ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.
வழக்கமாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுகிழமையன்று நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்நிலையில், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பின் காரணமாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
நேற்று மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், இன்று காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. கடும் குளிரான காலநிலை நிலவியது. அவலாஞ்சி மற்றும் அப்பர்பவானியில் கன மழை பெய்தது. கூடலூர் தாலுகா ஓவேலி ஆறோட்டுபாறை பகுதியில் செல்வம் என்பவரது வீடு மழையால் சேதமடைந்தது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 143 மி.மீட்டர் மழை பதிவானது. சேரங்கோடு 79, அப்பர் பவானி 72, தேவாலா 69, ஓவேலி 43, செருமுள்ளி 29, கூடலூர் 18, பாடந்தொரை 17, நடுவட்டம் 16, எமரால்டு 12, பார்சன்சன்ஸ் வேலி 11, குந்தா 3, ஊட்டி 2.7, கிண்ணக்கொரை 2, கோத்தகிரி 2, குன்னூர் 2, கிளன்மார்கன் 1 மி.மீ., மழை பதிவானது.