இஸ்ரேல் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ படையெடுப்பை இந்த வாரம் தொடங்கியது. லெபனானில் இஸ்ரேலிய படையினர் 8 பேர் உயிரிழந்ததாக நேற்று இஸ்ரேல் அறிவித்தது.
இந்த மோதலில் இஸ்ரேலிய டாங்கிகளை அழித்துள்ளதாகவும் இஸ்ரேலிய படைகளை பின்வாங்க வைக்க போதுமான பலமும் ஆயுதங்களும் இருப்பதாகவும் ஹெஸ்பொலா தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் வான்வழி தாக்குதல்கள் தொடரும் என வியாழக்கிழமை காலை இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது. தெற்கு பெய்ரூட்டில் ஹெஸ்பொலாவின் கோட்டையான தஹியேவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
மத்திய பெய்ரூட்டில் நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெவித்துள்ளது.
மத்திய பெய்ரூட்டில் நடத்திய தாக்குதல் தவிர்த்து தெற்கு பெய்ரூட்டில் மேலும் ஐந்து வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெய்ரூட்டின் பஷோரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஹெஸ்பொலாவுக்கு தொடர்புடைய மருத்துவ முகாம் செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான தற்போதைய மோதல், கடந்த நாற்பது ஆண்டுகளாக வேரூன்றியுள்ள நன்கு வரையறுக்கப்பட்ட இரு கருத்துகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.
லெபனானிலிருந்து ஹெஸ்பொலா தங்கள் நாட்டுக்கு விடுக்கும் அச்சுறுத்தலை அழிக்க உறுதிகொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேசமயம், இஸ்ரேலை அழிக்கும் முயற்சியாக, இஸ்ரேலிய நிலைகளின் மீது ஹெஸ்பொலா குறிவைத்துவருகிறது.
கடந்த 11 மாதங்களாக இருபுறமும் நடைபெறும் எல்லை கடந்த தாக்குதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்தன.
தற்போது 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேலின் படையெடுப்பு நிகழ்ந்து வருகிறது.
இவ்வளவுக்கும் மத்தியில் லெபனான் ராணுவம் எங்குள்ளது, இத்தாக்குதல் நிகழாமல் இருக்க ராணுவம் என்ன செய்தது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
லெபனானை பாதுகாப்பது யார்?
இஸ்ரேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட ஹெஸ்பொலாவும் இந்த தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிப்பதால், லெபனான் ராணுவம் விலகி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
சொல்லப்போனால், எதிரி நாட்டிடம் சண்டையிடுவது ராணுவத்தின் வேலை. இஸ்ரேல் லெபனானின் அதிகாரபூர்வ எதிரியாக உள்ளது.
ஆனால், லெபனான் ராணுவத்திடம் இத்தகைய மோதலுக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
மேற்கத்திய நாடுகளின் நிதி மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆயுத உதவியால் இஸ்ரேல் ராணுவம் மிகவும் வலுவாக உள்ளது.
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மேம்பட்ட ஆயுதங்களை லெபனான் வாங்குவதை தடுக்கும் வகையில், லெபனானில் அமைந்த அடுத்தடுத்த அரசாங்கங்களுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு பெய்ரூட் உரக் கிடங்கு வெடிப்பினால் ஏற்கெனவே நிலவிய தீவிர பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமானது. இது, லெபனான் ராணுவத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. நிதி பற்றாக்குறையால் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டனர், மேலும் மிக அடிப்படையான எரிபொருள் போன்ற தேவைகளை பூர்த்திசெய்வதும் பாதிக்கப்பட்டது.
லெபனான் ராணுவத்திற்கு அமெரிக்கா உதவி
ஹெஸ்பொலாவால் மிகப்பெரும் எதிரியாக கருதப்படும் அமெரிக்கா, லெபனான் ராணுவத்திற்கு நிதி உதவி செய்யும் முக்கிய நாடாக இருப்பது, பிரச்னையை இன்னும் அதிக சிக்கலாக்கியுள்ளது.
ஒரு சமயத்தில், லெபனானின் ராணுவ வீரர்களின் மிகக்குறைந்த சம்பளத்திற்கு கூட அமெரிக்கா நிதியுதவி அளித்தது.
ஆனால் இந்த நிதியுதவி- வாகனங்கள், துணைக்கருவிகள் மற்றும் தனிப்பட்ட ஆயுதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் உதவிகளுடன் இதனை ஒப்பிட முடியாது.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கு எதிரான லெபனான் ராணுவத்தின் செயலற்ற தன்மை, பிராந்தியத்தில் உள்ள மற்ற அனைத்து தேசிய ராணுவத்தையும் போலவே இருப்பதாக சில பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“லெபனான் ராணுவத்திற்கோ அல்லது எந்த அரபு ராணுவத்திற்கோ இஸ்ரேலிய எதிரியை எதிர்கொள்ளும் திறன் இல்லை” என்று லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் (Unifil) முன்னாள் லெபனான் அரசாங்க ஒருங்கிணைப்பாளரான ஜெனரல் மௌனிர் ஷெஹாடே கூறுகிறார்.
“இஸ்ரேலிய ராணுவத்துடன், காஸாவில் நடந்ததைப் போன்ற கொரில்லா போரைத் தவிர வேறு எந்த சண்டையும் பொருத்தமானது அல்ல.”என்கிறார் அவர்
லெபனான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற ஜெனரல் கலீல் எல் ஹெலோ கூறுகையில், “லெபனான் ராணுவத்தின் பங்கு உள்நாட்டில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதாகும், ஏனெனில் இன்று உள்நாட்டில் ஆபத்து நிலவுகிறது” என்றார் அவர்.
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொலை செய்ததைத் தொடர்ந்து, லெபனான் ராணுவம் “பதற்றமானவை” என்று கருதப்படும் பல பகுதிகளில் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளது, அங்கு நாட்டில் பல்வேறு குழுக்களிடையே பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை “தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்க குடிமக்களை” வலியுறுத்தும் ஒரு அறிக்கையை லெபனான் ராணுவம் வெளியிட்டது, நாட்டில் உள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக வலியுறுத்தியது.
லெபனான் ராணுவம் இஸ்ரேலுடன் சண்டையிடுகிறதா?
தற்போதைய தாக்குதலில் லெபனான் ராணுவத்திற்கு ஏதேனும் பங்கு உள்ளதா? இல்லை.
எனினும், ராணுவம் தெற்கில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படும் போர் நிறுத்தத்திற்கு பிறகு தெற்கில் ராணுவத்தை பெரியளவில் நிலைநிறுத்தும் வாய்ப்பு உள்ளது, இதை லெபனான் பிரதமர் சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் பல சவால்களும் உள்ளன. இதற்கு அதிகளவில் ராணுவத்தினர் தேவை, அதற்கு அதிக பணமும் தேவை. ஆனால், அதற்கான நிதி ராணுவத்திடம் தற்போது இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு