “போலி காவல்நிலையம் என்ற நிகழ்வு இல்லை. கிராம் ரக்ஷா தள்க்கு பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் 30 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ராகுல் குமார் ஷா இந்த பிகார் கிராம் ரக்ஷா தள்-உடன் தொடர்புடையவர்.”
கார்த்திகேய கே ஷர்மாவின் கூற்றுப்படி,”வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராகுல் சிலரை ஏமாற்றியிருக்கிறார். இதுவரை நாங்கள் இதுபோல் 25 புகார்களை பெற்றுள்ளோம். இந்த முழு விவகாரத்தில் உள்ளூர் தலைவரின் பங்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.”
பிரச்சனை என்ன?
பிகாரில், பூர்னியா மாவட்டத்தின் பேட்டாவ்னாவின் கஸ்பா காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட மொஹானி என்ற பஞ்சாயத்தில் செயல்படும் நடுநிலை பள்ளியில், டிசம்பர் 2024-ல் பிகார் மாநில தள்பதி, மற்றும் கிராம் ரக்ஷா தள் என்ற பேனருடன் ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏதேனும் அவசரநிலை ஏற்படும்போது பிகார் கிராம் ரக்ஷா தள் மற்றும் தள்பதி, கிராமப்பகுதிகளில் பணியாற்றுகின்றன. நெருப்பு, வெள்ளம், நோய்த் தொற்று, அமைதியை பராமரித்தல், கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற சூழல்களில் செயல்படக்கூடிய 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை கொண்டது.
வேலை தருவதாக தாங்கள் ஏமாற்றப்பட்டதாக, இந்த பயிற்சியை முடித்த இளைஞர்களும், இளம் பெண்களும் தற்போது புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மோசடியை எதிர்கொண்ட புகார்தாரர்கள் பலரிடம் பிபிசி பேசியிருக்கிறது.
பட மூலாதாரம், Pankaj Yadav
300 பேரை ஏமாற்றியிருக்கிறார்
23 வயதான சஞ்சனா குமார் பி.காம். படிக்கிறார். அவரும் கஸ்பா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சஞ்சனா சொல்கிறார், “சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன், ஆயிரத்து ஐநூறு ரூபாய் எங்களிடமிருந்து வாங்கப்பட்டது. பயிற்சி பெறுவதற்காக நாங்கள் சில நாட்கள் பள்ளிக்கும் (மத்ய வித்யாலயா, பேட்டானா) நாங்கள் சென்றிருந்தோம், கிராம் ரக்ஷா தள்ளுக்கு அங்கீகாரம் கிடைத்தால், எங்கள் அனைவருக்கும் அரசு வேலைகள் கிடைக்கும் என ராகுல் சொன்னார், ஆனால் இப்போது ராகுல் தலைமறைவாகிவிட்டர்.”
மற்றொரு பெண் கூறினார், “எங்களுக்கு அவரை தேசிய மாணவர் படையிலிருந்து தெரியும். அவரை எங்கள் சகோதரராக கருதினோம். கடந்த ஒருவருடத்தில் அவர் சுமார் 300 பேரை ஏமாற்றியிருக்கிறார். அவர் பட்டமே பெறாவிட்டாலும், அரசு பள்ளியில் ஒரு காவல்நிலையத்தை அமைத்து காவல் ஆய்வாளர் போல் சுற்றிக்கொண்டிருந்தார்,”
“அவர் என் அம்மாவிற்கும் ஒரு சீருடையை கொடுத்து அவருக்கு அரசு வேலை கிடைத்திருப்பதாக கூறினார். ஆனால் என் அம்மா ஒருமுறை கூட ஊதியம் எதையும் பெறவில்லை. சீருடையின் மீது BGRD (Bihar Gram Raksha Dal) என எழுதப்பட்டுள்ளது. அவர் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை கேட்பார், சம்பளம் 22 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என சொல்வார். அவர் என்னையும் சேரச் சொன்னார். ஆனால் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.”
வேலை வாங்கித் தருவதாக கூறி பாகல்பூர், சுபால், பூர்னியா, கதிஹர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை ராகுல் ஏமாற்றியிருப்பதாக பலர் கூறுகின்றனர்.
ஒரு நபர், நரேஷ்குமார் ராய் சொல்கிறார், “வேலையில்லாமல் இருந்தபோது நாங்கள் கிராம ரக்ஷா தள் படிவத்தை பூர்த்தி செய்திருந்தோம், அதன்பின்னர் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ராகுலிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் கடன்வாங்கி அவருக்கு ரூ.1500ம் பிறகு ரூ.2500ம் கொடுத்தோம்.முதலில் எங்களுக்கு வேலைகிடைக்கும் என சொன்ன அவர், பின்னர் எங்களை மிரட்டத் தொடங்கினார்.
கஸ்பா காவல்நிலையத்தின் ‘மோஹானி’ கிளை
பட மூலாதாரம், Pankaj Yadav
உள்ளூர் பத்திரிகையாளர் சையத் தஹ்சீன் அலி சொல்கிறார்,”பேட்டானாவில். துணை சுகாதார நிலைய கட்டடத்திற்கு ஒரு பக்கத்தில் பள்ளி நடந்துகொண்டிருக்கிறது, மற்றொருபுறம், ஒரு சிறிய கட்டடம் காலியாக உள்ளது. இந்த காலி கட்டடத்தை ராகுல் ஒரு காவல்நிலையமாக மாற்றியிருக்கிறார்.”
“இது ஒருவகையில் கஸ்பா காவல் நிலையத்தின் மோஹானி (பஞ்சாயத்து) கிளை போன்றது. அங்கு அவர் காவல்துறை சீருடையில் அமர்ந்துகொண்டு வேலையில்லாத மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார். கிராம மக்களுக்கு தன்னுடைய அதிகாரத்தை காட்டுவதற்காக அவர் காவலர்களுடன் செல்ஃபி எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.”
சுமார் 25 வயதான ராகுல் குமார் ஷா பற்றி தெரிய வந்திருக்கும் ஒரே தகவல் அவர் என்.சி.சி உறுப்பினராக இருந்திருக்கிறார், என்சிசி மூலமே பெரும்பாலானவர்களுடன் தொடர்புகொண்டிருக்கிறார்.
பிகார் ராஜ்ய தள்பதி மற்றும் கிராம் ரக்ஷா தள் பேனர் ஒன்றை 2024 டிசம்பரில் பேட்டானவின் மத்ய வித்யாலயாவில் ராகுல் அமைத்திருக்கிறார். புகைப்படத்தில் இந்த பேனரின் கீழ் கஸ்பா தானா என எழுதப்பட்டுள்ளது.
காலியான பள்ளியில் ஒரு மாத பயிற்சியை அளித்தது ராகுல்தான். 2025 ஜனவரி 26ஆம் தேதி பயிற்சி காலம் முடிந்ததாக சொல்லப்படும் நிலையில், அவர் மோஹானி கிராமத்தின் தலைவர் ஷியாம்சுந்தர் ஓரனை விருந்தினராக முறைப்படி அழைத்திருந்தார்.
பயிற்சியை முடித்ததாக கூறப்படும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை ஷியாம்சுந்தர் ஓரன் கெளரவித்தார். பயிற்சிக்கு பிறகு ராகுல் குமார் அனைவருக்கும் முறையாக அடையாள அட்டைகளையும் வழங்கியிருக்கிறார்.
“எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ராகுல் வந்து பயிற்சியளித்தார். காவல்நிலையத்திற்கு தெரியும் என நான் நினைத்ததேன். அவர் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு மூன்று மணி நேரம் பயிற்சியளித்தார். நான் தான் தலைவர், என்னை யாராவது ஏதாவது நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் நான் செல்வேன்.” என ஷியாம் சுந்தர் ஓரம் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதைபோன்ற நடவடிக்கைகளை பள்ளியில் மேற்கொள்ள அனுமதி உண்டா? இதைக்குறிது அவர் சொல்கிறார்,”முகாம் நடத்துவற்கான அரசின் கடிதத்தை, கிராம பள்ளியின் ஆசிரியர் கேட்டுக்கொண்டே இருந்தார், ஆனால் ராகுல் அதை தரவே இல்லை. அவர் பாட்னாவிலிருந்து வருவதாகக் கூறி தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். பயிற்சியின் மொத்த காலகட்டத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய எதுவும் நடக்கவில்லை.”
ராகுல் குமார் ஷா தலைமறைவாகிவிட்டர். காவல்துறையினர் தலைவர் ஷியாம்சுந்தர் ஓரமின் பங்கையும் விசாரித்து வருகின்றனர்.
‘கண்காட்சியில் காவல் பணியும் வாகன சோதனையும் செய்யப்பட்டது’
பட மூலாதாரம், Pankaj Yadav
பயிற்சி அளித்த பின் ஒரு கண்காட்சியில் பணி அளித்ததுடன் பல இடங்களில் வாகன சோதனையும் நடத்த வைத்திருக்கிறார் ராகுல்.
உள்ளூர் பத்திரிகையாளர் பங்கஜ் யதவ் சொல்கிறார், “ராகுல்குமார் யாதவ் மோஹானி பகுதியில் வாகன சோதனை, மதுபான சோதனை, ரோந்து போன்ற பணிகளை மேற்கொள்ள வைப்பார். ஒருவர் ஹெல்மெட் இல்லாமல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிக்கிக்கொண்டால் 400 ரூபாய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டால் அது பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பேட்டானாவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே கஸ்பா காவல்நிலையம் இருந்த நிலையில் இவையெல்லாம் நடந்துகொண்டிருந்தன.
பாதிக்கப்பட்ட சஞ்சீவ் குமாரும், ராகுல் குமாரிடமிருந்து கிடைத்த அடையாள அட்டையை பயன்படுத்தி கண்காட்சியில் இரண்டு நாட்கள் பணியாற்றியிருக்கிறார்.
அவர் சொல்கிறார், “ராகுல் என்சிசியில் எங்கள் சீனியராக இருந்தார். கிராம் ரக்ஷா தள்ளிற்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தேர்வு இருக்காது, நேரடி பணி நியமனமாக இருக்கும் என்றும் எங்களது சாதி காரணமாக எங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்றார். முதலில் நாங்கள் அவருக்கு ரூ.2,500 கொடுத்தோம், அதன் பின்னர் அடையாள அட்டைக்காக ரூ.200 கொடுத்தோம். நாங்கள் சீருடையும் தைத்துக்கொண்டோம். அவர் எங்களை கண்காட்சியில் இரண்டுநாட்கள் பணியாற்ற வைத்தார் ஆனால் எங்களுக்கு எந்த கடிதத்தையும் தராமல் தலைமறைவாகிவிட்டார்.”
வேலைவாங்கி தருவதாக கூறி ராகுல் ஒரு வாட்ஸ்அப் குழுவையும் உருவாக்கியிருந்தார்.
பாதிக்கப்பட்ட அனில் குமாரின் கூற்றின்படி, “அவர் எங்கள் அனைவரிடமிருந்து ரூ.10,000 பெற்றுக்கொண்டு எங்களை ரூ.15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியிருக்கிறார். எங்களுக்கு உண்மை தெரியவந்தபோது, நாங்கள் அவரது வீட்டுக்கு சென்று எங்களது பணத்தை திருப்பி தரும்படி கேட்டோம். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.”
ஆனால், பூர்னியா காவல் கண்காணிப்பாளர் கே சர்மா இதை மறுத்துவிட்டார்.
அவர் சொல்கிறார்,”ஒரு கண்காட்சியில் எப்படி வேலையிருக்கமுடியும்? இதுவரை வாகன சோதனை அல்லது மதுபானசோதனை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி வேலைவாங்கித் தருவதாகக் கூறி அவர்கள் மக்களிடமிருந்து இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் பெற்றிருக்கிறார்கள்,”
அதே நேரம் பிகார் கிராம் ரக்ஷா தள் மற்றும் தள்பதியோடு தொடர்புடையவர்கள் நீண்ட காலமாக அரசு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தள்பதி சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவி ரஞ்சன் சொல்கிறார், “அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை. ஆனால் பிகார் முழுவதும் கிராம் ரக்ஷா தள் மற்றும் தள்பதி மறுபணியமர்த்தல் பெயரால் மோசடிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.”
இது பிகாரில் போலி காவல்நிலையம் பற்றிய முதல் செய்தி அல்ல.முன்னதாக 2022ஆம் ஆண்டு, இதே போன்றதொரு வழக்கு பங்கா மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் ஆய்வாளர் முதல் வாட்ச்மேன்வரை அனைவரும் போலிகளாக இருந்தனர்.
2024ஆம் வருடம், ஜமுயி-யின் சிகன்ட்ரா காவல் நிலைய எல்லைப் பகுதியில் ஒரு போலி ஐபிஎஸ் அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு