27
லிபியாவின் முன்னாள் அதிபர் முயம்மர் கடாஃபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைஃப் அல்-இஸ்லாமின் அணியை மேற்கோளிட்டு லிபிய செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒருகாலத்தில் தந்தையின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சைஃப் அல்-இஸ்லாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஏ.எஃப்.பி செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், ஸிண்டான் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நான்கு பேர் கொண்ட ஆயுதக் குழு புகுந்து தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார். இருப்பினும், இந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், சைஃப் அல்-இஸ்லாமின் சகோதரி வேறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளார். லிபிய தொலைக்காட்சியில் பேசிய அவர், சைஃப் அல்-இஸ்லாம் லிபியா மற்றும் அல்ஜீரியா எல்லைப் பகுதியில் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
தந்தை முயம்மர் கடாஃபியின் மரணத்திற்கு பிறகு, சைஃப் அல்-இஸ்லாம் நீண்ட காலமாக லிபிய அரசியல் சூழலில் செல்வாக்கு மிக்க நபராக கருதப்பட்டார்.
1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்த முயம்மர் கடாஃபி பின்னர் மக்களெழுச்சியின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 1972ஆம் ஆண்டு பிறந்த சைஃப் அல்-இஸ்லாம், 2000ஆம் ஆண்டிலிருந்து கடாஃபியின் ஆட்சி முடியும் வரை மேற்கு நாடுகளுடனான லிபியாவின் உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
அதேசமயம், அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கியதில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. கடாஃபியின் மரணத்திற்குப் பிறகு, ஸிண்டான் நகரில் செயல்பட்ட ஆயுதக் குழுவினரால் சுமார் ஆறு ஆண்டுகள் அவர் சிறைபிடிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.