படக்குறிப்பு, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 6 மணி நேரமாக மேற்கு நோக்கி நகர்ந்தது. இன்று (அக்டோபர் 25) அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறக்கூடும். இது, 26-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாறக்கூடும்.
தமிழ்நாடு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
பட மூலாதாரம், IMD website
படக்குறிப்பு, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி & கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
அக்டோபர் 25
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.
அக்டோபர் 26
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.
அக்டோபர் 27
திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிகவும் கனமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.
அக்டோபர் 28
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஆகவே அக்டோபர் 25 முதல் 28 வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.