லெய்செஸ்டர் (Leicester) நகரின் டி மாண்ட்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு (De Montfort University) அருகில் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்தில் 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞன் ஒருவரை கொலைக் குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (04) மாலை சுமார் 05 மணியளவில், ஆக்ஸ்போர்டு தெரு மற்றும் போனர்ஸ் வீதியில் (Oxford Street and Bonners Lane) இரண்டு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறையினர் கருதுகின்றனர். இதில் கத்திக்குத்துக்கு உள்ளான அந்த இளைஞன் தெருவிலேயே மயங்கி விழுந்தார். மருத்துவ ஊழியர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து லெஸ்டர்ஷையர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், சாட்சிகளிடம் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த இளைஞனுக்கு உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள காவல்துறை, இன்னும் காவல்துறையிடம் பேசாத சாட்சிகள் இருந்தால் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து லெய்செஸ்டர் நகர மையத்தில் ஆக்ஸ்போர்டு தெரு உட்பட பல முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லெய்செஸ்டர் ராயல் மருத்துவமனைக்குச் (Leicester Royal Infirmary) செல்லும் நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் நேரத்தை ஒதுக்கித் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்கள் அடையாள அட்டையை (ID) காண்பித்த பிறகு வாகன நிறுத்துமிடத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் நாட்களில் கூடுதல் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று லெய்செஸ்டர் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post லெய்செஸ்டரில் கத்திக்குத்து: 20 வயது இளைஞன் உயிரிழப்பு; 18 வயது இளைஞன் கைது appeared first on Vanakkam London.