பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது, உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள மாவட்ட விரைவு நீதிமன்றம், “இது ஸ்பான்சர் செய்யப்பட்ட ‘லவ் ஜிஹாத்’ வழக்கு, இதில் வெளிநாட்டு நிதியின் பங்கு இருப்பதை நிராகரிக்க முடியாது என்று கூறியது.இந்த தீர்ப்பை கூடுதல் மாவட்ட நீதிபதி ரவி குமார் திவாகர் பிறப்பித்துள்ளார்.
மதத்தை மறைத்து திருமணம் செய்த வழக்கில் பரேலி விரைவு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கு பற்றி சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், ‘லவ் ஜிஹாத்’ என்பதற்கு நிலையான சட்ட வரையறை இல்லை என்று மத்திய அரசு கூறியது. 2020 ஆம் ஆண்டில், மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்போதைய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, அரசியலமைப்பின் 25 வது பிரிவை மேற்கோள் காட்டி, இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது என்று கூறியிருந்தார்.
‘லவ் ஜிஹாத்’ என்பதற்கு சட்டப்பூர்வ வரையறை இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகாரில், முகமது ஆலிம் என்ற நபர் முதலில் அவரது பெயரை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் தன்னை மதம் மாற வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், பரேலி போலீசார் ஐபிசி 376(2) (N), 323, 506 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ‘லவ் ஜிஹாத்’ விளக்கம்
பரேலி நீதிமன்ற நீதிபதி அவரது தீர்ப்பில், ‘லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
அந்தத் தீர்ப்பில், “மேற்கூறிய வழக்கின் பகுப்பாய்வின் மூலமாக, இந்த வழக்கு ‘லவ் ஜிஹாத்’ மூலம் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்வது தொடர்பானது என்பது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டார்.
இது `ஸ்பான்சர்ஷிப்’ மூலம் நடப்பதாகவும், இதில் வெளிநாட்டு நிதியுதவி இருப்பதை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் எழுதியுள்ளார். முழு சம்பவத்தின் பகுப்பாய்வும் ‘லவ் ஜிஹாத்’ முயற்சி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பில், ‘லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தையின் விளக்கத்தை நீதிமன்றம் வரையறுத்துள்ளது. அதன்படி, ‘லவ் ஜிஹாத்தில், முஸ்லிம் ஆண்கள், இந்துப் பெண்களை, திருமணம் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாற்ற திட்டமிடுகின்றனர்.’
இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் முதலில் காதலிப்பது போல் நடித்து, பின்னர் அந்த நபரை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மக்கள் தொகை விகிதத்தில் பெரும் மாற்றம் ஏற்படலாம் என்றும், அதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
“இந்தியாவில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.’’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
இது குறித்து இந்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
`மோசமான ஒருவரின் செயலால் ஒட்டுமொத்த சமூகமும் பழி சுமக்கிறது, களங்கத்திற்கு ஆளாகிறது ’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியான முகமது ஆலிம், மனுதாரரிடம் தனது பெயரை ஆனந்த் என்று கூறி ஏமாற்றி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் என்பதையும் இந்தத் தீர்ப்பு விவரித்துள்ளது.
பின்னர் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார். மேலும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தார். பின்னர் பல முறை அவரை வன்கொடுமை செய்தார்.
இந்த தீர்ப்பு குறித்து, லக்னௌ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனுஷ்ரேஷ்டா மிஸ்ரா கூறுகையில், “இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பானது. சட்டவிரோத மதமாற்ற வழக்கு அல்ல. நீதிபதி, இதை ‘லவ் ஜிஹாத்’ வழக்கு என்று குறிப்பிட்டு, பாலியல் வன்கொடுமைக்காக ஒரு முஸ்லிம் நபருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார். புகார்தாரர் தனது வாக்குமூலத்தை வாபஸ் பெற்றிருந்தாலும் கூட இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
“லவ் ஜிஹாத் மூலம் சட்டவிரோத மதமாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சில அராஜக பண்புகளால் மேற்கொள்ளப்படுகின்றன அல்லது செய்யப்படுகின்றன. இந்த குற்றங்களுக்கு அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் அல்லது சதியில் ஈடுபடுகின்றனர் என்றும் சொல்லலாம்.” என்று அவர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் புசல் அகமது அயூபி, “பரேலி கூடுதல் அமர்வு நீதிபதி வழங்கிய தீர்ப்பை சட்டம் மற்றும் நீதி அமைப்பில் இதுவரை இல்லாத ஒரு தனித்துவமான தீர்ப்பு. நன்கு கற்றறிந்த ஒரு நீதிபதி சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத இத்தகைய கருத்துகளை மட்டுமே முழு தீர்ப்பிலும் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் ஹதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வாதங்களை நிராகரித்துவிட்டது” என்று கூறுகிறார்.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட `வெளிநாட்டு நிதியுதவி’
கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகர் தனது தீர்ப்பில், “லவ் ஜிஹாத் மூலம் சட்ட விரோதமாக மதமாற்றம் செய்வதற்கு பணம் தேவைப்படுவதால், வெளிநாட்டு நிதியுதவி இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது. இந்த தீர்ப்பை டிஜிபி மற்றும் அரசு தலைமை செயலாளருக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அயூபி கூறுகையில், “ஒரு கற்றறிந்த நீதிபதி தனது நீதித்துறை தகுதிக்கு அப்பாற்பட்ட அரசியல் அறிக்கைகளின் அடிப்படையில் தனது தீர்ப்பை எழுதியுள்ளார்” என்றார்.
அயூபி மேலும் கூறுகையில், “இந்த தீர்ப்பு வழங்கும் போது, ஒரு கிரிமினல் வழக்கில் விரைவு நீதிமன்றமாக தீர்ப்பளிப்பதை நீதிபதி உணர்ந்திருக்க வேண்டும், சமூக நல மனு அல்லது பொதுநல மனுவை விசாரிக்கும் அரசியல் சாசன நீதிமன்றம் போன்று செயல்பட்டிருக்க கூடாது. ஆனால் அரசியல் சாசன நீதிமன்றங்கள் கூட இதுபோன்ற ஊக முடிவுகளை வழங்குவதில்லை.” என்றார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சைமா கான் கூறுகையில், “உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் லவ் ஜிஹாத், வெளிநாட்டு நிதி அல்லது பெரிய அளவிலான சர்வதேச சதி என்றெல்லாம் விளக்குவது பல சட்ட மற்றும் நெறிமுறை சிக்கல்களை எழுப்புகிறது. எந்தவொரு கிரிமினல் அல்லது சிவில் செயல்முறையிலும், ஆதாரத்தின் சுமை குற்றம்சாட்டப்பட்ட தரப்பினரின் மீது சுமத்தப்படுகிறது. லவ் ஜிஹாத், வெளிநாட்டு நிதியுதவி அல்லது சர்வதேச சதி போன்ற குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வமாக நிற்க வேண்டும் எனில் உறுதியான மற்றும் நம்பகமான ஆதாரங்கள் தேவை. முறையான விசாரணை மற்றும் ஆதாரம் இல்லாமல், அத்தகைய கூற்றுகள் சட்டப்பூர்வமாக தவறானவை.” என்று கூறுகிறார்.
சைமா கான் மேலும் கூறுகையில், “உறுதியான ஆதாரம் இல்லாமல் ஒரு தனிநபர் அல்லது சமூகத்தை குறிப்பிட்டு சர்வதேச சதி என்று குற்றம் சாட்டுவது தவறு. . இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு நபரும் நிரபராதி என்ற அனுமானத்திற்கு உரிமை உண்டு.” என்றார்.
புகார் கொடுத்த நபரின் கருத்து என்ன?
“இந்து அமைப்புகள் மற்றும் அவரது பெற்றோரின் அழுத்தத்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையின் போது புகார்தாரர் தெளிவாகக் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை நீதிபதி மறந்துவிட்டார்,” என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனுஷ்ரேஷ் மிஸ்ரா கூறினார்.
மாஜிஸ்திரேட் முன்னிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 164ன் கீழ் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்கள் தனது பெற்றோரின் அழுத்தத்தின் பேரில் கொடுக்கப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது புகார்தாரர் கூறியிருந்தார்.
மனுஷ்ரேஷ் மிஸ்ரா, புகார்தாரரின் சாட்சியத்தை நீதிபதி புறக்கணித்ததாகவும், “பாதிக்கப்பட்ட பெண் படித்த பெண்” என்பதால், அவரது பெற்றோரின் அழுத்தத்திற்கு அடிபணிய வாய்ப்பில்லை என்பதால், அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் கூறினார்.
மனுஷ்ரேஷ் மிஸ்ரா மேலும் கூறுகையில், “தீர்ப்பில் புகார்தாரரைப் பற்றிய தனது சிந்தனையை நீதிபதி வலுக்கட்டாயமாக திணித்துள்ளார்” என்றார்.
“பாதிக்கப்பட்ட பெண் பெற்றோருடன் வசிக்காமல், வாடகை வீட்டில் தனியாக வசிக்கும் போது, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்போது, அவர் கைகளில் ஆண்ட்ராய்டு போன் எப்படி வந்தது. வீட்டில் தனியாக இருக்கவும், சாப்பிடவும், உடுத்தவும், மொபைலில் பேசவும் அவருக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. நிச்சயமாக, மேற்கண்ட வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு சில நிதி உதவிகள் வழங்கப்பட்டு, இந்த நிதி உதவி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும், மேலும் மேற்கண்ட வழக்கு லவ் ஜிஹாத் மூலம் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கு.” இவ்வாறு தீர்ப்பில் உள்ளது.
தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலத்துக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்திலும் முரண்பாடு இருந்தாலும், அதைத் தவிர, ‘லவ் ஜிஹாத்’ குறித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஊகங்கள் என்று தான் கூற வேண்டும்” என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அயூபி கூறுகிறார். .
அயூபி மேலும் கூறுகையில், “எப்.ஐ.ஆர் ஆவணத்திலும், குற்றப்பத்திரிகையிலும், உத்தரபிரதேசத்தில் அமலில் உள்ள சட்டத்திற்குப் புறம்பாக மதமாற்ற தடைச் சட்டம், 2021 இன் எந்தப் பிரிவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் முக்கியமானது. ஆனால் அது பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சொன்னார்.
ரவிக்குமார் திவாகர் யார்?
பரேலியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரவிக்குமார் திவாகர், இதற்கு முன்பும் செய்திகளில் இடம்பிடித்தவர்.
முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டிய அவர், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துடன் ஆட்சிக்கு வரும் ஒரு மதவாதி என்பதற்கு அவர் சரியான உதாரணம் என்று கூறினார்.
முஸ்லிம் மத போதகர் தௌக்கீர் ரசா கான் வழக்கில், “இந்தியாவில் கலவரங்களுக்கு அரசியல் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை திருப்திப்படுத்துவதில் ஈடுபடுவதே காரணம். இது அந்த மதத்தை சேர்ந்தவர்களின் மனஉறுதியை பெரிதும் அதிகரிக்கிறது. கலவரத்தை ஏற்படுத்துவார்கள், பிறகு அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவர்களின் ஒரு முடி கூட பாதிக்கப்படாது”. `என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த கருத்தை நீக்குமாறு கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, இது தனிப்பட்ட கருத்துகளைக் கொண்ட பொருத்தமற்ற கருத்து என்று கூறினார்.
2022 ஆம் ஆண்டில், திவாகர், கியான்வாபி மசூதிக்குள் இந்து தெய்வங்கள் இருப்பதைக் கண்காணிக்க நீதிமன்ற ஆணையரை வீடியோகிராஃபி செய்ய அனுமதித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு