வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா இன்று (30-12-2025 செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேச தேசியவாதக் கட்சியின் ஊடகப் பிரிவு அவரது மரணத்தை ஃபேஸ்புக் வாயிலாக அறிவித்தது.
“பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியா இன்று அதிகாலை 6 மணிக்கு, ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலமானார்,” என்று வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 25-ஆம் தேதி லண்டனிலிருந்து டாக்கா திரும்பினார். அவர் திரும்பிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, கலீதா ஜியா தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.
பல மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கலீதா ஜியா டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மாத தொடக்கத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது உடல்நலனுக்காகப் பிரார்த்தனை செய்ததுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்தார்.
கலீதா ஜியா நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வங்கதேச அரசியலில் ஈடுபட்டுள்ளார். தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிஎன்பி கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார்.
1981-ல் வங்கதேசத்தின் அதிபராக இருந்த ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். கலீதா ஜியா வங்கதேசத்தில் பல கட்சி ஜனநாயகத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பேகம் ஜியா 1991-ல் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரானார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர் 2006-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். பிஎன்பி கடந்த மூன்று தேர்தல்களைப் புறக்கணித்துள்ளது. 2024-ல் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்திற்கு கலீதா ஜியா ஆதரவளித்தார். பிஎன்பி தற்போது வங்கதேசத்தின் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, அடுத்த ஆண்டு தேர்தல்களில் அது ஆட்சிக்கு வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது கலீதா ஜியா சிறையில் இருந்தார். அவரது மகன் தாரிக் ரஹ்மானும் பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டார், ஆனால் முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம் கலீதா மற்றும் அவரது மகனை விடுவித்தது.
கலீதா ஜியா அரசியல் பிரவேசம்
1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வங்கதேசத்தின் சுதந்திர போராட்டத் தலைவர் மற்றும் முதல் பிரதமரான ஷேக் முஜிபுர் ரஹ்மான் அதிருப்தி இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடன், குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் கொலையுண்டனர்.
இந்தச் சம்பவம் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படுகொலைகள் வங்கதேசத்தில் இராணுவ ஆட்சியின் தொடக்கத்தைக் குறித்தன; குறிப்பாக 1976 முதல் 1981 வரை ஜியா-உர்-ரஹ்மான் தலைமையிலும் (இவரும் பின்னர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்), பின்னர் 1982 முதல் 1990 வரை ஹுசைன் முஹம்மது எர்ஷாத் ஆட்சியின் கீழும் இராணுவ ஆட்சி நடைபெற்றது.
ஜியா-உர்-ரஹ்மானின் படுகொலைக்குப் பின்னரே கலிதா ஜியா அரசியலில் நுழைந்தார்.