பட மூலாதாரம், @bdbnp78
வங்கதேசத்தில் அவாமி லீக் இல்லாத தேர்தலும் பிஎன்பி ஆட்சிக்கு வருவதும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டன.
இப்போது இந்தியா தாரிக் ரஹ்மானையும் அவரது வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வருவதையும் வரவேற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது போல் தெரிகிறது.
அவாமி லீக் இல்லாமல் வங்கதேசத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கும் இந்தியா எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
இந்தியா அவாமி லீக்கை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இது 2024 ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் எழுச்சியின் போது இந்தியாவின் நிலைப்பாடு மூலோபாய ரீதியாக தவறானது என்ற செய்தியைத் தருகிறதா?
இது வங்கதேச தேசியவாதக் கட்சியைப் (பிஎன்பி) பற்றியது மட்டுமல்ல.
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் அமீர் ஷபிகுர் ரஹ்மானையும் சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன.
ஜமாஅத் உடனான சந்திப்பை பகிரங்கமாக அறிவிப்பது ஒரு திருப்புமுனையாகும்.
பிப்ரவரி 12-ஆம் தேதி வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 13-ஆம் தேதியே வாழ்த்து தெரிவிக்கத் தயங்கவில்லை. எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்ட பிறகு, பிரதமர் மோதி தாரிக் ரஹ்மானை தொலைபேசியில் அழைத்து பேசினார்.
தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். வங்கதேசத்தின் புதிய பிரதமரை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோதி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் தாரிக் ரஹ்மான் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை.
பட மூலாதாரம், @ihcdhaka
தாரிக் ரஹ்மானின் குழப்பம்
பிரதமர் மோதியின் இந்த நிலைப்பாட்டிலிருந்து, இந்தியா தாரிக் ரஹ்மான் மீது நெருக்கத்தைக் காட்டுவதோடு, இடைக்கால அரசாங்கத்தின் போது ஏற்பட்ட கசப்பான உறவுகளிலிருந்து வெளியே வர விரும்புவதும் தெளிவாகிறது.
ஆனால் தாரிக் ரஹ்மானிடமிருந்து இதுவரை அத்தகைய நெருக்கம் பகிரங்கமாக வெளிப்படவில்லை.
ஒரு நாள் கழித்து, பிஎன்பி கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு பிரதமர் மோதியின் பதிவை மறுபதிவு செய்து தனது நன்றியைத் தெரிவித்தது. இருப்பினும், தாரிக் ரஹ்மானின் சமூக ஊடகக் கணக்குகளில் அவை பகிரப்படவில்லை.
அதற்கு, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் செயல்படாமல் இருந்தார் என்று அர்த்தமல்ல. அவர் டாக்காவில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
பிப்ரவரி 15 அன்று, வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் அமீர் ஷபிகுர் ரஹ்மானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கிலிருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டது.
அந்தப் பதிவில், பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் அவரை அவரது குடியிருப்பு அலுவலகத்தில் சந்தித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, பிஎன்பி-யின் முன்னாள் கூட்டாளியாக இருந்தது, ஆனால் இந்தத் தேர்தலில் அதன் எதிரியாகப் போட்டியிட்டது. ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காததால், பல விஷயங்களில் அது இந்தியாவிற்கு எதிரான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள், பிஎன்பி அரசாங்கம் இந்தியாவின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்ற எண்ணத்தை இந்தியாவுடனான உறவில் ஏற்படுத்துவது தாரிக் ரஹ்மானுக்கு எளிதானதாக இருக்காது என்று கருதுகிறார்கள்.
தெற்காசிய அரசியலை நிருபமா சுப்ரமணியம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். தாரிக் ரஹ்மானை இந்தியா ஏன் வெளிப்படையாக வரவேற்கவில்லை என்று பிபிசி இந்தி அவரிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு நிருபமா சுப்ரமணியம் பதில் கூறுகையில், “தாரிக் ரஹ்மானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடந்த காலம் சிறப்பானதாக இல்லை. 2001 முதல் 2006 வரை காலிதா ஜியா வங்கதேசப் பிரதமராக இருந்தபோது, அப்போதைய வங்கதேசத்திற்கான இந்திய தூதர் என்னிடம் தாரிக் ரஹ்மான் அவர்களின் சஞ்சய் காந்தி என்று கூறினார்.”
ஆனால் இப்போது இந்தியாவிற்கு தாரிக் ரஹ்மானைத் தவிர சிறந்த வழி ஏதுமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்தியா முன்பு கூறியிருந்தது, இப்போது அங்குள்ள மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தியா அவரை வரவேற்க மட்டுமே முடியும்” என்றார்.
பட மூலாதாரம், @bdbnp78
ஜமாஅத்தின் சவால்
உண்மையில், வங்கதேச அரசியலில் இருந்து ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் வெளியேறிய பிறகு, பி.என்.பி ஒரு மையவாதக் கட்சியாகப் பார்க்கப்படுகிறது.
பிஎன்பி ஒரு ஜமாத் போன்ற அமைப்பாக இருக்க முடியாது, ஏனெனில் தாரிக் ரஹ்மானின் தந்தை ஜியா-உர்-ரஹ்மானும் வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர். ஜமாத் அமைப்பைப் போலல்லாமல், பிஎன்பி விடுதலைப் போரை நிராகரிக்கவில்லை.
ஷேக் ஹசீனாவைப் போலல்லாமல், பிஎன்பி விடுதலைப் போராட்டம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
இருப்பினும், ஜமாத் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இந்த சமநிலை எளிதானதாக இருக்காது. ஜமாத் இஸ்லாத் பாதையை நோக்கிச் சென்றால், அந்தச் சமநிலையைப் பேணுவதில் பிஎன்பி சிரமங்களை எதிர்கொள்ளும்.
இதுகுறித்து நிருபமா சுப்ரமணியம் கூறுகையில், “ஜியா-உர்-ரஹ்மானும் தன்னை ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவே கருதினார். ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கும் ஜியா-உர்-ரஹ்மானுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க மோதல், வங்கதேச விடுதலையை முதலில் அறிவித்தது யார் என்பது பற்றிய பிரச்னை தான். ஜியா-உர்-ரஹ்மான் தான் முதலில் அறிவித்ததாக பி.என்.பி-யும் அதன் ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். இதன் காரணமாக பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. வங்கதேசத்தை நிறுவியவர் யார் என்பதிலும் சர்ச்சை நிலவுகிறது. ஆனால் மறுபுறம், ஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்தது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஷேக் ஹசீனா கையாண்டவாறு தாரிக் ரஹ்மானால் ஜமாத் அமைப்பைக் கையாள முடியாது. இந்த முறை தேர்தல் அரசியலில் ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஜமாத் தலைமையிலான கூட்டணி 77 இடங்களை வென்றுள்ளது. வங்கதேசத் தேர்தலில் இந்தியா ஒரு முக்கிய விஷயமாக இருந்தது.
ஷேக் ஹசீனாவை அதிகாரத்திலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்திய மாணவர்களின் தேசிய குடிமக்கள் கட்சி, இந்தியாவை வெளிப்படையாக விமர்சித்ததுடன் ஜமாத் அமைப்புடன் கூட்டணியும் வைத்திருந்தது. மறுபுறம், தேர்தல் முழுவதும் தாரிக் ரஹ்மான் எந்த நிலையிலும் இந்தியாவுக்கு எதிரானவராகத் தெரியவில்லை.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையப் பேராசிரியர் மகேந்திர பி. லாமா கூறுகையில், ஜமாத் அமைப்பு இந்தியாவிற்குப் பிரச்னையாக மாறினால், அது பிஎன்பி-க்கும் பிரச்னையாக மாறும் என்று தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
தாரிக் ரஹ்மானின் வெளியுறவுக் கொள்கை
இதுகுறித்து பேராசிரியர் லாமா கூறுகையில், “ஜமாத் அமைப்பு இந்தியாவிற்கு எந்த அளவிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதோ, அதே அளவு அச்சுறுத்தலை அது பிஎன்பி-க்கும் ஏற்படுத்தும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்போது வங்கதேசத்தில் மூன்றாவது கட்சி என்று எதுவும் இல்லை. பிஎன்பி மற்றும் ஜமாத் அமைப்புகளை ஒரே அடியில் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்திவிட முடியாது. ஜமாத் மற்றும் பிஎன்பி ஆகிய இரண்டும் இணைந்தே ஷேக் ஹசீனாவை அகற்றியுள்ளன. ஜமாத் மற்றும் பிஎன்பி ஒன்றுக்கொன்று எதிராக நிற்கும், ஆனால் அதற்கு கால அவகாசம் எடுக்கும்” என்கிறார்.
சற்று பொறுத்திருங்கள், அவாமி லீக்கும் பிஎன்பி-க்கு ஆதரவளிக்கும் என்று பேராசிரியர் லாமா கூறுகிறார்.
பிப்ரவரி 15 அன்று தனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
அப்போது, இந்தியாவுடனான உறவுகள் குறித்து கேட்கப்பட்டபோது, “எங்கள் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம், இது வங்கதேசம் மற்றும் வங்கதேச மக்களின் நலனுக்கானது. வங்கதேசம் மற்றும் வங்கதேச மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் எங்களது வெளியுறவுக் கொள்கையை நாங்கள் தீர்மானிப்போம்” என்றார் ரஹ்மான்.
சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற பிராந்திய நாடுகளுடனான உறவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், வங்கதேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏதேனும் ஒன்று வங்கதேசத்தின் நலனுக்கு உகந்ததாக இல்லையென்றால், இயற்கையாகவே எங்களால் அதைத் தொடர முடியாது. பரஸ்பர நலன்களே எங்களின் முதல் முன்னுரிமையாக இருக்கும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.
இதன் பொருள் தாரிக் ரஹ்மான் இந்தியா பற்றி வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கிறார் என்பதாகும். கங்கை நீர் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது, அதை புதுப்பிக்க ஒரு புதிய ஒப்பந்தம் தேவைப்படும்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு சாதகமானது என்று தொடர்ந்து விமர்சித்து வரும் பிஎன்பி எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆட்சியில் இருந்தபோது பிஎன்பி அதை ஒருபோதும் ரத்து செய்யவில்லை. இப்போது, பிஎன்பி அதை மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும். ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் போது இந்தியாவுடன் கையெழுத்தான பல ஒப்பந்தங்கள் ஒருதலைப்பட்சமானவை என்றும் அவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் பிஎன்பி கருதுகிறது.
பட மூலாதாரம், @hamidullah_riaz
தாமதித்த இந்தியா
இதுவரை இந்தியாவுடனான உறவு சார்பு நிலையில் இருந்ததாக வங்கதேசம் கருதினால், நாம் இப்போது ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உறவு நிலைக்குத் தயார் என்று இந்தியா தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று பேராசிரியர் லாமா கூறுகிறார்.
இதுகுறித்து நிருபமா சுப்ரமணியம் கூறுகையில், “தாரிக் ரஹ்மான் எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு சலுகைகளை வழங்குகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் எதையும் பகிரங்கமாகச் செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஏதேனும் ஒப்பந்தம் எட்டப்பட்டால் கூட, தான் இந்தியாவுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டதாகத் தோன்றும் வகையில் தாரிக் ரஹ்மான் தன்னைக் காட்டிக்கொள்ள முடியாது. அவர் அவ்வாறு செய்தால், வங்கதேசத்தில் சிக்கல்களைச் சந்திப்பார். வங்கதேசத்தின் மக்கள் கருத்து இந்தியாவுக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன்” என்றார்.
ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகியவுடனேயே இந்தியா இப்போது செய்யும் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் மகேந்திர பி. லாமா கூறுகிறார்.
மேலும், “வங்கதேச மக்கள் மத்தியில் இந்தியாவின் பிம்பம் எதிர்மறையாக மாறியுள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் மற்றும் பிஎன்பி ஆகியோரிடம் இந்தியா ஒத்துழைப்புக்கான கரத்தை நீட்டுகிறது. எந்தவொரு நாட்டிலும் உள்ள ஒரு மக்கள் செல்வாக்குள்ள அரசாங்கம், தனது சொந்த மக்கள் ஆணைக்கு எதிராக உறவுகளை உருவாக்க விரும்பாது. இந்தியா இப்போது சரியானதைச் செய்கிறது, ஆனால் தாரிக் ரஹ்மான் அதே அளவு நெருக்கத்துடன் பதிலளிப்பார் என்பது இன்னும் சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது” என்றும் பேராசிரியர் மகேந்திர லாமா குறிப்பிட்டார்.
பிஎன்பி-யின் வெற்றி, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான மிகவும் சிக்கலான இருதரப்பு அரசியல் உறவுகளின் புதிய யுகத்தின் தொடக்கமாக அமையும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க்கின் ஆசிய-பசிபிக் பொருளாதாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் பிஸ்வாஸ் கூறுகையில், “பிஎன்பி தலைமையின் கீழ், வங்கதேசம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவுகளை வலுப்படுத்தும். இந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் அரசியல் போட்டியை இந்தியா கையாள வேண்டியிருக்கும்” என்று தெரிவிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு