சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயிலாக 1.12 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.631 கோடியே 80 லட்சத்து 27,703 நிவாரணம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மேற்பார்வையில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு தலைவர் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் வழிகாட்டுதல் பேரில் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, வி.லட்சுமி நாராயணன், பி.தனபால், முன்னாள் நீதிபதிகள் எம்.
ஜோதிராமன், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் 6 அமர்வுகளும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி,ஆர்.விஜயகுமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும் அமைக்கப்பட்டன. இதே போல, மாவட்டம், தாலுகா அளவில், நீதிபதிகள் தலைமையில் மாநிலம் முழுதும் 499 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந்த அமர்வுகள் முன் பட்டியலிடப்பட்ட 1 லட்சத்து 12 ஆயிரத்து 561 வழக்குகளை இரு தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி நீதிபதிகள் முடிவுக்கு கொண்டு வந்ததனர். இதன் வாயிலாக ரூ.631 கோடியே 80 லட்சத்து 27,703 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.