5
மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சுவையாக சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா என்று யோசிக்கிறீர்களா?
அப்படியென்றால், வீட்டில் இருக்கும் ப்ரெட் துண்டுகள், உருளைக்கிழங்கு, காய்கறிகள் இருந்தாலே போதும் – ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மொறுமொறு ப்ரெட் ரோல் செய்து சாப்பிடலாம்.
இந்த ரோல் மிகவும் எளிதாக செய்யக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
குறிப்பாக காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால், அவர்கள் ரசித்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
ப்ரெட் – 15 துண்டுகள்
துருவிய சீஸ் – 2 கப்
பெரிய வெங்காயம் – 3 (நறுக்கியது)
கேரட் – 2
உருளைக்கிழங்கு – 4
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்வது எப்படி?
முதலில் கேரட், உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசித்த காய்கறிகளை அதனுடன் கலந்து சில நிமிடம் வதக்கி, எடுத்து ஆறவைக்கவும்.
குளிர்ந்த பின், அந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி, கையில் தண்ணீர் தடவி சற்று பிசைந்து வைக்கவும்.
ப்ரெட்டின் மேல் துருவிய சீஸ் தூவி, மசாலா உருண்டையை ஒரு பக்கம் வைத்து ரோல் போல சுருட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து, இந்த ப்ரெட் ரோல்களை பொன்னிறமாக மொறுமொறு வரப் பொரித்து எடுக்கவும்.
பரிமாறுவது
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ப்ரெட் ரோல் தயார்! மாலை நேரத்தில் சூடாகத் தக்காளி சாஸுடன் பரிமாறி சுவைக்கலாம்.